புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

'நார்சிஸிஸ்ட்' பாதித்த டீம் லீடரை சமாளிக்கும் அற்புத ஐடியாக்கள்; ஒரு குட்டிக்கதையோடு!

அனைவருக்கும் ஸ்ரீராம நவமி வாழ்த்துக்கள். உலகிற்கு ஒழுக்கத்தை கற்பித்த அவதார புருஷன் ராமன் அவதரித்த நாள் இன்று. பகவான் ராமன் அருளால் நேர்மை, நீதி, நியாயம், ஒழுக்கம், அன்பு, அமைதி ஆகியவை நம்மைச் சுற்றி

News image
Updated On :5 ஏப்ரல் 2017, 8:57 am

சாது ஸ்ரீராம்

அனைவருக்கும் ஸ்ரீராம நவமி வாழ்த்துக்கள். உலகிற்கு ஒழுக்கத்தை கற்பித்த அவதார புருஷன் ராமன் அவதரித்த நாள் இன்று. பகவான் ராமன் அருளால் நேர்மை, நீதி, நியாயம், ஒழுக்கம், அன்பு, அமைதி ஆகியவை நம்மைச் சுற்றி வளரட்டும்.

உலகம் முழுவதும் இந்த புண்ணிய நாளை சிறப்பாக கொண்டாடினாலும், தமிழ் நாட்டை பொறுத்தவரை பெரும்பாலும் வீடுகளில் மட்டுமே கொண்டாடப்படுகிறது.

ஒரு நிறுவனம். அங்கு ராம நவமியை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அந்த ஆண்டும் ராம நவமியை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நுழைவாயிலில் இருந்த ராமர் படம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பூக்கள், தோரணம் என்று அலுவலகமே அமர்க்களப்பட்டது. புளி சாதம், தயிர் சாதம், கேசரி என்று ருசியான பிரசாதங்களுடன், பணியாளர்கள் புடை சூழ பூஜை நடந்தது. இது போன்ற பூஜைகளில் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியும் கலந்து கொள்வது வழக்கம். அன்றும் முதன்மை அதிகாரி கலந்து கொண்டார். இவர் கொஞ்சம் வித்தியாசமான அதிகாரி. அப்படியென்ன வித்தியாம் என்று கேட்கிறீகளா? அதைப் பற்றியதுதான் இந்தக் கட்டுரை. சரி மீண்டும் பூஜைக்கு வருவோம்.

முதன்மை அதிகாரியின் தலைமையில் பூஜை சிறப்பாக முடிந்தது. பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தார் பணியாளர் மிஸ்டர் வேம்பு. கூடியிருந்தவர்கள் மிஸ்டர் வேம்புவை பாராட்டினார்கள். சிலர் அவரின் கைகளை குலுக்கி பாராட்டுகளை தெரிவித்தனர். சிலர் அவரின் முதுகில் தட்டிக்கொடுத்தனர். பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருந்தார் மிஸ்டர் வேம்பு. ஆனால், முதன்மை அதிகாரி முகத்தில் எந்த சலனத்தையும் காட்டாமல் நடப்பவற்றையெல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார். சட்டென்று பேசத்தொடங்கினார்.

‘யார் ஏற்பாடுகளை செய்தது?' என்று சற்றே உயர்த்திய குரலில் கேட்டார் முதன்மை அதிகாரி.

அடுத்த கணம் அந்த இடமே அமைதியானது.

‘நான் தான்', என்றவாறு பவ்யமாக அவர் முன் நின்றார் மிஸ்டர் வேம்பு.

சட்டென்று நகர்ந்து பூஜை அறைக்கு பக்கத்தில் சென்றார் முதன்மை அதிகாரி. பூஜை அறையின் கதவுகளின் மேற்புறத்தில் தனது கைகளை கஷ்டப்பட்டு நுழைத்து அழுத்தமாக தேய்த்தார். அவர் கைகளில் அழுக்கு ஒட்டியது. அழுக்கு படிந்த விரல்களை பக்கத்தில் நின்றிருந்த மிஸ்டர் வேம்புவின் சட்டையில் துடைத்தார். மீண்டும் விரல்களை கதவின் இடுக்குகளில் தேய்த்தார். மீண்டும் அழுக்கடைந்த விரல்களை மிஸ்டர் வேம்புவின் சட்டையில் துடைத்தார். வேம்புவின் சட்டையில் அழுக்கு மூன்று கோடுகளாக பளிச்சிட்டது.

அங்கு கூடியிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்தனர். யாருமே வாய் திறக்கவில்லை. முதன்மை அதிகாரி பேசத் தொடங்கினார்.

‘மிஸ்டர் வேம்பு! பூஜை மற்றும் பிரசாத ஏற்பாடுகளை செய்வது பெரிய விஷயமல்ல. சுத்தம்தான் முக்கியம்', என்று சொல்லிவிட்டு விருட்டென புறப்பட்டார்.

முதன்மை அதிகாரி கோபப்படும்படியாக எதுவுமே அங்கு நடக்கவில்லை. அவர் சுத்தத்தின் பிரதிநிதியும் அல்ல. ஆனாலும் முதன்மை அதிகாரிக்கு ஏன் கோபம் வந்தது? அங்கிருந்தவர்களுக்கு மட்டுமல்ல, மிஸ்டர் வேம்புவுக்கும் அதற்கான காரணம் தெரியவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போனார் மிஸ்டர் வேம்பு. ராம நவமி கொண்டாட்டங்கள் காணாமல் போனது. மற்றவர்கள் பிரசாதங்களை சுவைக்கத் தொடங்கினார்கள். ஆனால் வருத்தத்தோடு தனது இருக்கைக்கு திரும்பினார் மிஸ்டர் வேம்பு.

அருகில் இருந்த சாது பேசினார்.

‘மிஸ்டர் வேம்பு! வருத்தப்படாதீங்க. ராம காரியத்தில் ஈடுபட்ட அணிலுக்கு மூன்று கோடுகள்தான் பரிசாக கிடைத்தது. இன்று உங்களுக்கும் மூன்று கோடுகள் கிடைத்திருக்கிறது. ராம காரியம் என்றாலே மூன்று கோடுகள்தான் பரிசாக கிடைக்கும் போலிருக்கு', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.

மிஸ்டர் வேம்பு சிரித்தார். அவரின் உதடுகள் மட்டுமே சிரித்தது என்பதை அந்த புன்னகை உணர்த்தியது. யாரும், யாருக்கும் எதிரியல்ல. யாருக்கும் யாரிடமும் வெறுப்பு இல்லை. ஆனால், மிஸ்டர் வேம்பு எல்லோர் முன்னிலையிலும் காயப்படுத்தப்பட்டார்.

மற்றொரு நாள். முதன்மை அதிகாரி அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தார். எதிரில் ஒரு பணியாளர் வந்து கொண்டிருந்தார்.

‘நரி இடம் போனால் என்ன! வலம் போனால் என்ன!' என்ற மனநிலை அந்த பணியாளருக்கு. முதன்மை அதிகாரியை கண்டவுடன் சத்தமில்லாமல் ஒரு ஓரமாக சென்றார். அவரை கடந்து சென்ற அதிகாரி சட்டென்று நின்றார். பணியாளரை நோக்கி திரும்பி அழைத்தார்.

பவ்யமாக எதிரில் வந்து நின்றார் பணியாளர்.

‘எதிரில் வருகிறேனே! எனக்கு ஏன் ‘குட் மார்னிங்' சொல்லவில்லை?' என்று கேட்டார் முதன்மை அதிகாரி.

முதலில் பதில் தெரியாமல் விழித்தார் பணியாளர். பிறகு பேசினார்.

‘ஏதே நியாபகத்தில வந்துட்டேன். ஸாரி சார். இனி இப்படி நடக்காது', என்றார் பணியாளர்.

‘நான் இந்த நிறுவனத்தின் முதன்மை அதிகாரி. அதாவது உனக்கு தெரியுமா?' என்று ஆரம்பித்தவர் கேள்விகளால் துளைத்தெடுத்தார். வார்த்தைகளால் பிய்த்து உதறிவிட்டு நகர்ந்தார். தலை தொங்கியபடி தனது இருக்கைக்கு திரும்பினார் பணியாளர்.

மற்றொரு சம்பவம். மிஸ்டர் சாது அந்த நிறுவனத்தின் பணியாளர். தனிப்பட்ட காரணங்களுக்காக வேலையை ராஜினாமா செய்தார். இதைக் கேள்விப்பட்ட முதன்மை அதிகாரி சாதுவின் இருக்கைக்கு வந்தார்.

எழுந்து நின்று ‘குட் மார்னின் சார்', என்றார் சாது.

சட்டென்று சாதுவின் பின் கழுத்தை பிடித்தார். பக்கத்து அறையில் அமர்ந்திருந்த குட்டி அதிகாரியின் அறைக்கு தள்ளிக் கொண்டு வந்தார். குட்டி அதிகாரியின் முன்னிலையில் சாதுவிடம் பேசினார்.

‘ராஜினாமா கடிதத்தை எப்ப திரும்ப வாங்க போறீங்க', என்றார் அதிகார தோரணையில்.

‘சில தனிப்பட்ட பிரச்னைகளுக்காக ராஜினாமா செய்திருக்கிறேன். ராஜினாவை திரும்ப பெற விரும்பவில்லை', என்றார் சாது.

சட்டென்று சாதுவின் கழுத்திலிருந்து கையை எடுத்தார் முதன்மை அதிகாரி. விருட்டென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

சில நாட்கள் சென்றன. முதன்மை அதிகாரியும், சாதுவும் எதிரெதிரே சந்தித்துக் கொண்டனர்.

‘குட் மார்னிங் சார்', என்றார் சாது.

‘ராஜினாமா செய்துட்டு வேறு எந்த நிறுவனத்துக்கு போறீங்க?' என்று கேட்டார் முதன்மை அதிகாரி.

‘இல்லை சார்! எந்த நிறுவனத்திற்கும் போகலை', என்றார் சாது.

சத்தமாக சிரித்தார் முதன்மை அதிகாரி.

‘If no job, your wife won't sleep with you', என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தார் முதன்மை அதிகாரி. உடனிருந்தவர்களும் சிரித்தனர்.

சாதுவை அசிங்கப்படுத்திய திருப்தியில் அந்த இடத்தை கடந்தார் முதன்மை அதிகாரி.

நடந்ததை பார்த்த ஒரு பணியாளர் சாதுவிடம் பேசினார்.

‘என்ன மிஸ்டர் சாது, இவ்வளவு அசிங்கமா பேசிட்டு போறாரே! உங்களுக்கு கோபமே வரலையா?', என்று கேட்டார் அந்த பணியாளர்.

‘நிச்சயமாக இல்லை. மன நோயாளியிடம் எப்படி கோபப்பட முடியும்!' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.

அடுத்தவர்களை சர்க்கஸ் விலங்குகளாக நினைக்கும் இத்தகைய ரிங் மாஸ்டர்களை அதிகாரியாக பெற்றவர்கள் மிகப் பெரிய புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

சாது சொல்லியதைப் போல முதன்மை அதிகாரி மன நோயாளியா? கிட்டத்தட்ட அப்படித்தான். இந்த முதன்மை அதிகாரிக்கு ஏற்பட்டிருப்பது Narcissistic Personality Disorder. இத்தகையவர்கள் நார்சிஸிஸ்டிக் (Narcissistic) என்று அழைக்கப்படுகிறார்கள். தன்னைப் பற்றிய உயர்வான மதிப்பீடு, அடுத்தவரை அசிங்கப்படுத்துவது இத்தகையவர்களின் அடிப்படை குணங்களாக இருக்கும். அதிகாரமிக்க பதவியில் இருப்பவருக்கு இந்த மன நோய் இருக்குமேயானால், அவர் கீழ் பணிபுரிபவர்களை மட்டுமல்ல, நிறுவனத்தையும் சேர்த்து இந்த நோய் ஆட்டிப்படைக்கும்.

நார்சிஸிஸ்டிக் பற்றி உலகமெங்கும் பல ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. ஆய்வுகளின் முடிவுகள் நமக்கு உணர்த்தும் சில விஷயங்களை பார்ப்போம்.

இவர்கள் அடுத்தவரை கவர்ந்திழுக்கும் ஆற்றல் படைத்தவராக இருப்பார். இவரை நம்பி எப்படிப்பட்ட காரியத்திலும் இறங்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவார். இப்படிப்பட்ட மனிதருடன்தான் பணிபுரிய வேண்டும் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவார். இத்தைகய நாடகங்கள் அதிக நாட்கள் தாக்குப் பிடிக்காது. அவருடைய கோர முகத்தை வெகு விரைவிலேயே வெளிப்படுத்துவார்.

முதல் முறையாக இத்தகையவர்களை சந்திக்கும் போது அவரின் வெளித்தோற்றமும் அணுகுமுறையும் ஒரு நல்ல மனிதரை சந்தித்த அனுபவத்தை நமக்கு கொடுக்கும். உள்ளே ஒளிந்திருக்கும் நச்சுப் பாம்பை உடனடியாக கண்டுபிடிக்க முடியாது.

இத்தகையவர்கள் அடிக்கடி தான் பணிபுரியும் நிறுவனத்தை மாற்றும் பழக்கமுடையவர்கள். அப்படி செல்லும் போது தனக்கு சாதகமான அடிமைகளையும், தன்னை துதிபாடும் கூட்டத்தையும் உடன் அழைத்துச் செல்வார். தன்னை பராக்கிரமசாலியாக சித்தரிக்க துதிபாடும் கூட்டத்தின் பங்கு அவசியம் என்று நினைப்பார்.

அடுத்தவர்களுக்கு சட்ட திட்டங்களையும் வகுப்பார். ஆனால் எந்த சட்ட திட்டமும் இவரை கட்டுப்படுத்தாது. இவர் கட்டுப்படமாட்டார்.

உடன் இருப்பவரை கெடுப்பதற்காக எப்படிப்பட்ட சதியையும் செய்ய தயங்காதவர். அடுத்தவரின் பரிதாப நிலையைப் பற்றியும் கவலைப்பட மாட்டார். அடுத்தவர்களின் சாதனைகளை தன்னுடையதாக காட்டிக்கொள்வார்.

தான் ஒரு அதிபுத்திசாலி என்று எல்லோரும் நம்ப வேண்டும் என்று நினைப்பார். அதற்காக எத்தகைய சித்து வேலைகளை செய்ய தயங்கமாட்டார். குப்பையை தாண்டிவிட்டு, கோபுரத்தை தாண்டினேன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வார்.

தன்னைச் சுற்றியே எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைப்பார். தனக்கே முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பார். “குப்பையில் கிடந்தால் செத்த எலியாகவும், கோபுரத்தில் இருந்தால் கலசமாகவும் இருக்க வேண்டும்” என்று நினைப்பார்.

தனக்கு சாதகமானவற்றை மட்டுமே அடுத்தவர்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார். மற்றவர்களின் உணர்வுகளுக்கு எந்த மரியாதையும் கொடுக்க மாட்டார். எந்த செயலாக இருந்தாலும் அதில் சுய நலம் மிகுதியாகவே இருக்கும். தன்னுடைய தனிப்பட்ட இலக்கிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்.

இத்தகையவர்களின் கீழ் பணியாற்றுவது எளிதானதல்ல. அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், அதை எப்படி கையாளலாம் என்பதை பார்ப்போம்:

அடுத்தவர் தன்னுடைய செயல்களை விரும்ப வேண்டும் என்று நினைப்பார். ஆகையால் இவரின் செயல்களை அடிக்கடி பாராட்டலாம். அவர் எடுக்கும் முடிவுகளை ரசிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால், தொடர்ந்து பாராட்டும் போது மற்றவர்களிடம் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும். ஆகையால், இத்தகையவர்களை கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்காமல், ஓரளவுக்கு நேர்மையையை கடைபிடிப்பதே உத்தமம்.

நார்சிஸிஸ்டுகளின் எல்லா குணங்களுமே மோசம் என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது. அவரிடமும் இருக்கும் மோசமான விஷயங்களையும், அவரின் திறமையையும் வித்தியாசப்படுத்தி பார்க்க வேண்டும்.

நார்சிஸிஸ்டுகளிடம் செய்யக்கூடாதவை எவை என்பதை பார்ப்போம்.

விமர்சனம் செய்யக்கூடாது. இத்தகையவர்கள் கோள்மூட்டுபவர்களை அதிகம் விரும்புவதால், நாம் செய்யும் விமர்சனம் இவரை சீக்கிரம் சென்றடைகிறது. பிறகு நாம் அவரின் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இவர்களிடம் கருணையெல்லாம் எதிர்பார்க்க முடியாது.

எனக்கு நேர்மையும், நியாயமும்தான் முக்கியம் என்று வசனங்களை பேசாதீர்கள். உங்களின் தனிப்பட்ட நலனை மனத்தில் வைத்துக்கொண்டு நாட்களை நகர்த்துங்கள். உங்களின் நேர்மையை இத்தகைய அதிகாரிகள் பாராட்டுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், அவர்களுக்கு நிறுவனத்தின் நலன் முக்கியமல்ல.

இத்தகைய அதிகாரிகளிடம் பணிபுரிய முடிவெடுத்துவிட்டால் உங்கள் நிம்மதியை தொலைக்க வேண்டியிருக்கும். ஆகையால், முதலில் அதற்கு உங்களை தயார் படுத்துக்கொள்ள வேண்டும். அதெல்லாம் முடியாது. இப்படிப்பட்ட வேலையே வேண்டாம் என்று நீங்கள் முடிவெடுக்கலாம். அது உங்களின் தனிப்பட்ட முடிவு. அவரவர் சகிப்புத்தன்மையைப் பொறுத்தது.

அவர் நிறுவனத்தின் அதிகாரி. நம்மைப் போல பலர் அவரிடம் பணிபுரிகிறார்கள். எல்லோரும் வேலையை உதறிவிட்டு செல்வதில்லை. மற்றவர்கள் அவரை எப்படி கையாள்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

வேலையை உதறுவது புத்திசாலித்தனமான முடிவல்ல. நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையை மனத்தில் கொண்டு பல்லைக் கடித்துக் கொண்டு காலத்தை நகர்த்த வேண்டும். நிறுவனத்திற்கு வெளியே நமக்கு பிடித்த நடவடிக்கைகளில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு நமது கவனத்தை திசை திருப்பிக் கொள்வது அவசியம்.

பணியிலும் தொடரவேண்டும், அதே நேரத்தில் அரசனின் அன்பையும் பெற வேண்டும். அதெப்படி! இதைப் பற்றி தெரிந்துகொள்ள இந்த குட்டிக் கதையை படிப்போம்.

ஒரு நாடு. அதை ஒரு நார்சிஸிஸ்ட் அரசன் ஆட்சி செய்து வந்தான். நாட்டில் கடும் வறட்சி. தன் மூன்று மந்திரிகளுடன் அரண்மனையின் பின்புறமுள்ள ஏரிக்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.

அப்போது முதலாம் மந்திரி பேசினார்.

‘அரசே! நாட்டில் கடும் வறட்சி வாட்டுகிறது. மக்கள் குடிதண்ணீருக்கே மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இந்த நிலையிலிருந்து மக்களை காப்பாற்ற அரண்மனைக்கு சொந்தமான இந்த ஏரியில் இருக்கும் நீரை மக்கள் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும்', என்றார் முதலாம் மந்திரி.

‘இது அரண்மனைக்கு சொந்தமான ஏரி. இந்த நீரை மக்கள் பயன்படுத்துவதற்கு யோசனை சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம்! நீ ஒரு மந்திரியா? இப்போதே உன்னை பதவி நீக்கம் செய்கிறேன். யாரங்கே! இவனை சிறையில் அடையுங்கள்', என்றார் அரசர். முதல் மந்திரி சிறைக்கு சென்றார்.

அடுத்து இரண்டாம் மந்திரியின் யோசனையை கேட்டார் அரசர்.

‘அரசருக்கு ஆதரவாக பேசாவிட்டால் முதல் மந்திரியின் நிலையே தமக்கும் ஏற்படும். ஆகையால், அரசனை மகிழ்விக்கும் ஒரு யோசனையை சொல்லி அவரின் அன்பை பெறுவோம்' என்ற முடிவுக்கு வந்தார் இரண்டாம் மந்திரி

‘அரசே! இது அரண்மனை ஏரி. இதை பயன்படுத்த யாரையும் அனுமதிக்ககூடாது. அதுமட்டுமில்லாது இந்த ஏரியின் அழகை நீங்களும், அரசியும் ரசிக்கும் வகையில் படகு சவாரியை தொடங்க வேண்டும். படகில் நீங்கள் இருவரும் பயணித்து இயற்கையை ரசிக்க வேண்டும்', என்றார் இரண்டாம் மந்திரி.

யோசித்தார் அரசர்.

‘யாரங்கே! இரண்டாம் மந்திரியை சிறையில் அடையுங்கள். இடுப்பு அளவுகூட தண்ணீர் இல்லாத ஏரியில் எப்படி படகு சவாரி செய்ய முடியும்? அப்படியே செய்தால், ‘நாட்டில் குடிக்க தண்ணீரில்லை, ஆனால், அரசன் படகு சவாரி செய்கிறான்', என்ற கெட்ட பெயர் எனக்கு ஏற்படும். என்னை மகிழ்விப்பதற்காக பொறுத்தமில்லாத யோசனையை நீ கூறியிருக்கிறாய். இது என்னை ஏமாற்றும் செயல்', என்று கோபப்பட்டார் அரசர்.

இரண்டாம் மந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்தது மூன்றாம் மந்திரி.

‘அரசே! ஏரி தங்களின் குடும்பத்திற்கு மட்டும் சொந்தமானது. அதை யாரும் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. ஏரியைச் சுற்றி நடைபாதைகளை அமைக்க வேண்டும். நிழற்குடைகளை அமைக்க வேண்டும். மான்கள், முயல்கள் போன்ற விலங்குகளை ஏரியைச் சுற்றி வளர்க்கலாம். நீங்களும், அரசியாரும் மாலை நேரங்களில் ஏரியைச் சுற்றி உலவும் போது உங்களின் மன அழுத்தம் குறைந்து உற்சாகத்தை கொடுக்கும். உங்களைப் போன்ற கடின உழைப்பாளிகளுக்கு மன அமைதிக்கென்று இப்படிப்பட்ட இடம் அவசியம்', என்றார்.

மகிழ்ந்து போனார் அரசர். பரிசுகளையும் பாராட்டுகளையும் கொடுத்து மூன்றாம் மந்திரியை மகிழ்வித்தார். இந்தக் கதையில் நாம் புரிந்து கொண்ட விஷயங்களை பார்ப்போம்.

நேர்மையாகத்தான் இருப்பேன். உண்மையை மட்டும் பேசுவேன்', என்ற கொள்கைகளோடு இருப்பவரானால், நார்சிஸிஸ்ட் அதிகாரியின் கீழ் நீங்கள் பணிபுரிய முடியாது. முதலாம் மந்திரியின் நிலையே உங்களுக்கு ஏற்படும்.

நேர்மை முக்கியமல்ல. அதிகாரியின் நம்பிக்கையை பெறுவதுதான் முக்கியம். அதே நேரத்தில் எந்த தருணத்திலும் ‘ஓவர் ஆக்ட்' பண்ணாதீர்கள். காரணம் நார்சிஸிஸ்ட்கள் புத்திசாலிகள். இந்த உண்மையை புரிந்து கொள்ளவில்லையென்றால் இரண்டாவது மந்திரியின் நிலையே ஏற்படும். ஆகையால் நேர்மையை பிடித்துக் கொண்டு கிணற்றில் இறங்குவதைவிட, யதார்த்தத்தை புரிந்து கொண்டு, அளவாக புகழ்ந்து அரண்மனையில் இடம் பிடியுங்கள்.

- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.