குற்றாலத்தில் களிப்பு; சாலையில் தேவை விழிப்பு!
குற்றாலத்தில் சீசன் களைகட்டத் தொடங்கிவிட்டது. திகட்டத் திகட்டக் குளித்து மகிழ்வதற்காக மக்கள் கூட்டம் குற்றாலத்தை ஆக்கிரமிக்கும் காலம் இது. இந்த குளுகுளு சீசனை அனுபவிக்க சுற்றுலாத்துறை, சுற்றுலா ஆர்வலர


குற்றாலத்தில் சீசன் களைகட்டத் தொடங்கிவிட்டது. திகட்டத் திகட்டக் குளித்து மகிழ்வதற்காக மக்கள் கூட்டம் குற்றாலத்தை ஆக்கிரமிக்கும் காலம் இது.
இந்த குளுகுளு சீசனை அனுபவிக்க சுற்றுலாத்துறை, சுற்றுலா ஆர்வலர்களை இருகரம் கூப்பி வரவேற்கும் நிலையில், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் களிப்புடன் குளித்துச் செல்ல, சாலையில் விழிப்புடன் பயணிக்க முன்வர வேண்டும்.
தென்காசி பகுதியைச் சேர்ந்த சிலர் சென்ற வாரம் மாலை பழையகுற்றாலம் அருவியில் குளித்து விட்டு, ஆட்டோவில் வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குளித்துவிட்டு வருவதாகக் கூறிச்சென்ற இவர்களின் அகால இறப்பு, அந்தக் குடும்பத்தினருக்கு எத்தனை இழப்பு என்பதை அந்தக் குடும்பத்தினர் மட்டும்தான் அறிவார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த குற்றாலத்தில், ரம்மியமான சூழலில், கொட்டும் அருவியில் குளித்து மகிழ தமிழகம் மட்டுமல்ல,வெளிமாநிலங்களிலிருந்தும், அண்டை நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் காலம் இந்த குளுகுளு காலம்.
இவர்களில் பெரும்பாலானோர் குற்றாலத்துக்கு சாலைப் போக்குவரத்து மூலமே பயணிக்கின்றனர். குற்றாலத்துக்கு ரயிலில் வரும் பயணிகளைவிட கார், வேன், பேருந்து, சொகுசு வாகனங்கள் போன்ற சாலைப் போக்குவரத்து வாகனங்கள் மூலம் வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கைதான் அதிகம். இப்படிக் குற்றாலத்தில் குளிக்க வருபவர்களில், பலர் குடும்பத்துடன் வருகை தந்தாலும், பெரும்பாலும் நண்பர்களுடன் குற்றாலம் வருவதையே பலரும் விரும்புகின்றனர்.
குடும்பத்துடன் பயணிப்பவர்களைவிட நண்பர்களாக காரில் பயணித்து வருபவர்களுக்குத்தான் விபத்தை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் அதிக அளவு இருக்கின்றன என்பதை எல்லோரும் அறிவார்கள்.
எனவே, நண்பர்கள் வட்டங்களுடன் காரில் பயணிப்பவர்களே அதிக கவனத்துடன் சாலையில் வரவேண்டும் என்பதை உணர்ந்து வர வேண்டும்.
உற்சாகக் குளியல் போடுவதற்காக வருகை தருபவர்களில் பலர் உற்சாக பானம் அருந்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அப்படிப்பட்டவர்கள் காரை ஓட்டுவதை முற்றிலும் தவிர்ப்பது நலம் பயக்கும்.
குற்றாலத்தில் குளிப்பது உடலையும், உள்ளத்தையும் மகிழ்விக்கும் என்று உற்சாகத்துடன், மனைவி, குழந்தைகளிடம் கூறிவிட்டு நண்பர்களுடன் குளிக்க வருபவர்கள், தனக்காக வீட்டில் பல ஜீவன்கள் காத்திருக்குமே என்பதைச் சற்று நினைத்தாலே போதும், விபத்தின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விடும்.
தமிழகத்தின் வேறு சாலை மார்க்கங்களின் வழியாக வருகை தரும் பயணிகளைவிட, மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து குற்றாலம் வரும் வாகனங்களே அதிகம். விபத்தைத் தடுக்க, குற்றாலத்துக்குச் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் வாகனப் போக்குவரத்து சீர்செய்யப்பட வேண்டும்.
குறிப்பாக, மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து முதலுதவி வாகனங்களும், நடமாடும் மருத்துவ வாகனங்களும் அதிக அளவில் நிறுத்தப்பட வேண்டும்.
குறிப்பிட்ட இடைவெளியில் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், சமூகத் தொண்டு நிறுவனங்களின் ஆர்வலர்கள், என்எஸ்எஸ் மாணவர்கள், மருத்துவ உதவியாளர்கள் கொண்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட வேண்டும்.
இங்கு கண்டிப்பாக விடியோ கேமரா, வேகக் கட்டுப்பாட்டுக் கருவியும், மது அருந்தியுள்ளதைக் கண்காணிக்கும் கருவியும் பொருத்தப்பட வேண்டும்.
குளிப்பதற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மனஉளைச்சல் ஏற்படாத வகையில் இக்குழுவினர் வாகனங்களை முறையாகக் கண்காணித்து, போக்குவரத்தைச் சீர்செய்தால் குற்றால அருவிகளில் குளிக்கும்போது ஏற்பட்ட குளுமை என்றும் நினைவில் நிற்கும். இல்லை எனில், குற்றாலம் சென்றவர்களின் நினைவு மட்டும்தான் குடும்பத்தில் நீடித்திருக்கும்.
எனவே, சாலையில் விழிப்புடன் பயணிப்போம். விபத்தைத் தவிர்ப்போம். குடும்பத்தைக் காப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...