
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித் குமார், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
திடீர் உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அஜித் குமார் இன்று (ஏப். 30) காலை அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தில்லியில் பத்ப பூஷண் விருதைப் பெற்றுக்கொண்டு நேற்று மாலை சென்னைக்குத் திரும்பிய அஜித் குமாருக்கு, உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அஜித் குமார் அனுமதிக்கப்பட்டிருந்தார். வழக்கமான மருத்துவ பரிசோதனை காரணமாக அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அஜித் வீடு திரும்பினார் எனத் தெரிகிறது.
முன்னதாக, தில்லியில் இருந்து திரும்பிய பிறகு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அஜித் குமார், விருது பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி என்றும், அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல், விரைவில் சந்தித்துப் பேசுவோம் எனக் குறிப்பிட்டிருந்தார். விருது பெற்ற பிறகு ஒரு சில ஆங்கில ஊடகங்களுக்கு அஜித் குமார் நேர்காணல் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ஒசகா திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகராக அஜித், லியோ படத்துக்கு 6 விருதுகள்!