முல்லை பெரியாறு அணை பிரச்னையில் கேரள அரசின் தந்திரத்தை புரிந்து கொள்ள வேண்டும்

கேரள மாநிலத்தவர்கள் பல நட்சத்திர விடுதிகளையும், கட்டடங்களையும் கட்டி உள்ளனர். அவற்றுக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதி
முல்லை பெரியாறு அணை பிரச்னையில் கேரள அரசின் தந்திரத்தை புரிந்து கொள்ள வேண்டும்
Updated on
3 min read

"முல்லைப் பெரியாறு பிரச்னை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதியன்று நீதிபதிகள் சபர்வால், தக்கர், பாலசுப்பிரமணியம் ஆகிய மூவர் அமர்வு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உடனடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும், பின்னர் காலப் போக்கில் 152 அடி வரை உயர்த்தலாம் என்றும் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கைக் கொண்டு சென்றது. அந்த அமர்வு முல்லைப் பெரியாறு அணை வலுவையும், இரு மாநிலங்களுடைய நிலைப்பாட்டினையும் ஆய்வு செய்ய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த், ஏ.ஆர்.லட்சுமணன், கே.டி.தாமஸ் ஆகிய மூவர் குழுவை நியமித்தது. அந்த மூவர் குழு விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கிறது; நீர் மட்டத்தை உயர்த்திக்கொள்ளலாம். புதிய அணை தேவை இல்லை என்று தீர்ப்பளித்தது.

அதற்கு ஆதாரமாக முன்னர் உச்ச நீதிமன்றம் அமைத்த டாக்டர் டி.கே.மித்தல் கமிட்டி அறிக்கையையும், எஸ்.எஸ்.பிரார் கமிட்டி அறிக்கையையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் அந்த முடிவுக்கு வந்தது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டால், தண்ணீர் நிரம்பும் ஏரியின் கொள்ளளவு பகுதியில் கேரள மாநிலத்தவர்கள் பல நட்சத்திர விடுதிகளையும், கட்டடங்களையும் கட்டி உள்ளனர். அவற்றுக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதி, கேரள அரசு மிகவும் தந்திரமாக கேரள மாநிலத்துக்குள் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பரப்புக்கு அருகில் ‘பஸ் ஸ்டேஷன்’ என்ற ஒரு வளாகத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. ஆனால் அது பசுமைத் தீர்ப்பாயத்தால் தடுக்கப்பட்ட பின் பிரச்னையை உச்ச நீதிமன்றத்துக்கு கேரள அரசு கொண்டு சென்றது.

’பஸ் ஸ்டேஷன்’ என்று சொல்லும் இந்த வளாகத்தில் மூன்று நட்சத்திர ஹோட்டல்களையும், கேளிக்கை விடுதிகளையும், வணிக வளாகங்களையும் கட்ட முடிவு செய்து, 120 கோடி ரூபாய் ஒதுக்கீடும் செய்துள்ளது. இதன் முக்கிய நோக்கம், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது என்பதுதான்.

கேரள அரசின் பின்னணியில் அம்மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஸல் ஜாய் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கேரளத்தின் மூன்று கோடி மக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும். இதைத் தடுப்பதற்கான ஒரு அவசரத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ஆணையிட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.

கேரளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மனோஜ் ஜார்ஜ் உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார். அந்த மனுவில் அப்பட்டமான பொய்யைக் கூறியிருக்கிறார். முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக் இந்த அணை ஐம்பது ஆண்டுகளுக்குத்தான் வலுவாக இருக்கும் என்று கூறி உள்ளதாகவும், எனவே அணை எந்த நேரத்திலும் உடையலாம் என்றும், கோடிக்கணக்கான கேரள மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும், இந்த ஆபத்தைத் தடுக்க உச்ச நீதிமன்றம் ஆவன செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

 பென்னி குயிக் தான் கட்டிய அணை எந்தக் காலத்திலும் உடையாது என்றுதான் கூறி உள்ளார், ஆனால், அவரது கூற்றுக்கு நேர் மாறான பொய் தகவலை உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளார் கேரள வழக்குரைஞர். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இந்த வாதங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டு, பேரழிவு தடுக்கப்பட வேண்டும் என்றும், மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்றும் தனது ஆணையில் கூறியிருக்கிறார்.

காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் தீர்ப்பு தமிழக நலன்களுக்கு கேடாக அமைந்தது. முல்லைப் பெரியாறு பிரச்னையிலும் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் முறையான குழுக்களை அமைத்து திட்டவட்டமான தீர்ப்பை தந்த பின்னரும், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி 2018 ஜனவரி 11 இல் வழங்கிய தீர்ப்பு தமிழகத்துக்கு மிகவும் கவலை தருகிறது.

தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சரியான முறையில் வாதிடவில்லை. இப்பிரச்னையும் தமிழக மக்களுக்குத் தெரியவில்லை. தமிழகத்துக்கு குறிப்பாக முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் மேற்கொள்ளவிடாமல் பிரச்னையை அரசியல் சாசன அமர்வுக்கு எடுத்துச் செல்ல தமிழக அரசு முற்பட வேண்டும்

உலகத்தில் 44,400-க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. இந்தியாவில் 4,448 அணைகள் உள்ளன. தமிழ்நாட்டில் 90 அணைக்கட்டுகள் உள்ளன. எங்கும் பேரிடர் மேலாண்மை அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. 1990 முதல் இன்றுவரை முல்லைப் பெரியாறு அணை பகுதியில் 45 முறைகள் நில அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால் அணைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. முல்லைப் பெரியாறு அணையில் 104 அடி உயரம் வரை நிரந்தரத் தண்ணீர்த் தேக்கம் ஆகும். முல்லைப் பெரியாறு அணையின் கொள்ளளவு 10.5 டிஎம்சி ஆகும். இடுக்கி அணை 552 அடி உயரமும் 75 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பெரிய அணையாகும்.

முல்லைப் பெரியாறு அணையில் தமிழகம் 136 அடிக்கு மேல் தண்ணீரை உயர்த்தக் கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்டு வரும் கேரள அரசுக்கு சாதகமான நிலைமை உருவாக நாம் இடம் தரக்கூடாது. எனவே உச்ச நீதிமன்றத்தின் ஆணையை எதிர்த்து, பிரச்னையை அரசியல் சாசன அமர்வுக்கு தமிழக அரசு கொண்டுசெல்ல வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் வாதமாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com