தவெக தலைமையிலான தமிழகத்தின் கூட்டணி அமைச்சரவை சமூகநீதியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவதாகக் கூறி, தவெக அரசுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தவெக தலைமையிலான கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சரவைகள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து, தவெக அரசுக்கு ஆதரவளித்த விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கும் தலா ஒரு அமைச்சரவை இடம் ஒதுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விசிக சார்பில் வன்னி அரசு சமூகநீதித் துறை அமைச்சராகவும், ஐயூஎம்எல் சார்பில் ஷாஜகான் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சராகவும் இன்று (மே 22) பதவியேற்றுக்கொண்டனர்.
இதன்மூலம், தமிழகத்தில் முதல்முறையாகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளதற்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ள தவெக அரசுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“சமூகநீதியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தனது அரசின் முதல் அமைச்சரவையை ஒரு கூட்டணி அமைச்சரவையாக வடிவமைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய்க்கும் எனது நன்றிகளையும் பெரும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் பெரும் எதிர்பார்ப்போடு இந்த அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் இளம்தலைமுறை அமைச்சர்களுக்கும் பெரும் கனவோடு இடம்பெற்றிருக்கும் பட்டியலின மற்றும் சிறுபான்மை அமைச்சர்களுக்கும், பெரும் இலக்கோடு இணைந்திருக்கும் கூட்டணிக் கட்சி அமைச்சர்களுக்கும் என் வாழ்த்துகளையும் பிரியங்களையும் பகிர்ந்துகொள்கிறேன். மக்கள் பணிகள் சிறக்கட்டும்” எனக் கூறியுள்ளார்.
Summary
Director Mari Selvaraj has extended his wishes to the TVK government.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









