
சின்னத்திரை நடிகை பானுமதி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் சின்னத்திரையைச் சேர்ந்த நடிகரோ அல்லது நடிகையோ நடிப்பது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு சின்னத்திரை நடிகை பானுமதி பிக்பாஸ் - 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தமுறை பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் நடித்த சரவணன் பிக்பாஸ் போட்டியாளராக இடம்பெற்றிருந்தார்.
பிக்பாஸ் 8 போட்டியாளர்கள்
விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதேபோன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பிரபலங்கள் தற்போது வெள்ளித்திரையில் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் இந்த நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் என்பது ரசிகர்கள் கருத்தாக உள்ளது.
கடந்த 7 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவந்த நடிகர் கமல்ஹாசன் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதில்லை என்ற அறிவித்திருந்தார். அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகியிருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகினார்.
இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் - 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளதாகத் தெரிகிறது. இதற்கான முன்னோட்ட (புரோமோ) விடியோ படப்பிடிப்பு புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் விஜய்சேதுபதி கலந்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்ச்சியை சரத்குமார் அல்லது சூர்யா தொகுத்து வழங்குவார்கள் என சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவின. இதேபோன்று ரம்யா கிருஷ்ணனோ அல்லது நயன்தாராவோ தொகுத்து வழங்குவார்கள் என்றும் கூறப்பட்டது.
பிக்பாஸ் -8-ல் சின்னத்திரை நடிகை
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் போட்டியாளர்கள் 100 நாள்களுக்கு உள்ளே தங்கியிருந்து, அவர்களின் தனிப்பட்ட குணங்களை பரிசோதிப்பதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பாடல், நடனம், நடிப்பு, சமூக சேவை என பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் பிக்பாஸ் இல்லத்தில் போட்டியாளர்களாக பங்கேற்பார்கள். அந்தவகையில் சின்னத்திரையில் இருந்து இந்த ஆண்டு நடிகை பானுமதி பங்கேற்கவுள்ளதாகத் தெரிகிறது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடர் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் போன்ற தொடர்களில் பானுமதி நடித்து வருகிறார்.
அடிப்படையில் நடனக் கலைஞரான பானுமதி, ஆரம்ப காலக்கட்டத்தில் மேடையில் நடனமாடி தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். மேடை நடனத்தின்போது, உடன் நடனமாடிய நபரையே காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
15 வயதிலேயே இவர்களின் திருமணம் நடைபெற்றது. நடனம் கலைஞராக வாழ்க்கை சென்றுகொண்டிருக்கையில் திடீரென இவரின் கணவர் இறந்தார். இரு மகன்கள் உள்ளனர். ஒருவரை பொறியியல் பட்டதாரியாக்கியுள்ளார்.
தனது மகன்களை பெருமைப்படுத்த காத்துக்கொண்டிருக்கும் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி சரியான மேடையாக இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.