ஒரு தனியார் பேருந்து இருளைக் கிழித்துக்கொண்டு நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்தது. பெரும்பாலான பயணிகள் தூக்கக் கலக்கத்தில் இருந்தனர். பேருந்தின் ஒலிபெருக்கியில் திரைப்பாடல் ஒன்று அளவுக்கதிகமான சத்தத்தில் காதைக் கிழித்துக் கொண்டிருந்தது.
வயதான பயணி ஒருவர் தனக்கு வந்த அலைபேசி அழைப்பை செவிமடுக்க முடியாதவராகத் திணறினார். அருகே நின்றிருந்த பேருந்து நடத்துநரிடம் சற்றே பாடலின் சத்தத்தைக் குறைக்குமாறு வேண்டினார் அந்த முதியவர். நடத்துநரோ, சத்தம் குறைவாகத் தானிருக்கிறது என்று அசிரத்தையுடன் பதில் கூறிவிட்டு அகன்றார்.
பெரியவர் பாடலின் அதீத ஒலியால் அலைபேசியில் பேச முடியாமல் திணறினார். உடனே அவரருகே இருந்த மற்றொரு பயணி பெரியவருக்கு ஆதரவாக நடத்துநரிடம், பாடலின் சத்தத்தைக் குறைக்குமாறு கூறினார்.
அடுத்து நடந்தது தான் கொடுமை. ஓட்டுநரிடம் சென்ற நடத்துநர் ஏதோ கூற, உடனே அந்தப் பாடலின் சத்தத்தை மேலும் அதிகரித்துவிட்டார் ஓட்டுநர். அடுத்தவரை இம்சித்து மகிழும் சிலர் இருக்கவே செய்கிறார்கள்.
பெரும்பாலான பயணிகள் தூக்கத்தில் இருக்க, இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க ஆளில்லாமல் பயணம் தொடர்ந்தது. அந்தத் தனியார் பேருந்தின் நடத்துநரும் ஓட்டுநரும் ஏதோ சாதித்துவிட்டதுபோல இறுமாப்புடன் பேருந்தை இயக்கினர். இடையிடையே, ஒற்றைக்கையால் ஸ்டீயரிங்கைப் பிடித்துக்கொண்டு, பாடல்களை ரிமோட் கருவியால் மாற்றவும் செய்தார் ஓட்டுநர்.
உண்மையில், பேருந்தின் பயணிகள் அதன் சேவைக்கு நுகர்வோர்கள். நுகர்வோர் உரிமைகள் அந்த பேருந்துப் பயணிகளுக்கும் உண்டு. தனக்குத் தொந்தரவான அம்சம் சேவையில் தென்பட்டால் அதைத் தடுக்கும் உரிமை பயணிகளுக்குண்டு. ஆனால் பெரும்பாலான பயணிகள் இதை அறிந்திருப்பதாகத் தெரியவில்லை.
இந்தப் பேருந்தின் நடத்துநருக்கும் ஓட்டுநருக்கும் கூட பயணிகளின் மதிப்பு தெரியவில்லை. பேருந்தின் இயக்கம் தங்கள் பொறுப்பில் இருக்கும்போது அவர்கள் அதன் உரிமையாளர்களாகவே தங்களைக் கருதிக் கொள்வது தான் இந்த அலட்சிய மனோபாவத்திற்குக் காரணம்.
பயணிகளின் உரிமைகளை மட்டுமல்ல, செவிட்டுத்தன்மையை உருவாக்கும் ஒலிமாசு குறித்தும், மேற்படி பேருந்தின் நடத்துநரும் ஓட்டுநரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
60 டெசிபலுக்கு மேற்பட்ட ஒலியால் மனிதர்களின் காது உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுகின்றன; 140 டெசிபல் அளவுள்ள ஒலியை தொடர்ந்து கேட்டால் காது மந்தமாகி செவிட்டுத்தன்மை ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
நமது புலன்களில் மிகவும் நுட்பமானவை காதுகள். சராசரியாக 50 டெசிபல் ஒலியைக் கேட்பதற்கான வகையிலேயே அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலையில் இயங்கும் வாகனங்களின் இரைச்சல் அளவு 85 டெசிபல் இருப்பதாகக் கணிக்கப்படுகிறது.
அதுவே, பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு அவர்களை அறியாமலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் பேருந்தின் உள்ளே அதீத சத்தத்துடன் ஒலிபரப்பப்படும் பாடலின் விளைவை சொல்லத் தேவையில்லை.
அதீத ஒலியை, தொடர்ந்து கேட்பதால், செவித்திறன் இழப்பு, தூக்கம் பாதிப்பு, உட்செவியில் ரீங்காரம், நரம்புத் தளர்ச்சி போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
எனவேதான் வாகனங்களில் பொருத்தப்படும் அதிக ஒலி எழுப்பும் காற்றொலிப்பான்கள் போக்குவரத்துத் துறை அதிகாரிகளால் அகற்றப்படுகின்றன.
காற்றொலிப்பான்கள் மீது கவனம் செலுத்தும் அதிகாரிகள், பேருந்துகளில் பொருத்தப்படும் ஒலிபரப்பு சாதனங்கள் குறித்தும் சற்றே கவனம் செலுத்த வேண்டும். பேருந்துகளுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கொண்ட அவர்களால்தான் பயணிகளின் செவித்திறனைக் காக்க முடியும்.
பேருந்தில் இருந்து இறங்கும்போது மேற்படி நடத்துநரிடம், ஏன் இவ்வாறு பாடலை சத்தமாக ஒலிபரப்புகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில் தூக்கிவாரிப் போட்டது.
"நாங்கள் இரவு கண்விழித்து பேருந்தை இயக்குகிறோம். இவர்கள் சுகமாக பேருந்தில் தூங்கிவழிந்து, தாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தத்தைக் கூட முட்டாள்தனமாகத் தவற விடுகிறார்கள், அதனால்தான் பாடலை சத்தமாக வைக்கிறோம்' என்றார் நடத்துநர். நல்லவேளை நான் பயணத்தில் தூங்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.