தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து, நாளை (மார்ச்.20) வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. 27-ஆம் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். வருகிற 28-ஆம் தேதி மனு பரிசீலனையும், ஏப்ரல் 19-ல் தோ்தலும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதியின் பழைய விடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதில், விஜய் சேதுபதி, “அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே தயவு செய்து சிந்தித்து வாக்களியுங்கள். வாக்களிப்பது மிக முக்கியம். எப்போதும், நம் ஊருக்கு ஒரு பிரச்னை, நம் மாநிலத்துக்குப் பிரச்னை என்பவர்களுடன் சேருங்கள். நம் ஜாதிக்கு, மதத்திற்கு ஒரு பிரச்னை என்பவர்களிடம் ஒருபோதும் சேராதீர்கள். அப்படி சொல்பவர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருப்பார்கள். நாம்தான் மாட்டிக்கொள்வோம்” எனக் கூறியுள்ளார்.
தற்போது, இந்த விடியோவைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.