தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான அனுஷ்கா, பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு கிட்டத்தட்ட காணாமல் போனதுபோல் இருக்கிறார். பாகுபலிக்குப் பின் சில படங்களில் நடித்தாலும் எதுவும் அவருக்குக் கைகொடுக்கவில்லை.
இதற்கிடையே, தன் உடல் எடையைக் கூட்டிய அனுஷ்காவைத் தயாரிப்பாளர்கள் மறக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது.
இறுதியாக, அனுஷ்கா நடித்த ’மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படம் சுமாரன வெற்றியைப் பதிவு செய்தது.
இந்நிலையில், அனுஷ்கா மலையாளப் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இப்படத்தில், 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கத்தனார் என்கிற பாதிரியாரின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயசூரியாவும் களியங்காட்டு நீலி என்கிற கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்காவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மாந்திரீகம், ஏவல் பின்னணியில் இக்கதை உருவாகவுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு அனுஷ்கா நடித்த ஹாரர் படமான அருந்ததி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் அவர் நடிப்பிற்கும் பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது. தற்போது, அனுஷ்கா 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பேய்ப் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.