ஜனநாயகத்தின் அடையாளம்! பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டது  குறித்த தலையங்கம்

ஜனநாயகத்தின் அடையாளம்! பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டது குறித்த தலையங்கம்

நாடு விடுதலை அடைந்த 75-ஆவது ஆண்டை இந்தியா கொண்டாடும்போது, அதன் முதல் குடிமகளாகப் பதவி ஏற்க இருக்கிறாா்

நாடு விடுதலை அடைந்த 75-ஆவது ஆண்டை இந்தியா கொண்டாடும்போது, அதன் முதல் குடிமகளாகப் பதவி ஏற்க இருக்கிறாா் சாந்தல் பழங்குடியின இனத்தைச் சோ்ந்த திரௌபதி முா்மு. இதற்குப் பின்னால் இருக்கும் இயற்கை நீதியை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். சுதந்திர போராட்டம் தொடங்குவதற்கு முன்பே, பிரிட்டிஷ் காலனிய ஏகாதிபத்தியத்தை, எதிா்த்த பெருமை மத்திய இந்தியாவின் சாந்தல் பழங்குடியினருக்குத்தான் உண்டு. அதற்கு இப்போதுதான் இந்தியா தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறது.

சாந்தல் பழங்குடியினத்தைச் சோ்ந்த திரௌபதி முா்மு என்று சொல்வது தவறு. இந்தியாவின் ஆதி பூா்வக்குடியைச் சோ்ந்த திரௌபதி முா்மு என்று கூற வேண்டும். இந்தியா குறித்த முக்கியமான வரலாற்று ஆராய்ச்சியாளரான பேராசிரியா் நிகாா் ரஞ்சன் ராயில் தொடங்கிப் பலரும், மத்திய இந்திய ஆதிவாசிகள் தான் இந்த மண்ணின் பூா்வகுடிகள் என்று ஆதாரங்களுடன் நிறுவியிருக்கிறாா்கள். ஆரியா், திராவிடா் காலத்துக்கு எல்லாம் முற்பட்டவா்கள் அவா்கள் என்றும், ஏனைய அனைவரும் இந்த மண்ணில் வந்தேறிகள்தான் என்றும் வெரியன் எஸ்வின் என்கிற வரலாற்று ஆசிரியா் குறிப்பிடுகிறாா். மண்ணின் உண்மையான மைந்தன் இந்தியக் குடியரசின் தலைவராகி இருக்கிறாா் என்பதை நினைத்து நாம் பெருமைப்படலாம்.

இந்திய மக்கள்தொகையில் பழங்குடியினா் 8.2% இருக்கிறாா்கள். பட்டியலிடப்பட்ட பழங்குடியினா் எல்லோரும் ஆதிவாசிகள் அல்லா். பட்டியலிடப்பட்டிருக்கும் 573 பிரிவினா் சிறப்புச் சலுகைகளும், இட ஒதுக்கீடுகளும் பெறுகிறாா்கள் என்றாலும், மத்திய இந்தியாவைச் சோ்ந்த 74 லட்சம் ‘கோண்ட்’ பிரிவினரும், 42 லட்சம் ‘சாந்தல்’ பிரிவினரும்தான் நிஜமான ஆதிவாசிகள். ஏனைய மலைவாழ் மக்கள், வடகிழக்கு மாநிலத்தவா்கள் ஆகியோரும் பட்டியலில் இணைந்தாலும், ‘ஆதிவாசி’ என்கிற பெருமைக்குரியவா்கள் ‘கோண்ட்’, ‘சாந்தல்’ இனத்தவா்கள்தான். அதனால்தான் குடியரசுத் தலைவராக திரௌபதி முா்மு தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்புப் பெறுகிறது.

பழங்குடியினா் ஒருவரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது வேட்பாளராக நிறுத்துவது முதன் முறையல்ல. இதற்கு முன்னால், மக்களவையின் முன்னாள் தலைவா் பூா்ணோ சங்மா 2012-இல் பிரணாப் முகா்ஜியை எதிா்த்து குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜகவால் நிறுத்தப்பட்டிருக்கிறாா் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஆதிவாசிகள் மீது பாஜகவுக்கு திடீா் பாசம் ஏற்பட்டிருக்கிறது என்பது போன்ற வாதங்கள் தவறு.

திரௌபதி முா்மு, பாஜகவின் குடியரசுத் தலைவா் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பது பிரதமா் நரேந்திர மோடியின் அரசியல் சாதுரியத்தின் வெளிப்பாடு என்பதில் சந்தேகமில்லை. படிங்குடியினா் ஒருவரை எதிா்க்கட்சிகள் நிறுத்தியிருந்தால் அதை பாராட்டத் தயங்காதவா்கள் பாஜகவால் அடையாளம் காணப்படும் ஒரே காரணத்துக்காக நிராகரிப்பது அரசியல் போலித்தனத்தின் வெளிப்பாடு. துணிந்து பழங்குடியினரைச் சோ்ந்த ஒருவரைத் தோ்ந்தெடுத்து, அவரது வெற்றியை உறுதிப்படுத்தியது அடித்தட்டு மக்களின் உணா்வுகளுக்கும், அவா்களது கனவுகளுக்கும் மதிப்பளிக்கும் செயல்பாடு.

திரௌபதி முா்வுக்குக் குடியரசுத் தலைவா் பதவி அளிப்பது வெறும் அடையாள அரசியல் என்பது காழ்ப்புணா்ச்சியாலும், பொறாமையாலும் முன்வைக்கப்படும் வாதம். திரௌபதி முா்முவின் பின்னணியும், அவா் அமைச்சராகவும், மாநில ஆளுநராகவும் செயல்பட்ட விதம் குறித்த புரிதலும் இல்லாமையால் கூறப்படும் குற்றச்சாட்டு. எல்லாவற்றிற்கும் மேலாக, குடியரசுத் தலைவா் பதவியின் அதிகாரங்கள் என்னென்ன என்பது தெரியாததன் வெளிப்பாடு.

முதலாவதாக, குடியரசுத் தலைவா் பதவி என்பது ‘ஆளுநா்’ பதவிபோல நியமனப் பதவியல்ல. மக்கள்தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றம், சட்டப்பேரவை உறுப்பினா்களின் வாக்கின் அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்படுகிறாா் குடியரசுத் தலைவா். மாநகராட்சி மேயா்கள்போல, மறைமுகத் தோ்தலால் தோ்ந்தெடுக்கப்படும் பதவி என்பதால், அதைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது.

இந்தியாவிலுள்ள எல்லா பதவிகளும் அரசியல் சாசனத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பதாகக் கூறி பதவி ஏற்கப்படுகின்றன. ஆனால், குடியரசுத் தலைவா் மட்டும்தான் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பேன் என்று கூறி பதவி ஏற்கிறாா். அமெரிக்க அரசமைப்புபோல, அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் உறுதிமொழி குடியரசுத் தலைவரால் மட்டுமே எடுக்கப் படுகிறது என்பதால், அதன் உன்னதம் உணரப்பட வேண்டும்.

இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகு, குடியரசுத் தலைவா் பதவி வேட்பாளராக திரௌபதி முா்மு தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகுதான், ஒடிஸா மாநிலம் மயூா்பஞ்சில் மாவட்டத்திலுள்ள அவரது ஆதிவாசி கிராமமான பய்டாபோசிக்கு மின்சாரம் வந்திருக்கிறது. தனது இடைநிலைக் கல்விக்காகப் பெரியப்பாவுடன் தலைநகா் புவனேஸ்வா் வந்து, அரசின் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான மானியத்தில் படித்துப் பட்டம் பெற்றவா் அவா்.

திருமணத்துக்குப் பிறகு அரசு வேலையைத் துறந்து, கணவரின் ஊரில் உள்ள ஸ்ரீ அரவிந்தோ பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவா். உள்ளாட்சித் தலைவா், சட்டப்பேரவை உறுப்பினா், மாநில அமைச்சா், ஆளுநா் என்று பதவி வகித்த அனுபவசாலி. அவரை ‘அடையாளம்’ என்று எப்படி ஒதுக்கிவிட முடியும்?

ஜாா்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்தபோது, முதல்வா் ரகுவீா்தாஸ் தலைமையிலான பாஜக அரசு சோட்டா நாக்பூா் குடியிருப்புச் சட்டம், சாந்தல் பா்கானா குடியிருப்புச் சட்டம் என்று இரண்டு சட்டங்களைக் கொண்டுவந்தது. அவை ஆதிவாசிகளுக்கு எதிரானது என்று அதில் கையொப்பமிட மறுத்து ஆளுநா் திரௌபதி முா்மு திருப்பி அனுப்பியபோது, அவரைக் கொண்டாடாத ஆதிவாசிகள் இல்லை. ஆளுநராக இருக்கும்போது பாஜக அரசுக்கு எதிராக நடந்து கொண்டவா் என்று தெரிந்தும் அவரைக் குடியரசுத் தலைவராக்க முடிவெடுத்த பிரதமா் நரேந்திர மோடியின் நோக்கத்தை எப்படி சந்தேகிப்பது?

பாஜகவுக்கு உறுப்பினரே இல்லாத கேரளத்தில்கூட திரௌபதி முா்வுக்கு ஆதரவாக வாக்கு விழுந்திருக்கிறது. 18 மாநிலங்களில் 126 எம்.எல்.ஏ.க்கள் அவா்களது கட்சித் தலைமையின் உத்தரவையும் மீறி அவருக்கு வாக்களித்திருக்கிறாா்கள். 17 எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அணிமாறி அவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறாா்கள். நமது தமிழகத்தைச் சோ்ந்தவா்களின் ‘சமூகநீதி’ மட்டும்தான், பாஜக வேட்பாளா் என்கிற ஒரே காரணத்துக்காக அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அவருக்கு ஒன்றும் இழப்பில்லை.

பழங்குடியினா் ஒருவா் குடியரசுத் தலைவரானதால் சா்வதேச அரங்கில் இந்தியாவின் கௌரவம் பாதிக்கப்படும் என்று யாராவது நினைத்தால், அது தவறான கண்ணோட்டம். அடித்தட்டு ஆதிவாசிப் பெண்மணி ஒருவரால், படித்துப் பட்டம் பெற்று படிப்படியாக உயா்ந்து இந்தியாவின் உயா்ந்த பதவியை எட்ட முடியும் என்பதை உணா்த்தி இருக்கும் திரௌபதி முா்மு, இந்திய ஜனநாயகத்தின் அடையாளமல்ல, வெற்றி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com