அடித்தட்டு மக்களும் வங்கிகளும்

இந்தியாவில் நியாய விலையில், ஏழைகளுக்கு அத்தியாவசிய உணவுப்பொருள்கள், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருள்களை பகிர்ந்தளிக்கும் பொது விநியோக திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
Updated on
3 min read

இந்தியாவில் நியாய விலையில், ஏழைகளுக்கு அத்தியாவசிய உணவுப்பொருள்கள், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருள்களை பகிர்ந்தளிக்கும் பொது விநியோக திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. உணவுப் பாதுகாப்பு திட்டங்களுக்காக மட்டும் அரசாங்கம் தற்போது சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவிடுகிறது. உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் இது சுமார் ஒரு சதவீதமாகும்.

இத்திட்டங்களுக்கான செலவினங்களின் முழுப்பலன்கள், பயனாளிகளைச் சென்றடைவதில்லை என்பது யாவரும் அறிந்த உண்மையாகும். பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதிலும் பல குளறுபடிகள் அரங்கேறுகின்றன.

பல்லாயிரக்கணக்கான போலி குடும்ப அட்டைகள், ஒருவரே பத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளைப் பயன்படுத்துவது போன்ற முறையற்ற செயல்களால் மக்களின் வரிப்பணம் பல ஆயிரம் கோடி ரூபாய் வீணாகிறது.

உதாரணமாக, பொது விநியோகத்திட்டத்தின் கீழ், மானிய விலையில் ஏழைகளுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணையின் ஒரு பகுதி வெளிச் சந்தை (ஞல்ங்ய் ம்ஹழ்ந்ங்ற்) விற்பனைக்கு முறைகேடாக திருப் பி விடப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் சந்தை மதிப்பு சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

அரசாங்கத்தால், மண்ணெண்ணெய் விநியோகத்திற்காக ஒதுக்கப்பட்ட மானியத் தொகையில் இது சுமார் 50 சதவீதமாகும். புதைந்திருக்கும் ஊழல் பாறையின் ஒரு சிறுமுனையே இது.

ஏழைகளின் நலனுக்காக அரசாங்கத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட மற்ற மானிய தொகைகள், சமூகநலத் திட்டங்களிலும் இம்மாதிரி கசிவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மானியச் செலவுகள் பெருமளவில் இருப்பதால், கசிவுகளின் அளவும் பெருமளவில் இருக்கும் என்று நம்பலாம்.

மானியத் தொகைகளை ரொக்கமாகப் பயனாளிகளுக்கு அவர்களின் வங்கி கணக்குகள் மூலம் வழங்கிடுவது, இடைத்தரகர்கள் மூலம் ஏற்படும் கசிவுகளை பெருமளவு குறைக்கும்.

பணமாகக் கொடுக்கப்படும் மானியங்கள், மது போன்ற செலவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டால், அரசாங்கத்தின் நல்ல சமூக நோக்கம் நிறைவேறாமல் பயனற்றுப் போகும் என்ற வாதத்தை ஆதாரம் இல்லாமல் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஊழல்களை குறைக்க, பயனாளிகளுக்கு நேரிடை பணப் பட்டுவாடாவை ஒரு சாதனமாக பயன்படுத்தலாம். செலவுகளை முறைப்படுத்த, அவற்றில் குறிப்பிட்ட பகுதியை உணவு, கல்வி மற்றும் மருத்துவம் போன்ற செலவுகளுக்கு வரையறுத்து பகிர்ந்தளிக்கலாம். என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சமீபத்தில் ஒரு கருத்தரங்கில் தன் கருத்தை பதிவு செய்துள்ளார்.

பயனாளிகளை வங்கி சேவை வட்டத்திற்குள் கொண்டு வந்தால்தான் (ஊண்ய்ஹய்ஸ்ரீண்ஹப் ண்ய்ஸ்ரீப்ன்ள்ண்ர்ய்) இது சாத்தியம். பயனாளிகள், செயல்முறைகளை எளிதாகப் புரிந்துகொண்டு, தங்கள் பணத்தை சேமித்து பயன்படுத்துவதற்கு நம்பிக்கையூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட வங்கி கணக்கு, அவசரத் தேவைகளுக்கு கந்து வட்டிக்காரர்களை அணுகாமல் குறைந்த வட்டிக்கு கடன் வசதி, விபத்து காப்பீடு, ஓய்வு ஊதியம் போன்ற வசதிகளை உள்ளடக்கிய வங்கித் திட்டங்கள் மூலம்தான் ஏழைகளை வங்கி சேவை வட்டத்திற்குள் இழுக்கமுடியும் என்பதும் அவர் கருத்தாகும்.

சாமானிய மக்களையும் வங்கி சேவை வட்டத்திற்குள் கொண்டு வரும் திட்டம், 2005-ஆம் ஆண்டிலிருந்து ரிசர்வ் வங்கி வட்டாரங்களில் எண்ண வடிவில் உலா வந்து கொண்டிருக்கும் ஒன்றாகும். ஆனால், பல நடைமுறை இடர்பாடுகளால் எண்ணங்கள் செயல்படுத்தப்படுவது தள்ளிப்போடப்பட்டு வந்தது.

ரிசர்வ் வங்கியின் வற்புறுத்தலின் பேரில், ஒரு கட்டத்தில், கிராமப்புற மக்களுக்காக பல்லாயிரக்கணக்கான வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டன. ஆனால், பெரும்பாலான கணக்குகளில் பணப் பரிவர்த்தனை எதுவும் நடைபெறாமல், அவைகள் இயங்கா கணக்குகளாக மடிந்தன.

நாளடைவில், சமுதாயத்தின் அடிவேரான ஏழை மக்களை பொருளாதார சீர்த்திருத்தங்களின் பலன் சென்றடைந்தால்தான், வளர்ச்சி சீராகும். அதற்கு, கடன் வசதி உள்பட பலவிதமான வங்கி சேவைகள் அவர்களை சென்றடைய வேண்டும் என்ற நடைமுறை ஞானம் அரசியல்வாதிகளிடையேயும் ஓரளவு வளர துவங்கியது.

இதில் முதல் கட்டமாக, மத்திய - மாநில அரசுகளால் வழங்கப்படும் 4.25 டிரில்லியன் ரூபாய் (4,25,000 கோடி) மதிப்புள்ள பல்வேறு மானியங்களின் ஒரு பகுதியை பயனாளிகளுக்கு நேரிடையாக வங்கி கணக்குகள் மூலம் பட்டுவாடா செய்வதால், அவர்களை வங்கி சேவை வட்டத்திற்குள் கொண்டு வரலாம் என்ற சிந்தனைகள், செயல்பாட்டு கட்டம் வரை முந்தைய மத்திய அரசால் முன்னெடுக்கப்பட்டது.

இது, தேர்தல் காலத்தில் ஓட்டு வங்கிக்காக வரையப்பட்ட முழுமை பெறாத செயல்பாட்டு திட்டம் என்ற குற்றச்சாட்டு எழுந்ததால், நடைமுறைபடுத்துதல் தாற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

செயல் தடங்கல்களால் ஏற்பட்ட இடைவெளி, சில தருணங்களில் திட்டங்களை பட்டை தீட்டி மெருகேற்றி மேம்படுத்தவும் பயன்படும். மோடி அரசு பதவியேற்ற சில மாதங்களில் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டில், நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்று கூறப்பட்டது.

குறிப்பாக பெண்கள், சிறு, குறு விவசாயிகள், தொழிலாளர்கள் பெயரில் வங்கிக் கணக்கு துவங்க தீவிர கவனம் செலுத்தப்படும் என்ற திட்டம் நிதி அமைச்சரால் அறிவிக்கப்பட்டவுடன், அதை செயல்படுத்தும் திட்ட வரைவுகளை சமர்ப்பிக்க வங்கிகள் வலியுறுத்தப்பட்டன.

இதற்கு, ரிசர்வ் வங்கி கவர்னரின் தெளிவான சிந்தனையுடன் கூடிய அழுத்தமான ஆதரவும் இருந்தது. சிந்தனை அளவில் மட்டும் வடிவெடுத்து, நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் தேங்கியிருந்த இந்தத் திட்டம் வெற்றி பெறுவதில் ரிசர்வ் வங்கி தற்போது உறுதியாக நிற்கிறது.

நாட்டின் 68-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் ஆற்றிய உரையில் அடித்தட்டு மக்களை வங்கி சேவை மையத்திற்குள் கொண்டு வரும் நோக்கத்துடன் அறிவிக்கப்பட்ட "ஜன் தன் யோஜனா' அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

இந்தத் திட்டத்தில் சேர்பவர்களுக்கு வங்கிக் கணக்கோடு, பண அட்டையும் (ஈங்க்ஷண்ற் இஹழ்க்) வழங்கப்படும். ஒரு லட்சம் ரூபாய்க்கு காப்பீடு வழங்கப்படும். அந்த குடும்பத்தில் ஏற்படும் இடர்ப்பாடுகளுக்கு இந்த காப்பீடு உதவும்.

தற்போது, நாட்டு மக்கள் தொகையில் சுமார் 58 சதவீதம் பேர் மட்டுமே வங்கி சேவை பயன்பாடுகளை அனுபவித்து வருகின்றனர். எஞ்சியிருப்பவர்களில் பெரும் பகுதியை வங்கி சேவை வட்டத்திற்குள் கொண்டு வரும் திட்டம், இந்தியப் பொருளாதார கட்டமைப்பில் ஒரு புரட்சியை தோற்றுவிக்கப்போவது நிச்சயம்.

இந்த சேவைகளை மேம்படுத்துவதில் செல்போன் போன்ற சாதனங்கள் பயன்படுத்தப்படும் என்பதால், இந்தியாவில் ஒரு டிஜிட்டல் புரட்சியையும் வரும்காலங்களில் எதிர்பார்க்கலாம். இதனால், பெருமளவில் பயனடைப்போவது வங்கிகளும், அடித்தட்டு மக்களும்தான்.

இதனால், பண நோட்டு மூலமான பரிவர்த்தனைகள், இங்கிலாந்து (2 சதவீதம்), ஆஸ்திரேலியா (3 சதவீதம்), ஜப்பான் (6 சதவீதம்) போன்ற வளர்ந்த நாடுகளைப்போல் பெருமளவில் இந்தியாவிலும் குறைய வாய்ப்புள்ளது என்று ஸ்டேட் வங்கியின் சேர்மன் அருந்ததி பட்டாச்சாரியா தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

இந்தத் திட்டத்தில் துவங்கப்படும் வங்கி கணக்குகள் ஒவ்வொன்றுக்கும் 5 ஆயிரம் ரூபாய் வரை கடன் (ஞஸ்ங்ழ்க்ழ்ஹச்ற்) வசதி நிர்ணயிக்கும் திட்டமும் ஆலோசனையில் உள்ளது. பயனாளிகளின் அன்றாட அவசரத் தேவைகளுக்கு, கந்து வட்டிக்காரர்களை அணுகாமல் தவிர்ப்பதற்கு, இந்தக் கடன் வசதி பெரும் உதவியாக இருக்கும்.

கணக்கு இயக்கப்படும் தரத்தைப் பொருத்துதான் கடன் வசதி அமையும். 1980-களில் லோன் மேளாக்களில் வழங்கப்பட்ட கடன்களைப்போல் இவை தள்ளுபடி லோன்களாக மாறாமல் இருக்கும்படி வழிமுறைகள் அமைக்கப்பட்டால்தான், பயனாளிக்கு இம்மாதிரி வசதிகள் நிரந்தர பயனை அளிக்கும்.

குறு நிதி நிறுவனங்கள் போல், அந்தந்த பகுதியில் வசிப்பவர்கள் ஒருவருக்கொருவர் கடன் உத்தரவாதம் அளித்தால், கடன் வசூலில் தொய்வு ஏற்படாது.

கடன் வசூலில் வங்கிகளுக்கு ஏற்படக்கூடிய தொய்வுகளை ஈடுகட்ட "கிரெடிட் கியாரண்டி ஃபண்ட்' என்ற நிதி அமைப்பும் உருவாக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த முயற்சிகளின் அடுத்த கட்டமாக, அடித்தட்டு மக்களின் ஓய்வு ஊதியம் மற்றும் தேவையான காப்பீடுகள் போன்றவற்றிற்கான திட்டங்களும் அரசாங்கத்தால் நிறைவேற்றப்படலாம்.

அரசாங்கத்தின் இம்மாதிரி சமூக நலத் திட்டங்கள் வெற்றி பெற, வங்கிகள் தங்களை முழுவதும் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஏழைகளின் வாழ்வை வளப்படுத்தும் பொருளாதார மேம்பாடுகள்தான், ரூபாய் நோட்டுகளில் பதிந்திருக்கும் காந்தியின் புன்னகையை அர்த்தமுள்ளதாக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com