‘ஜெயில்’ திரைப்படம் எப்படி இருக்கிறது? திரை விமர்சனம்
‘ஜெயில்’ திரைப்படம் எப்படி இருக்கிறது? திரை விமர்சனம்

‘ஜெயில்’ திரைப்படம் எப்படி இருக்கிறது? திரை விமர்சனம்

சென்னையின் பூர்வகுடி மக்களை சென்னைக்கு வெளியே குடியமர்த்தும் அரசும், அதனைத் தொடர்ந்து அவர்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை குறித்தும் தடுமாற்றத்துடன் ஜெயில் திரைப்படம் பேசியிருக்கிறது.

சென்னைக்கு வெளியே மறுகுடியமர்வு செய்யப்பட்ட மக்களின் அவலங்களை பதிவு செய்ய முயற்சித்திருக்கிறது ஜெயில் திரைப்படம்.

சென்னையின் பூர்வகுடி மக்களை சென்னைக்கு வெளியே குடியமர்த்தும் அரசும், அதனைத் தொடர்ந்து அவர்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை குறித்தும் தடுமாற்றத்துடன் ஜெயில் திரைப்படம் பேசியிருக்கிறது.

காவிரி நகரில் காஞ்சா விற்பனை செய்யும் இரு குழுக்களிடையே ஏற்படும் பிரச்னையும், அதில் காவல்துறையும், அரசியல் கட்சியும் வகிக்கும் அங்கமுமே ஜெயில். கஞ்சா விற்கும் தனது நண்பன் ராக்கி கொலை செய்யப்பட அதன்மூலம் கர்ணாவின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களே ஜெயில் திரைப்படத்தின் திரைக்கதை.

கர்ணாவாக வரும் ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். கதாநாயகியாக வரும் அபர்ணதி காவிரி நகர் பெண்ணாக தனது பாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார். அவரின் நண்பர்களாக வரும் கலை, ராக்கி ஆகியோரைப் பாராட்டலாம்.

காவிரி நகரின் இயல்பை சிறப்பாகவே காட்சிக்கு காட்சி கடத்தியிருக்கிறார் கணேஷ் சந்திரா. “காத்தோடு காத்தானேன்...” பாடல் முணுமுணுக்கும் ரகம். அதேசமயம் அவசியமற்ற பல பாடல்கள் திரைக்கதையின் வேகத்தை குறைக்கின்றன. 

திரைப்படத்தின் முதல்பாகத்தில் காட்சியமைப்புகளின் மூலம் கதையை விளக்க இயக்குநர் முயற்சித்திருந்தாலும் அழுத்தமற்ற காட்சிகள் படத்திற்கு தொய்வைக் கொடுப்பதை மறுப்பதற்கில்லை.

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் மக்களின் வலிகளைப் பதிவு செய்ய முயற்சித்துள்ள இயக்குநருக்கு பாராட்டுகள் தெரிவிக்கும் அதேவேளையில் அதை இன்னும் அழுத்தமாக கையாளவில்லையோ என தோன்றாமல் இல்லை.

குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு என்றாலே கஞ்சா போதைப் பொருள் என பொதுபுத்தியில் பதிவாகியிருக்கும் நிலையில் அவற்றை மறுப்பதற்கான அல்லது அவற்றிற்கான புறக்காரணங்களை விளக்குவதில் ஜெயில் வெற்றி பெறவில்லை.

கர்ணாவாக வரும் ஜி.வி.பிரகாஷ் திருடனாக பாத்திரம் வகித்தாலும் அதற்கான காரணமோ அல்லது நியாயமோ எதுவும் வடிவமைக்கப்படவில்லை. இதே சிக்கல் படத்தில் வரும் இதர பாத்திரங்களுக்கும் பொருந்தும். இரண்டாம் பாதியில் நண்பனை மீட்கப் போராடும் கர்ணா காவல்துறை அதிகாரியின் உதவியை நாடுவதும்,அவரின் நோக்கத்தை அறிந்ததும் அவரைப் பழிவாங்குவதுமாக இருக்கும் காட்சிகள் ஓரளவிற்கு கை கொடுத்துள்ளன. 

பல விஷயங்களை பேச வாய்ப்பிருந்தும் அவற்றை தவறவிட்டிருக்கிறது ஜெயில். பேச விரும்பிய சிக்கலின் நோக்கம் முக்கியமானது என்பதால் ஜெயிலை தவறவிடத் தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com