நமது அரசியல் தலைவர்களும் சரி, ஊடகங்கள் உள்ளிட்ட அறிவுஜீவிகளும், வழிகாட்டிகளும் சரி, உணர்வுகளுக்கும், அரசியலுக்கும் முன்னுரிமை தந்து கொண்டிருக்கிறார்களே தவிர, இந்தியாவின் பொருளாதாரத்தைப் பற்றியோ, வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பற்றியோ அக்கறை செலுத்துவதாகவே தெரியவில்லை.
இந்தியாவின் ரூபாய் மதிப்பு சரிந்து கொண்டிருக்கிறது; வட்டி விகிதம் குறைக்கப்படுவதால் இந்தியாவிலிருந்து முதலீடுகள் திரும்பப் பெறப்படுகின்றன. இதெல்லாம் பிரதமரிலிருந்து பாமரன் வரை கட்சி வேறுபாடின்றி அனைவரையும் கவலையில் ஆழ்த்த வேண்டியதற்குப் பதிலாக, பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்தான் அனைவருக்கும் முக்கியமாக இருக்கிறது.
2013 ஆகஸ்டில் டாலரின் மதிப்பு ரூ.69-ஐ நெருங்கியது. இப்போது ரூ.67-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதாவது, மார்பளவுக்குத் தண்ணீர் வந்துவிட்ட நிலைமை. ரூபாயின் மதிப்புக் குறைந்து வருவதால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் மதிப்பு 40 டாலர் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தும், அதனால் இந்தியப் பொருளாதாரம் எந்தப் பயனும் அடையவில்லை.
நாம் சுதந்திரம் பெற்றது முதல் இன்றுவரை, ரூபாயின் நாணய மதிப்பை முறையாகவும் புத்திசாலித்தனமாகவும் நிர்வாகம் செய்து, அன்னிய நாணயங்களுடனான மதிப்புக்கு சமமாக வைத்திருக்கும் கலையைக் கற்றுக் கொள்ளவில்லை. 1947-இல் நாம் சுதந்திரம் அடைந்தபோது, ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ஒரு ரூபாய். இந்திய ரூபாய்க்கு சமமாக இருந்தது அமெரிக்க டாலரின் மதிப்பு. கடந்த 68 ஆண்டுகளில் ஏறத்தாழ 65 முறைக்கு மேல் மதிப்பு குறைந்து இப்போது ரூ.67 ஆகியிருக்கிறது.
இந்தியாவின் இன்றையப் பொருளாதார வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கையாளப்பட்ட பல நிதிக் கொள்கைகளும், பொருளாதார முடிவுகளும்தான். வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு மன்மோகன் சிங் அரசு அளித்த சலுகைகளும், அந்த அரசின் கொள்கை தோல்விகளும்தான் இன்றைய நிலைமைக்கு இந்தியாவைக் கொண்டுபோய்த் தள்ளி இருக்கிறது.
ஒருசில வணிகக் கூட்டாண்மை நிறுவனங்கள் (கார்ப்பரேட்டுகள்) 2008 - 2013 காலகட்டத்தில் ஆண்டொன்றுக்கு 142% அளவு லாபம் ஈட்டியிருக்கிறார்கள். அவர்களது நிகர லாபம் 40%-க்கும் மேல். இந்த வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களின் கொள்ளை லாபம் விலைவாசி உயர்வுக்குக் காரணமானது. பலவீனமான நுகர்வோர் சட்டங்களும், அவர்களது கொள்ளை லாபத்தைத் தடுத்து நிறுத்தத் தயாராக இல்லாத அரசும் நிலைமையை மோசமாக்கி, ரூபாயின் மதிப்பைக் குறைத்துவிட்டது.
சர்வதேச நிலவரங்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்றாலும்கூட, ஒரு தேசத்தின் பொருளாதாரம் சீர்குலைவதற்கு பலவீனமான அரசு நிர்வாகமும், சந்தை நிலவரத்தை ஊகபேர வர்த்தகர்கள் தீர்மானிக்க அனுமதிப்பதும்தான் முக்கியமான காரணங்கள். இதைப் பன்னாட்டு வணிகக் கூட்டாண்மை நிறுவனங்கள் பயன்படுத்தி, லாபம் சம்பாதித்து அந்த லாபத்தை எடுத்துச் சென்று விடுகின்றன.
வட்டி விகிதத்தைக் குறைக்கிறார்கள். இது ரூபாயின் மதிப்பைக் குறைப்பது மட்டுமல்ல, சேமிப்பாளர்களான பொது மக்கள், வட்டி விகிதக் குறைப்பால் கோடிக்கணக்கில் வருவாயை இழக்கிறார்கள். அவர்கள் வங்கிகளில் சேமிப்பாக வைத்திருக்கும் வைப்பு நிதியின் வட்டி வருவாய் குறைந்து விடுகிறது. அதேநேரத்தில், வங்கிகளில் கடன்கள் பெற்றுத் திருப்பிக் கொடுக்காத பெரிய நிறுவனங்களின் வாராக் கடன் அளவு உயர்ந்து கொண்டிருக்கிறது. அரசு தரும் புள்ளிவிவரப்படி, வாராக்கடன் ரூபாய் மூன்று லட்சம் கோடி என்றால், நிஜமான நிலைமை ரூபாய் ஐந்து லட்சம் கோடியாக இருக்கக் கூடும். வாராக் கடன் என்றால் பொது மக்களின் சேமிப்பு மடை மாற்றம் செய்யப்பட்டது என்று பொருள்.
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த நினைக்கிறது. இந்த நிலையில் நாம் வட்டி விகிதத்தைக் குறைத்தால், அன்னிய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், அதிக வருவாய் ஈட்டத் தங்கள் முதலீடுகளைத் திருப்பிப் பெற்று விடுவார்கள். பங்குச் சந்தை மிகப் பெரிய சரிவை சந்திக்கக் கூடும். போதாக்குறைக்கு ஏற்கெனவே நமது ஏற்றுமதிகள் குறைந்து கொண்டிருக்கின்றன.
ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, கடந்த மே மாதம் 350.9 கோடி டாலராக இருந்த அன்னிய நேரடி முதலீடு, ஜூன் மாதம் 174.9 கோடி டாலராக குறைந்துவிட்டிருக்கிறது. இந்தியாவில் ரூபாய் மதிப்பும் குறைந்துவருவதே கூட, அன்னிய நேரடி முதலீடுகள் குறைந்து வருவதற்கான காரணமாக இருக்கக் கூடும்.
நிலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் தொழில் துறை முடுக்கி விடப்பட்டு, வேலைவாய்ப்புகள் அதிகரித்தாக வேண்டும். தொழிற்சாலைகள் அதிகரிக்க வேண்டுமானால், நிலம் வேண்டும். நிலம் கையகப்படுத்தும் மசோதாவும் முடக்கப்பட்டு விட்டது. பள்ளிப்படிப்பு படித்து விட்டாலே போதும், இளைஞர்கள் வயலில் இறங்கி வேலை செய்யத் தயாராக இல்லை. விவசாய முன்னேற்றம் என்பதுகூட இனிமேல் பண்ணை விவசாயமாக இருந்தால் மட்டுமே சாத்தியம். அது வேலைவாய்ப்பை அதிகரிக்காது.
தொழில் துறை வளர்ச்சி, ஏற்றுமதி அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு அதிகரிப்பு, வேலைவாய்ப்பு அதிகரிப்பு இவற்றை உறுதிப்படுத்தாவிட்டால், இந்தியா மிகப் பெரிய பொருளாதாரச் சரிவை எதிர்கொள்ளக் கூடும். அரசியல் போட்டா போட்டிக்கான நேரமல்ல இது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.