லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி, கேரளத்தில் படத்தின் படப்பிடிப்பு நிகழ்ந்தபோது தன் ரசிகர்களை விஜய் சந்தித்து எடுத்துக்கொண்ட விடியோ இணையத்தில் வைரலானது. தற்போது இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இதில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு காட்சியில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் கடைசி படம் இது என்பதால், நீண்ட நாள்களாக அவருடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்ட சிவகார்த்திகேயன், தனிப்பட்ட முறையில் கோட் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற விருப்பத்தை இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இது உண்மையா.. இல்லை புரளியா.. என்பதை வெங்கட் பிரபுதான் தெளிவுபடுத்த வேண்டும்!