புகழ்பெற்ற நடிகர் ஆர். ரவிக்குமார் (75) சென்னையில் இன்று காலமானார்.
நடிகர் ஆர். ரவிக்குமார் கேரளத்தின் திரிச்சூரில் பிறந்தார். இவர் மலையாளத் திரைப்படமான ’லக்ஷப் பிரபு (1968) படத்தின் மூலம் திரைத் துறையில் அறிமுகமானார். பின்னர், உல்லாச யாத்திரா (1975) என்ற மலையாளப் படத்தில் நாயகனாக நடித்தார்.
கே.பாலச்சந்தர் இயக்கிய ‘அவர்கள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ரவிக்குமார் பகலில் ஓர் இரவு, யூத், ரமணா, லேசா லேசா, சிவாஜி போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் கதாநாயகன், துணை நடிகர் பாத்திரங்களில் நடித்த ரவிக்குமார் சின்னத் திரையிலும் பிரபலமான நடிகராக இருந்தார்.
இயந்திரப் பறவை, ஜன்னல், கண்ணெதிரே தோன்றினாள், சித்தி, செல்வி போன்ற சின்னத் திரை தொடர்களிலும் இவர் நடித்திருக்கிறார்.
புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவிக்குமார் இன்று காலை 10. 30 மணியளவில் காலமானார். இதனை, அவரது மகன் உறுதிப்படுத்தியுள்ளார்.
வளசரவாக்கம் அருகே சின்ன போரூர் பகுதியில் பிபிசி சிட்டி பார்க் குடியிருப்பு வளாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் ரவிக்குமாரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
திரைத் துறையைச் சேர்ந்தவர்கள் ரவிக்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.