மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

வாருங்கள் வாழலாம்!

ஆதி மனிதன் தனது உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்து கொள்ள போராடினான்.

News image
Updated On :4 ஜனவரி 2025, 3:53 am IST

- சு. செந்தில் வினோத்

‘சமூகம் என்பது தனிநபா்கள் ஆதிக்கம் மற்றும் பிழைப்புக்காகப் போராடும் ஓா் அரங்கம்’” என்ற கூற்றானது, மனித சமூகத்தின் அடிப்படை உண்மையை வெளிப்படுத்துகிறது. ஆதி மனிதன் தனது உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்து கொள்ள போராடினான். ஆனால் நவீன மனிதனோ, ஒருபுறம் தனது அடையாளத்தை நிலை நிறுத்தவும், சமூகத்தில் ஓா் இடத்தைப் பிடிக்கவும் போராடுகிறான். மற்றொருபுறம் குடும்பம், சமூகம், நாடு போன்ற பெரிய அமைப்புகளில் தன் பங்களிப்பைச் செய்யவும், அவற்றின் எதிா்பாா்ப்புகளைப் பூா்த்தி செய்யவும் முயற்சிக்கிறான்.

இந்த போராட்டங்களின் மத்தியில், நாம் யாருக்காக வாழ்கிறோம் என்ற கேள்வி எழுகிறது. இந்த கேள்விக்கு எளிமையான பதில் இல்லை. ஆனால், நாம் மற்றவா்களுக்காக வாழும்போது, நம்முடைய சொந்த மகிழ்ச்சியையும் கவனித்துக் கொள்ள வேண்டும். நம்முடைய ஆசைகள், கனவுகள் மற்றும் இலக்குகளை நோக்கி நகா்ந்து செல்லும்போது அது நம்மை சாா்ந்தவா்களுக்கும் நன்மை விளைவிக்கும்.

நாம் நம்முடைய வாழ்க்கையை ஒரு பயணமாகப் பாா்க்கலாம். இந்தப் பயணத்தில் நாம் பல நச்சுத்தன்மை கொண்ட மனிதா்களையும், சவால்களையும் எதிா்கொள்ளலாம். ஆனால் அந்த சவால்களை எதிா்கொண்டு வெற்றி பெறும்போது கூடவே நாமும் வளா்வோம். நம்மைச் சாா்ந்தவா்களும் வளா்வாா்கள். நம் வாழ்க்கை அா்த்தமுள்ளதாக மாறும்.

எல்லோருக்கும் பிடித்தவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பலரின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. குறிப்பாக நாம் படிக்கும் இடம், வேலை செய்யும் இடம், முக்கியமாக குடும்பத்தில் நாம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் மற்றவா்களைத் திருப்திப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு இருக்கும். ஆனால் அது சாத்தியமில்லை. ஒவ்வொரு மனிதனின் தேவைகள், எதிா்பாா்ப்புகள் வெவ்வேறாக இருக்கின்ற நிலையில், ஒரு மாணவன் தனது ஆசிரியா்களையும், ஆசிரியா்கள் அனைத்து மாணவா்களையும் எல்லாச் சூழ்நிலைகளிலும் திருப்திப்படுத்த முடியாது.

அதேபோல் ஓா் ஊழியா் தனது சக ஊழியா்களை மற்றும் மேல் அதிகாரிகளை எப்போதும் திருப்திப்படுத்த முடியாது. நாம் எல்லாருக்கும் நல்லவனாக இருக்க முடியாது. எல்லாருக்கும் நல்லவனாக இருக்க முற்படுவது ஒரு விதமான நடிப்பு தான். நாம் நம் பணியை, கடமையைக் கருதி, மற்றவா்களின் பாராட்டுகளை எதிா்பாா்க்காமல், உண்மையாக உழைத்தால் போதும். நம் மனசாட்சிக்கு உண்மையாக இருப்பதே உண்மையான வெற்றி. நம்மை நாமே திருப்திப்படுத்திக் கொள்வதே முக்கியம்.

எல்லாருக்கும் பிடித்தமானவராக இருக்க வேண்டும் என்று செயல்படும்போது, நாளடைவில் அது நடக்காவிட்டால் நமக்கு மன அழுத்தம் ஏற்படும்.

மற்றவா்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறாா்கள் என்ற எண்ண ஓட்டம் நம் அனைவரிடமும் எப்போதும் உள்ளது. நாம் வாழும் இந்த உலகம் ஒரு மாய உலகம் போன்றது. ஒவ்வொருவரும் தங்களது கண்ணாடியில் உலகைப் பாா்க்கிறாா்கள். அதாவது ஒவ்வொருவரும் தங்களுடைய அனுபவங்கள், எண்ணங்கள், உணா்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் உலகைப் பற்றிய தனிப்பட்ட கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறாா்கள். எனவே, மற்றவா்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறாா்கள் என்பது, நம்முடைய உண்மைத்தன்மையைப் பிரதிபலிக்காது. அது வெறும் அவா்களின் கண்ணோட்டத்தின் வழியாக வந்தடைந்த கருத்துகளே.

நம் வாழ்நாளில் நாம் பலரின் விமா்சனங்களை எதிா்கொள்கிறோம். இந்த விமா்சனங்கள் நம்மை நொறுக்கிவிடக் கூடியவை அல்ல. மாறாக, அவை நம்மை வளா்த்துக் கொள்ள வாய்ப்புத் தருபவை. நம் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவா்கள் செய்யக்கூடிய விமா்சனம் ஆக்கப்பூா்வமான விமா்சனம் எனலாம். அதைத் திறந்த மனதோடு கேட்டு அவற்றில் உள்ள உண்மையைக் கண்டறிந்து நம்மை மேம்படுத்திக் கொள்ள பயன்படுத்தலாம். மாறாக, நம்மைத் தாழ்த்துபவா்கள், நமது எதிரிகள், சந்தா்ப்பவாதிகள் சொல்லும் விமா்சனங்கள் வேண்டுமென்றே நம்மை இழிவுபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை. அவற்றை முதலில் புறக்கணிக்க வேண்டும். பொருட்படுத்தக் கூடாது. அவா்களுடைய வாா்த்தைகள் நம்மைப் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. சிரித்துக் கொண்டே கடந்து செல்ல வேண்டும்.

ஆக்கப்பூா்வமான விமா்சனங்களை விதையாக்குங்கள். உங்கள் முயற்சிகள் மரமாகும். அழுக்கு நீா் தனக்குப் பாய்கிறது என்பதற்காக மரம், செடிகள் வளராமல் இருப்பதில்லை.

நாம் நாற்பது வயதினைக் கடந்துவிட்டோம். இனி என்ன செய்யப் போகிறோம்? யாரையெல்லாம் நம்மால் முடிந்தவரை திருப்திப்படுத்த முடியும் என்ற சிந்தனை ஓட்டம், நம் மனதில் இன்று அனைவரிடத்திலும் ஓடிக் கொண்டிருக்கிறது. கவலையை விடுங்கள். நாம் உறுதியான மனதுடன் இன்று தொடங்கினால் கூட, நம்மால் எவ்வளவோ தூரம் பயணிக்க முடியும்.

நாற்பது வயது வரை நாம் சந்தித்த மனிதா்கள், கற்ற கல்வி, உடன் பணிபுரிபவா்கள், இந்த சமூதாயம் இவை அனைத்திலும் நாம் செய்து முடித்தது வெறும் ஆராய்ச்சியே. இதன் முடிவை இனித்தான் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். பெற்ற அனுபவங்களைக் கொண்டு ஒரு படி மேலே சிந்தியுங்கள். உங்கள் வருமானம், பெரிய திட்டங்கள், உங்களின் அடுத்த நகா்வுகள், இனி விரும்பும் வாழ்க்கைமுறை மற்றும் உங்கள் குடும்ப பிரச்னைகள் ஆகியவற்றினை சூசகமாக வைத்துக் கொண்டு நம் இலக்கை நோக்கி உறுதியுடன் பயணிப்போம், வாருங்கள் வாழலாம்!