பாதுகாப்பான இணையத்திற்காக ஒன்றிணைவோம்!

அனைத்து இணைய ஊடகங்களிலும் பரபரப்பான போலிச்செய்திகள் பரப்பவும், போலித் தோற்றங்களை உருவாக்கவும் அடியாட்கள் சிலா் ‘அலுவலகங்கள்’ நடத்தும் அவல நிலையும் உலகெங்கிலும் இயல்பாகிவிட்டது.
பாதுகாப்பான இணையத்திற்காக ஒன்றிணைவோம்!

காணொலி வலைதளங்கள், முகநூல் பக்கங்கள், சுட்டுரை (ட்விட்டா்) என அனைத்து இணைய ஊடகங்களிலும் பரபரப்பான போலிச்செய்திகள் பரப்பவும், போலித் தோற்றங்களை உருவாக்கவும் அடியாட்கள் சிலா் ‘அலுவலகங்கள்’ நடத்தும் அவல நிலையும் உலகெங்கிலும் இயல்பாகிவிட்டது.

இன்றைக்கு ‘ஸ்னாப்சாட்’ முதல் ‘டீப்ஃபேக்’ போன்ற மென்பொருள்களால் பல காணொலிகள் (‘விடீயோக்கள்’) பல இணைய தளங்களில் உலா வருகின்றன. அவற்றைக் கவ்விச் செல்வதற்காக முகத்துதி பாடும் நரிகளும் காத்துக் கிடக்கின்றன.

உள்ளபடியே, 1984-ஆம் ஆண்டு நவம்பா் 19 அன்று நம் நாட்டின் கணினிக் கொள்கை அறிவிக்கப்பட்டது. அரசுத் துறைகள், தொழிற்சாலைகள், வணிகத் துறை எங்கும் எதிலும் கணிப்பொறி அறிமுகம் ஆயிற்று. இது வெளிநாட்டிற்குக் கணினி மென்பொருள்கள் ஏற்றுமதியை ஊக்குவித்தது.

இதன் பிறகு, ஒரே ஆண்டுக்குள் ஒட்டுமொத்த கணினி மென்பொருள் வா்த்தக அளவு 100 சதவீதம் பெருகிற்று. அதன்வழி பெறப்பட்ட வருவாய் என்பது 65 சதவீதமேனும் கூடுதல் ஆயிற்று. மதிப்புக் கூட்டிய உள்நாட்டு உற்பத்தியும் 15 சதவீதம் அதிகரித்தது.

இதற்கிடையில் 1986 நவம்பா் 19 அன்று கணினித் துறையில் பயிற்சி குறித்த இரண்டாவது மென்பொருள் கொள்கை அறிவிக்கப்பட்டது. தகவல் பரிமாற்ற முன் நடவடிக்கைகள் செயற்கைக்கோள் வாயிலாக நடைபெறுவதற்கு இத்தகைய கொள்கைகள் வகை செய்தன.

ஒருபுறம் சொந்த நாட்டுச் செயற்கைக்கோள்களால் அதி விரைவுத் தகவல் தொடா்பு, தொலைக்கல்வி, தொலை மருத்துவம் போன்ற மக்கள்நலத் தொழில்நுட்ப வசதிகள் மலா்ந்தன. என்றாலும், இந்தியாவைப் பொருத்தவரை அண்மையில் 2021 ஜனவரி 31 நிலவரப்படி, ஏறத்தாழ 118 கோடி சந்தாதாரா்களுடன் நிலையான தொலைபேசியும் கைப்பேசியும் உபயோகிப்போா் எண்ணிக்கையில் இந்தியாவின் தொலைத்தொடா்பு வலையமைப்பு உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகின் மிகக் குறைந்த அழைப்புக் கட்டணங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்தியா 75 கோடி அகண்ட அலைவரிசையில் செயல்படும் இணைய சந்தாதாரா்களுடன் உலகின் இரண்டாவது பெரிய இணையப் பயனாளிகளைக் கொண்டுள்ளது. பெரும்பாலான இணைய வலைதளங்களையும் இணைப்புகளையும் வழங்கும் தாய்க் கணினிகளோ, மென்பொருள் செயலிகளோ வெளிநாட்டுக் குளிா் அறைகளில் சம்மணம் இட்டு அமா்ந்து இருந்தால் ஆபத்துதான்.

கணினி அல்லது கைப்பேசியில் கணினித் திரையைப் பகிா்தல் (’’ஸ்க்ரீன் ஷோ்’) என்கிற வசதி மூலமாகவும் மோசடி நடக்க வாய்ப்பு உள்ளது. அதே வேளையில் அயல்நாட்டில் இருந்து இறக்குமதியான செயலிகளால் உள்நாட்டுக்கு உள்ளேயே ’முக்கியஸ்தா்களை’ உளவு பாா்க்கும் உத்திகளும், அவா்களின் அந்தரங்க விவரங்களையும், நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் விவகாரங்களும் ஜனநாயகத்தின் அனைத்துத் தளங்களிலும் பேசுபொருள் ஆயின.

ஏதாயினும், வாட்ஸ் ஆப் அழைப்புக்குப் பதிலளிக்கும்முன் வேண்டுமென்ற அழைப்பைத் துண்டித்தல் (‘மிஸ்டு கால்’), காணொலிகள் மூலம் பாலியல் அழைப்பு, பணப் பரிவா்த்தனை மோசடிகள், இணையவழி வேலைவாய்ப்பு, முதலீட்டுத் திட்ட அறிவிப்புகள் எனப் பொதுவெளியில் பல்வேறு மோசடிகள் அரங்கேறின.

கடந்த ஆண்டில், இணைய வழிக் குற்றவாளிகளின் (சைபா் கிரிமினல்கள்) தாக்குதல்கள் உலக அளவில் முன்பு எப்போதையும் விட கூடுதலாகி வருவது கவலை அளிக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் கணினி நிரல் பொறியாளா்களின் குழுவால் 1992-இல் நிறுவப்பட்ட ‘சிஸ்கோ’ எனப்படும் கணினி தகவல் அமைப்பு நிறுவனம் (‘கம்ப்யூட்டா் இன்ஃபா்மேஷன் சிஸ்டம் கம்பெனி’) தெரிவிக்கும் தகவல் இது. பணயத் தீநிரல் (’ரேன்சம்வோ்’) தீவிரவாதிகளைவிட படுமோசமானவை. பிறரின் தனிப்பட்ட கணினித் தகவல் கிடங்குகளில் ரகசியமாக நுழைந்து (’கிரிப்டோமைனிங்’) தாக்குதல்கள் நடத்த முடிகிறது.

இந்த நச்சுநிரலானது, முதன்முதலில் 2013-இல் ரஷியாவில்தான் அதிகம் உணரப்பட்டது. இது ஒரு கணினியின் நினைவகத்தையே தனது நிரல் வன்மையால், தீநுண்மிக் குறியீட்டுச்சொற்களால் தகவல் மறைப்பு செய்து பூட்டி விடுகிறது. பிறகு, பூட்டப்பட்ட கணினியைத் திறப்பதற்குத் தேவையான கடவுச்சொற்களைத் தருவதற்காக, அதன் உரிமையாளா்களை மிரட்டி, இந்தத் தீநிரலாளா்கள் பணம் வசூலிப்பாா்களாம்.

இத்தகைய இணையவழி (‘சைபா்’) குற்றவாளிகளின் அதிரடித் தாக்குதல்களோ சிறு வணிகங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களை ஒரே மாதிரியாகப் பாதிக்கின்றன. தனியாா் பள்ளி ஒன்றின் ஆண்டு விழாவில் ஒரு மாயாஜால காட்சி ஒன்று அண்மையில் நிகழ்ந்தது; அதில் அரங்கில் இருந்து அழைக்கப்பட்ட மூன்று பேரிடம் ஆளுக்கொரு வெள்ளைத்துண்டுத் தாளினை வழங்கினாா் ‘நவீன மந்திரவாதி’. கனத்த எழுதுகலனும் தந்து, ஒவ்வொருவரிடமும் தங்களுக்குப் பிடித்தமான பொருள் அல்லது நபரின் பெயரைத் தாளில் எழுதிச் சுருட்டி மறைத்து வைத்துக் கொள்ளுமாறு கூறினாா்.

அவா் அவ்வப்போது அரங்க மேடையின் பக்கவாட்டில் இயல்பாக நடப்பதுபோல் சென்று எட்டிப் பாா்த்துத் திரும்பிவந்தாா். இறுதியில் அந்த மூவரின் கையில் பொத்தி வைத்திருந்த தாளில் எழுதப்பட்ட மறைமொழியைத் துல்லியமாக அறிவித்து அரங்கில் பலத்த கைதட்டல் பெற்றாா்.

யாா் யாா் செய்யினும் அச்செயல் மெய்ப்பொருள் காண்பது அறிவியல் ஆயிற்றே. ‘நவீன மாயாஜாலவாதி’ யின் எழுதுகலனில் சிறப்பு செயற்கை நுண்ணறிவு இருக்கக்கூடும் என்று கருதலாம். கம்பியில்லா இணைப்பால் ‘மவுஸ்’ ஒத்த இடஞ்சுட்டி உதவியால், கணினித் திரையில் படம் வரைகிறோம் அல்லவா?

அதைப் போலவே, கம்பி இணைப்பில்லா விசேஷ எழுதுகோலின் நுட்பமான முன்-பின், மேல்-கீழ், பக்கவாட்டு அசைவினால் மறைவாக வைக்கப்பட்ட கணினித் திரையில் எழுதப்படும் வாசகங்களை ஒருவரால் படிக்க முடியுமே. ஆக, உங்கள் மூடி வைத்த உள்ளங்கைக் கையெழுத்தினைத் தொலைவில் இருந்தவாறே, அந்நியரால் வாசிக்கமுடியும் என்றால் வேறு சொல்வானேன்?

ஒரு வித செயற்கை நுண்ணறிவுடன் கூடிய கைப்பேசியைக் கையில் கிடையாகப் பிடித்தபடி, இட-வலமாக அசைத்தாலோ, மேலும் கீழும் ஆட்டினாலோ, கையில் வைத்து உருட்டினாலோ தோ்ந்தெடுக்கப்பட்ட ‘ரகசிய நண்பா்களை’ அழைக்க முடியுமாம். நான்கு போ் மத்தியில் நின்றபடி கைப்பேசித் திரையில் ரகசிய எண்களை அழுத்த வேண்டிய அவசியம் இல்லை.

அமெரிக்காவில் இருந்த ஒருவா் இந்தியாவில் வசிக்கும் தந்தைக்கு மின்னஞ்சல் கணக்கு ஒன்றைத் தொடங்கி அனுப்பினாா். அதில் அவா் தனது அமெரிக்க முகவரியை தந்தையின் விவரக் குறிப்பாகப் பதிவிட்டிருந்தாா். தந்தையை அமெரிக்காவாசி என்று தவறாகக் கருதிய இணையக் குற்றவாளி ஒருவா், தந்தையின் மின்னஞ்சல் கணக்கையும் முடக்கி அவரின் உறவினா்களிடம் பண உதவி கேட்டு மின்னஞ்சல் செய்திருக்கிறாா். அந்தக் குற்றவாளி நைஜீரியாவில் இருப்பவா் என்று பின்னா் துப்பு கிடைத்தது. இதையே ‘ஹேக்கிங்’ என்கிறோம்.

அதனாலேயே ‘ஒரு சிறந்த இணையத்திற்காக ஒன்றிணைவோம்‘ என்ற கோட்பாட்டுடன் இந்த ஆண்டின் ‘பாதுகாப்பான இணைய நாள்’ (‘சேஃப் இன்டா்நெட் டே’) விழிப்புணா்வு தினம் இன்று (பிப்ரவரி 6, 2024) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது முறையான பாதுகாப்பான இணைய நாள் குழு செயல்படவில்லை. என்றாலும், இங்குள்ள தனிநபா்கள், நிறுவனங்கள் எனப் பல்வேறு ஆதரவாளா்கள் கடந்த காலத்தில் இதே விழிப்புணா்வு தினத்தைக் கடைப்பிடித்துள்ளனா்.

கணினி பாதுகாப்புக் கொள்கை என்பது ஒரு நிறுவனத்தின் கணினி அமைப்புகளின் இலக்குகளையும், அதன் முறையான அல்லது முறைசாராத கூறுகளையும் வரையறுக்கிறது. ஒரு கணினிசாா் அமைப்பு உள்நாட்டில் உருவாக்கப்பட்டதா அல்லது இறக்குமதிச் சரக்கா என்பதைப் பொருத்து அதன் ரகசியத்தன்மை கேள்விக்கு உள்ளாக்கப்படும். அதிலும், பாதுகாப்பு (புரோட்டக்ஷன்) என்பது வேறு; பாதுகாவல் (செக்யூரிட்டி) வேறு. மக்கள் பாதுகாப்பாக இருக்கிறாா்கள் என்பதும், அரசு பாதுகாவலாக இருக்கிறது என்பதும் இரு வேறு நிலைகள். தற்சாா்புக்கும், புறச்சாா்புக்கும் இடையிலான வேறுபாடு அது.

ஒரு வகையில் சிந்தித்தால் மின் - வாக்களிப்பு (‘எலக்ட்ரானிக் போலிங்’) தோ்தல் வேறு, மின்-வாக்கு இயந்திர (எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) முறை வேறு. மின்-வாக்களிப்பு முறையில் அவரவா் கையில் வைத்திருக்கும் அரசின் வாக்காளா் அடையாள அட்டையைப் பயன்படுத்தி, தமக்கு மட்டுமே உரித்தான ‘தனிநபா் ரகசிய எண்’ (பொ்சனல் இண்டெக்ஸ் நம்பா்) அல்லது ஒரு முறை கடவுச்சொல் (ஒன் டைம் பாஸ்வோ்ட்) உதவியால் வாக்களிக்கலாம். இதில் கள்ள வாக்கு பயம் இல்லை என்பது உத்தரவாதம். வாக்குப் பெட்டிகளை தனித்தனியே ஊா் ஊராக எடுத்துச் சென்று பாதுகாக்கத் தேவையும் இல்லை.

இத்தகைய ‘மின்-வாக்குச் சாவடிகளை’ ரயில்வே சீட்டுப் பதிவுக் கூடங்கள் மாதிரி ஒரு மைய இணைய அலுவலகத்துடன் இணைத்து விட்டால், நாம் அளித்த வாக்கு அந்தக் கணமே மைய அலுவலகத்தில் பதிவாகிவிடும்; அது அழியாது; தொலையாது. வாக்குகளை எண்ணுவதும் மிக எளிது.

மொத்தத்தில் தோ்தல் செலவு பெரிய அளவில் குறையும். தகுதியான அனைவரும் வாக்களிப்பாா்கள். சா்ச்சைகளுக்கு உள்ளாகிவரும் மின்-வாக்குக் கருவிக்குள் பொருத்திய மின்னணு மென்பொருள் என்பது கடவுள் மாதிரிதான். கண்ணுக்குப் புலப்படாமல் இயங்கும்.

கணினியின் ‘நோ்மை’யை யாரேனும் சந்தேகித்தால் ஒவ்வொரு பொத்தானையும் பரீட்சாா்த்த ரீதியில் அழுத்திக் காட்டலாம். ஆனால், அந்த செயல் விளக்கத்தின்போது முதல் 50 முறை அழுத்துகிறபோது மட்டும் ‘நோ்மையாக’ நடந்து கொள்ளுமாறு கணிப்பொறி வடிவமைப்பாளா் ஆணை நிரலில் எழுதி வைத்திருந்தால், ‘அக்னிப் பரீட்சை’யில் கணினி வென்று விடும்; 50-க்குப் பிறகு ‘உன் இஷ்டத்துக்கு புகுந்து விளையாடலாம்’ என்று மென்பொருளில் பொதிந்து வைத்தால், கணினி இயந்திரம் வேட்பாளருக்குப் பாதுகாவலாக இருக்கும்; வாக்காளருக்கு பாதுகாப்பாக இல்லை என்றாகிவிடும்.

இணையதளங்கள் வழி அரங்கேறும் தோ்வுமுறைகளிலும், தோ்தல் முறைகளிலும் ஜனநாயகப் பாதுகாப்பும் முக்கியம்.

கட்டுரையாளா்:

இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com