எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கயிறு மேல் நடைபோடும் ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கியின் ஜூன் மாத கடன் கொள்கை காட்டமான விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்குத் தரும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) மாற்றம் செய்யப்படவில்லை. அது 6.5 சதவீதமாகவே தொடரும்.

News image
Updated On :19 ஜூன் 2016, 9:11 pm

எஸ். கோபாலகிருஷ்ணன்

ரிசர்வ் வங்கியின் ஜூன் மாத கடன் கொள்கை காட்டமான விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்குத் தரும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) மாற்றம் செய்யப்படவில்லை. அது 6.5 சதவீதமாகவே தொடரும். குறைந்தபட்சம், கால் சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே, வர்த்தக சம்மேளனங்கள் மட்டும் அல்லாமல் வீட்டுக் கடன், வாகனக் கடன் வாங்கியுள்ள நடுத்தர மக்களும் அதிருப்தி தெவித்துள்ளனர்.

காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பண்டங்களின் விலைகள் உயர்ந்துள்ளன. வங்கிக் கடன் இ.எம்.ஐ. எனப்படும் மாதத் தவணையாவது குறையும் என நம்பியவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு தான் என்ன? 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் பயனாக, அரசு ஊழியர்கள் சம்பளம் உயர உள்ளது. இதனால் பணப்புழக்கம் மற்றும் பணவீக்கம் அதிகரிக்கும்.

அமெரிக்க வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்குமா என்பது ஃபெடரல் ஓபன் மார்க்கெட் குழு (ஊஞஙஇ)வின் முடிவுக்குப்பின் தெரியவரும். இந்த விஷயங்களில் தெளிவு ஏற்படும்வரை காத்திருப்பது நல்லது என்பது ரிசர்வ் வங்கியின் கருத்து.

இன்னொரு பக்கம், இந்தியாவின் பொருளாதார அடிப்படைகள் வலுவாகவே உள்ளன. பணவீக்கம் 5.39 சதவீதம் மட்டுமே. நடப்புக்கணக்கு (இன்ழ்ழ்ங்ய்ற் அஸ்ரீஸ்ரீர்ன்ய்ற்) உபரியாக இருக்கிறது. நிதிப்பற்றாக்குறை கட்டுக்குள் உள்ளது. அன்னியச் செலவாணி கையிருப்பு 360 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி) என வலுவான நிலையில் தொடருகிறது.

பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சியின் விளைவாக, இந்தியாவின் சர்வதேச வர்த்தக மதிப்பு பற்றாக்குறை 10-12 பில்லியன் டாலரிலிருந்து சரிபாதியாக (5-6 பில்லியன் டாலர் அளவு) குறைந்திருக்கிறது.

அதேநேரம், வெளிநாடு வாழ் இந்தியர்கள் வழக்கமாக இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பும் பணம் குறைந்துள்ளது. உலகிலேயே இந்தியாவுக்குத்தான் இந்த வகைப்பணம் அதிகபட்சமாக வருவது வழக்கம். உதாரணமாக, 2015-ஆம் ஆண்டு 70 பில்லியன் டாலர் (ரூ. 4,55,000 கோடி) வந்தது. ஆனால், இது இப்போது சரிந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்க நிலையே இதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.

நமது கணினி மென்பொருள் ஏற்றுமதி வாயிலாக வரக்கூடிய தொகையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. எனினும், நாட்டின் நடப்புக் கணக்கு கையிருப்பு பாதிக்கப்படவில்லை என்பது ஆறுதல்.

இந்த நிலையில், ஜூன் மாதம் 7-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கைக்குப் பிறகு, அதாவது ஜூன் 14-ஆம் தேதி வெளிவந்துள்ள செய்திகளின்படி சில்லரை விலை அடிப்படையிலான பணவீக்க விகிதம் 5.47 சதவீதத்திலிருந்து (ஏப்ரல் 2016) 5.76 சதவீதமாக (மே 2016) உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு மே மாதத்தில் இது 5 சதவீதமாக மட்டுமே இருந்தது. கடந்த 21 மாதங்களில் இதுவே அதிகபட்ச பணவீக்க விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. உணவுப் பொருள்களின் விலை உயர்வே இதற்குக் காரணம்.

இது ஒருபுறம் இருக்க, 2014 ஜனவரி முதல் ரிசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) 8 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக குறைந்துள்ளது. இது கணிசமான வட்டி குறைப்பு. ஆனால், இந்த வட்டிக் குறைப்பின் முழுமையான பலன் வங்கியிலிருந்து வீட்டுக் கடன், வாகனக் கடன் வாங்கிய நடுத்தர மக்களுக்கு போய் சேர்ந்ததா என்றால் இல்லை என்பதுதான் பதில்.

இதற்கு, வங்கியின் பதில் என்ன? வங்கிகள் டெபாசிட்டுகளுக்கு கொடுக்கும் வட்டியைக் குறைக்க முடியாத நிலை உள்ளது என்கிறார்கள். இந்த பதில் ஏற்புடையதல்ல.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி மேலும் ஒரு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி மார்ஜினல் காஸ்ட் (செலவு), லெண்டிங் ரேட் என்கிற கடன் வட்டி விகிதம் (எம்.சி.எல்.ஆர்.) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கிகளுக்கு டெபாசிட் முதலிய நிதி திரட்டுவதற்கு ஆகும் செலவினங்களை கணக்கிடும்போது சி.ஆர்.ஆர். என்னும் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டிய ரொக்க கை யிருப்பு ஆகியவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த நடைமுறை மூலம் புதிய வீட்டுக் கடன், வாகனக் கடன் ஆகியவற்றின் வட்டி சிறிதளவு குறைவதற்கு வழி பிறந்துள்ளது.

÷அண்மைக்காலமாக, ரிசர்வ் வங்கியின் கொள்கைகளைப் பற்றி அலசும்போது, மத்திய அரசின் கொள்கைகளுக்கும் ரிசர்வ் வங்கியின் கொள்கைகளுக்கும் இடையே ஏதோ கருத்து முரண்பாடு இருப்பது போன்ற ஒரு தோற்றம் தேவையில்லாமல் உருவாகியுள்ளது. விஷயம் இதுதான்: ரிசர்வ் வங்கி பணவீக்கத்தையும், விலைவாசியையும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்துகிறது. மத்திய அரசு, பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிட வேண்டும். அதற்கு ஏற்ப கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்தால், முதலீட்டாளர்கள் வங்கியில் கூடுதலாக கடன் வாங்கி புதிய முதலீடுகள் செய்வார்கள். இதனால் தொழில்வளம் பெருகி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று நம்புகிறது.

இந்த இரண்டு அணுகுமுறையுமே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவை என்பதுதான் யதார்த்தம். இதில் கருத்து மோதல் ஒன்றுமில்லை. இது ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம்தான். இன்னும் சொல்லப்போனால், கடந்த காலங்களிலும் ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் இருந்துள்ளன.

தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு முந்தைய ஆளுநர் டி. சுப்பராவ் காலத்திலும் சில விஷயங்களில் ரிசர்வ் வங்கிக்கும் மத்திய நிதி அமைச்சகத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்தது. உதாரணமாக, 2013-இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது யுனைட்டெட் ஃபைனான்ஷியல் ரெகுலேடரி ஏஜென்சி (மஊதஅ) என்கிற புதிய நிதித் துறைக் கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் வங்கிகளைக் கண்காணிப்பது, நிதிக் கொள்கை மற்றும் பணப்பட்டுவாடா ஆகிய பணிகள் ரிசர்வ் வங்கியிடம் நீடிக்கும். ஆனால், அரசின் செலவுகளுக்கு கடன் பத்திரங்கள் (பாண்டுகள்) மூலம் பணம் திரட்டும் பணி ரிசர்வ் வங்கியிடமிருந்து அகற்றப்படும். அது கடன் மேலாண்மை அமைப்பு என்கிற புதிய அமைப்புக்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது ரிசர்வ் வங்கியின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் செயல் என்று ரிசர்வ் வங்கி கருதியது மட்டுமல்லாமல், புதிய ஏற்பாட்டுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.

டாக்டர் சுப்பராவுக்கு முன்பு ஆளுநராக இருந்த ஒய்.வி. ரெட்டி காலத்தில், அதாவது 2008-ஆம் ஆண்டு, சர்வதேச பொருளாதார வீழ்ச்சியை அமெரிக்கா சந்தித்தது. உலகப் புகழ்பெற்ற வலுவான லேமேன் பிரதர்ஸ் நிறுவனம் திவாலானது. பல நூறு வங்கிகள் அமெரிக்காவில் திவாலாயின. அதுசமயம் உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிப்படைந்தாலும், இந்தியா தாக்குப்பிடித்தது.

இந்த சாதனை ரிசர்வ் வங்கியின் சிறப்பான நெறிமுறைகளால்தான் சாத்தியமானது என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை எழுதியது. அந்த காலக்கட்டத்தில், இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, மூலதன கணக்கு முழுமையாக மாற்றம் (இஹல்ண்ற்ஹப் அஸ்ரீஸ்ரீர்ன்ய்ற் இர்ய்ஸ்ங்ழ்ற்ஹக்ஷண்ப்ண்ற்ஹ்) சீர்திருத்தத்தை கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது. மாறாக, ரிசர்வ் வங்கி, முழுமையான மாற்றம் கூடாது, படிப்படியாகத் தான் கொண்டுவர வேண்டும் என்று வாதாடியது. இதுவும் அப்போது ஒரு சர்ச்சையாகவே பார்க்கப்பட்டது. ஆனால் ஒய்.வி. ரெட்டி ரிசர்வ் வங்கியின் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

மூலதன கணக்கை முழுமையாக மாற்றும் நிலை அனுமதிக்கப்பட்டிருந்தால், ஏதேனும் பொருளாதாரப் பின்னடைவு ஏற்படும்போது, அன்னிய முதலீடுகள் ஒரே நொடியில் இந்தியாவை விட்டு வெளியேறி இருக்கும். 1990-களின் இறுதியில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதுதான் நடந்தது. ஆனால், 2008-இல் இந்தியாவில் அப்படி நிகழாமல் காப்பாற்றியது ரிசர்வ் வங்கியின் தொலைநோக்குப் பார்வைதான்.

ஒய்.வி. ரெட்டிக்கு முன்பு ஆளுநராக இருந்த பிமல் ஜலானும், மூலதனக் கணக்கு முழுமையாக மாற்றப்படுவதற்கு சம்மதிக்கவில்லை. அதைச் செய்வதற்கு முன் பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதை அழுத்தமாகவே சுட்டிக்காட்டினார். இதுவும் ஒரு சர்ச்சையாகவே அப்போது வர்ணிக்கப்பட்டது.

அதேசமயம் பிமல் ஜலான் காலத்தில், முன்பு எப்போதும் இருந்ததைவிட அதிக அன்னியச் செலாவணி கையிருப்பு சேர்ந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்ந்தது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக வங்கி வட்டி 6 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

2003-இல் அவர் ஓய்வு பெறும்போது, அவரை ஒரு "சூப்பர் மேன்' என்று ஊடகங்கள் வர்ணித்தன. அதுமட்டுமல்லாமல், மத்திய அரசு பிமல் ஜலானை மாநிலங்களவை உறுப்பினராக்கியது.

ரகுராம் ராஜனைப் பொறுத்தவரை அவர் ஒரு முன்னாள் ஐ.எம்.எஃப். தலைமை பொருளாதார ஆலோசகர், சிகாகோ பல்கலைக்கழகப் பேராசியர், உலகறிந்த பொருளாதார நிபுணர் என்பதையெல்லாம் தாண்டி, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக, 11 சதவீதமாக இருந்த பணவீக்கத்தை 5 சதவீதமாக குறைத்தது, வளர்ச்சி விகிதத்தை 5 சதவீதத்திலிருந்து கிட்டத்தட்ட 8 சதவீதமாக உயர்த்துவதற்கான சூழலை உருவாக்கியது. வங்கிகளின் பேலன்ஸ் ஷீட்களை ஒளிவுமறைவில்லாமல் தூய்மைப்படுத்தியது போன்ற பல சாதனைகளை நிகழ்த்தியவர்.

ஆக, கடந்த காலங்களைப் போலவே, இப்போதும் ரிசர்வ் வங்கிக்கும் மத்திய நிதி அமைச்சகத்துக்கும் இடையேயான கருத்துப் பரிமாற்றம் ஆரோக்கியமானதாக மட்டுமல்லாமல் இந்தியப் பொருளாதார மன்றத்துக்கு அது வழிகோலுவதாக அமையும் என்பதை காலம் நிச்சயம் உணர்த்தும்.

வங்கி அதிகாரி (ஓய்வு)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.