இளைஞர்களின் துறவி!

உலகியல் வாழ்வில் வெற்றிபெறவும் பற்பல அரிய கருத்துகளைச் சொன்ன விவேகானந்தர் பிறந்த தினத்தை இளைஞர் தினமாகக் கொண்டாடுவதைப் பற்றி...
இளைஞர்களின் துறவி!
Updated on
3 min read

ஸ்ரீஅரவிந்தர் விவேகானந்தரைத் தம் குரு எனக் குறிப்பிட்டிருக்கிறார். தாம் சிறையில் தவம் செய்த காலத்தில் சூட்சும உருவில் விவேகானந்தர் தம் தவத்தை நெறிப்படுத்தியதாகவும் தெரிவித்திருக்கிறார். "விவேகானந்தரது எழுத்துகளைப் படித்து என் தேசபக்தி ஆயிரம் மடங்கு அதிகமாயிற்று' என்று மகாத்மா காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.

"தனி மனிதனின் ஆளுமை வளர்ச்சியில் விவேகானந்த இலக்கியத்தை விட, வேறொன்றை என்னால் உயர்ந்ததாகக் கூற முடியாது' என்பது நேதாஜியின் கூற்று. இவ்விதம் எண்ணற்ற தேச பக்தர்கள் உள்ளங்களில் சுதந்திர எழுச்சி தோன்றும் வகையில் பாரத தேசத்தின் பெருமைகளை உரத்து முழங்கிய விவேகானந்தர், அடிப்படையில் ஓர் ஆன்மிகவாதி. ஆன்மிகம் தவிர்த்து பாரதம் இல்லை என்றவர் அவர்.

"இந்தியா என்ற தேசத்தின் ஊற்றுக்கண் ஆன்மிகம்தான். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அரசியலில் எனக்கு நாட்டமில்லை. சமுதாய சீர்திருத்தவாதி என்று நான் புறப்படவும் இல்லை. ஆனால், இந்தப் பாரத தேசத்தின் புனித மண் ஆன்மிக மண். ஆன்மிகத்தைத் தவிர்த்து பாரதமில்லை என்பதை நான் நன்கு அறிந்து வைத்திருக்கிறேன்!' என்று தன் நிலைப்பாடு குறித்து விளக்கம் தந்தவர் அவர். "உலகம் முழுவதையும் ஒரு வீடு என்று கருதினால், இந்தியா அதன் பூஜை அறை!' என்றவரும் அவரே.

விவேகானந்தரை இளைஞர்களுக்கான துறவி என்கிறோம். அவர் பிறந்த தினத்தை இளைஞர் தினமாகக் கொண்டாடுகிறோம். காரணம் முக்தி அடைவதற்கு மட்டுமல்ல, இன்றைய உலகியல் வாழ்வில் வெற்றிபெறவும் பற்பல அரிய கருத்துகளைச் சொன்னவர் அவர்.

உலகியல் வாழ்வில்கூட உன்னால் வெற்றி பெற முடியவில்லை என்றால், பின்னர் எப்படி நீ முக்தி அடைய முடியும்? எனக் கேட்டவர். இன்று வெளியாகும் எண்ணற்ற சுயமுன்னேற்ற நூல்களுக்கெல்லாம் வித்திட்டவர் விவேகானந்தர்தான். விவேகானந்தர் உடல் தரித்து உலகில் வாழ்ந்தது முப்பத்தொன்பது ஆண்டுகள் மட்டுமே. ஆனால், அவர் செய்த மாபெரும் சாதனைகள் மலைக்க வைக்கின்றன. பல நூறு ஆண்டுகள் வாழ்ந்தாலும் செய்து முடிக்க முடியாத சாதனைகளை அவர் தம் குறுகிய கால வாழ்வில் செய்து முடித்தது அதிசயம்தான். இந்த அதிசயத்துக்குக் காரணம் அவரிடமிருந்த அபரிமிதமான மன ஒருமைப்பாடுதான்.

இளைஞர்கள் மன ஒருமைப்பாட்டைப் பயிற்சியின் மூலம் வளர்த்துக் கொண்டு, குறுகிய காலத்தில் பல பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தார். தாம் செய்த சாதனைகளை மன ஒருமைப்பாடு மட்டும் இருந்தால் யார் வேண்டுமானாலும் செய்ய முடியும் எனவும் அறைகூவினார்.

"அடிப்படையில் ஒரு மனிதனின் மன ஒருமைப்பாடே அவன் அடையும் அனைத்து வெற்றிகளுக்குமான ஆதாரம்!' என்பது வாழ்வியல் சார்ந்த அவரது முக்கியமான உளவியல் கண்டுபிடிப்பு.

"நாம் எவ்வளவு அதிகமாக ஒரு விஷயத்தில் மனத்தைச் செலுத்துகிறோமோ அவ்வளவு அதிகமாக அவ்விஷயத்தில் ஞானத்தை விரைவில் அடைய முடியும். மனத்தைப் பூரணமாக ஒன்றில் குவிப்பதுதான் அந்தத் துறையில் மிக விரைவில் உயர்ந்த ஞானம் பெற ஒரே வழி. செருப்புத் தைப்பவன் மன ஒருமைப்பாட்டைப் பயின்றால் சிறந்த செருப்புத் தொழிலாளியாவான். சமையல் செய்

பவன் மன ஒருமைப்பாட்டோடு சமைத்தால் சிறந்த சமையல் கலைஞனாவான். கடவுளை வழிபடுவதிலிருந்து பணம் சம்பாதிப்பது வரை எந்தச் செயலானாலும் முழுமையான மன ஒருமைப்பாடு மிகவும் அவசியம்!' என்று ஒரு மாபெரும் உளவியல் உண்மையைத் தன் அனுபவத்தில் உணர்ந்து உலகிற்கு அறிவித்தவர் அவர்.

விவேகானந்தரின் கருத்துகள் எல்லாமே விவாதபூர்வமானவை. ஒப்புக் கொள்ளக் கூடிய வகையில் நிறுவப்பட்டவை. ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் விவாதம் செய்து தம் கருத்துகளை நிலைநிறுத்துவதில் அவர் கைதேர்ந்தவர்.

"உனக்குள்ளே அளவற்ற ஆற்றலும் அளவற்ற அறிவும் யாராலும் வெல்ல முடியாத சக்தியும் இருப்பதாக நினைப்பாயானால், அந்தச் சக்தியை உன்னால் வெளியே கொண்டுவர முடியுமானால் நீயும் என்னைப்போல் ஆக முடியும்! உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி! முதலில் உற்சாகமாக இருக்கப் பழகு.

நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய். உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! பலவீனன் என்று நினைத்தால் பலவீனமானவன் ஆவாய்.

இளைஞனே! நம் நாட்டின் வருங்கால நம்பிக்கைகள் உன்னையே எதிர்நோக்கியிருக்கின்றன; கடினமாக உழைப்பாயாக; உறுதியாக இரு; இறைவன் மீது பூரண நம்பிக்கை வைப்பாயாக! வெற்றி உனக்குத்தான்!' என்கிறார் விவேகானந்தர்.

ஒருமுறை அவர் கலைக்களஞ்சியத்தைப் படித்துக் கொண்டிருந்தார். கலைக்களஞ்சியம் என்பது ஒரு பார்வைப் புத்தகம். அதை சந்தேகம் வரும் நேரங்களில் எடுத்துப் பார்ப்பார்களே தவிர முதல் பக்கம் தொடங்கி முழுமையாக யாரும் படிக்க மாட்டார்கள். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், "கலைக்களஞ்சியம் பார்வைப் புத்தகமல்லவா? அதை ஒரு புதினத்தைப் படிப்பதுபோல் வரிவரியாகப் படித்துக் கொண்டிருக்கிறீர்களே?' என வியப்போடு கேட்டார்.

விவேகானந்தர் முறுவல் பூத்தவாறே, அதுவரை தாம் வாசித்த பக்கங்களில் ஏதேனும் சந்தேகம் கேட்டு தன்னைப் பரிசோதிக்குமாறு இளைஞரைக் கேட்டுக் கொண்டார். இளைஞர் ஏதோ ஒரு பக்கத்திலிருந்து ஒரு வார்த்தையைக் குறிப்பிட்டு அந்த வார்த்தைக்கு விளக்கம் கேட்டார்.

என்ன வியப்பு! விவேகானந்தர் அந்த வார்த்தை தொடங்கி அடுத்துள்ள வார்த்தைகளையும் அவற்றின் பொருளையும் பக்கம் பக்கமாகத் தொடர்ந்து ஒப்பித்துக் கொண்டே போனார்.

விவேகானந்தரின் மனனத் திறமையைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்த இளைஞர் பிரமிப்போடு அவரை ஓர் அவதாரம் எனப் புகழ்ந்தார். நகைத்த விவேகானந்தர், "இந்தத் திறனைப் பெறுவதற்கு ஒருவர் அவதாரமாக இருக்க வேண்டியதில்லை. உறுதியான மன ஒருமைப்பாட்டை பயிற்சியின் மூலம் அடைந்தால் அதுவே போதும். இத்தகைய ஆற்றல் தானாக வாய்க்கும்.

நான் இந்தக் கலைக்களஞ்சியத்தைப் படிக்கும்போது வேறெதிலும் கவனம் செலுத்தாமல் இதிலேயே முழுமையாக ஆழ்ந்திருந்தேன். என் பக்கத்தில் இடியே விழுந்திருந்தாலும் அது எனக்குத் தெரிந்திருக்காது!' எனக் கூறினார். இளைஞர்கள் தங்கள் துயரங்களை நீக்கும் வழிவகை குறித்து விவாதபூர்வமாகப் பேசுகிறார் அவர்.

"உங்களுக்கு வந்த துன்பங்கள் எல்லாமே நீங்கள் அதற்காக உங்களைத் தயார்படுத்திக் கொண்டதால்தான் வந்தவை என்பதை அறியுங்கள். ஒரு பாதியை நீங்கள் செய்தீர்கள். புற உலகம் மறுபாதியைச் செய்தது. இவ்வாறே துயரம் வந்தது.

இந்த ஆராய்ச்சியிலிருந்து ஒரு நம்பிக்கைக் கிரணமும் வருகிறது. என்னால் புறவுலகை அடக்க முடியாது. ஆனால், என்னுள் இருக்கின்ற எனது அக உலகம் என் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது.

தோல்விக்கு இரண்டும் தேவையானால், என் துயரத்துக்கு இரண்டும் காரணமானால் என் பக்கத்திலிருந்து நான் ஒத்துழைக்க மாட்டேன். அப்போது துயரம் எப்படி வரும்? உண்மையிலேயே என்னை நான் அடக்கினால் துயரம் ஒருபோதும் வராது. நமது குழந்தைப் பருவம் முதலே காலமெல்லாம் நமக்கு வெளியேயுள்ள ஏதோ ஒன்றின்மீது பழி சுமத்தவே பழக்கப்படுத்தப் படுகிறோம். எப்போதும் பிறரைத் திருத்தத்தான் கங்கணம் கட்டுகிறோமே தவிர, நம்மைத் திருத்திக்கொள்ள முயல்வதில்லை. நமது தகுதிக்கு ஏற்றதையே நாம் பெறுகிறோம்.

"உலகம் கெட்டது. நாம் மட்டும் நல்லவர்கள்' என்று சொன்னால் அது பொய். அப்படி ஒருபோதும் இருக்க முடியாது. கற்றுக்கொள்ள வேண்டிய முதல் பாடம் இதுவே. வெளியிலுள்ள எதையும் சபிக்காமலும் வெளியிலுள்ள ஒருவர் மீதும் பழி சுமத்தாமலும் இருக்கத் தீர்மானியுங்கள். எழுந்து நில்லுங்கள். பழியை உங்கள் மீதே சுமத்திக் கொள்ளுங்கள். எப்போதும் அதுவே உண்மை என்பதை அப்போது காண்பீர்கள். உங்களையே வசப்படுத்திக் கொள்ளுங்கள்! பிறகு எல்லா வெற்றிகளும் உங்களுக்கு வசமாகும்!'

விவேகானந்தரைப் பயிலும் இளைஞர்கள் அவரைப் பார்த்து பிரமித்தால் போதாது. அவரைப் பின்பற்றி தம் வாழ்வைச் செழுமைப்படுத்திக் கொள்ள வேண்டும். விவேகானந்தர் விரும்பியது அதைத்தான்.

இன்று விவேகானந்தர் எழுதிய நூல்களும் விவேகானந்தர் குறித்த நூல்களும் ஏராளமாகக் கிடைக்கின்றன; தமிழிலேயே கிடைக்கின்றன. விவேகானந்தரைப் பயின்றால் அவர் பின்பற்றப்பட வேண்டியவர் என்பதை நாம் புரிந்து கொள்வோம்.

அவரைப் பயில்வதென்பதும் அவர் சொன்ன கருத்துகளை அறிவதென்பதும் அவரைப் பின்பற்றுவதற்காகத் தான் என்பதையும் உணர்ந்துகொள்வோம். விவேகானந்தரைப் பின்பற்றுவதன் மூலம் உலகியல் வாழ்விலும் ஆன்மிக வாழ்விலும் ஒருசேர இளைஞர்கள் வெற்றிபெற முடியும். இளைஞர்களின் வாசிப்புக்காக விவேகானந்த இலக்கியம் காத்திருக்கிறது.

(இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள்)

கட்டுரையாளர்: எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com