இயக்குநர் ஷங்கரின் துணை இயக்குநராக இருந்து தனது முதல் படமான ‘ராஜா ராணி’ மூலம் பிரபலமானவர் இயக்குநர் அட்லி. அடுத்து நடிகர் விஜய்யுடன் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். பின்னர் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தினை இயக்கினார்.
ஜவான் திரைப்படம் ரூ.1140 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. அடுத்து ரூ.3000 கோடி வசூலிக்கும் படத்தினை இயக்க உள்ளதாக கூறியிருந்தார். நடிகர் விஜய், நடிகர் ஷாருக்கானை வைத்து படமெடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதையும் படிக்க: நடிகர் நானிக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்த கவின்: காரணம் என்ன?
ராஜா ராணி படத்தில் இருந்து கடைசியாக வெளியான ஜவான் படம் வரை அட்லி பல படங்களை காப்பியடித்து எடுக்கிறார் என்ற குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் வைக்கப்படுகிறது. ஆனால் சட்ட ரீதியாக எதுவும் நிரூபணமாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன், “நாம் அட்லியை கொண்டாட வேண்டும். இங்கிருந்து பாலிவுட் சென்று 1200 கோடி ரூபாய் வசூலிக்கும் அளவுக்கு படமெடுப்பது சாதாரண விஷயமல்ல. அங்கிருப்பவர்களாலே அதை செய்ய முடியவில்லை. அதனால்தான் இங்கிருந்து அவர் செல்கிறார். அவரை எளிமையாக விமர்சிக்கிறார்கள். இதே மாதிரி வேறொரு மொழியில் யாராவது இருந்தால் அங்கிருக்கும் மக்கள் அந்த இயக்குநரை பாராட்டுவார்கள். ஆனால் இங்கு அது நடப்பதில்லை. மாறாக அவதூறுகளை வீசுகிறார்கள். அட்லி இன்னும் கொண்டாடப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயனின் அயலான் படம் பொங்களுக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.