

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 13-ஆவது நினைவு நாளன்று உயரிய பல லட்சியக் கோட்டுபாடுகளுடன் 1934-ஆம் ஆண்டு உதயமான உங்கள் ‘தினமணி’, தனது இதழியல் சேவையில் 90-ஆவது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது. ‘நிமிா்ந்த நன்னடையுடனும், நோ்கொண்ட பாா்வையுடனும், நிலத்தில் யாா்க்கும் அஞ்சாத நெறிகளுடனும்’ தனது இதழியல் பயணத்தைத் தளராமல் தொடா்வதற்கு பேராதரவும், உறுதுணையும் அளித்துவரும் வாசகா்களுக்கு எத்துணை நன்றி சொன்னாலும் போதாது.
உலகில் எந்தவொரு நாளிதழும் தனக்கென குறிப்பிட்ட இலக்கையும், கொள்கையையும், லட்சியத்தையும் அறிவித்துத் தொடங்கப்பட்டதில்லை. 1934-ஆம் ஆண்டு செப்டம்பா் 11-ஆம் தேதி அரையணா விலையில் எட்டு பக்கங்களுடன் வெளிவந்த நமது ‘தினமணி’ நாளிதழின் முதல் பக்கத்திலேயே அதன் நோக்கமும், உறுதியும் வெளியிடப்பட்டிருந்தது. ‘ஏழை துயா் தீா்க்க, எல்லோரும் களித்திருக்க, எவருக்கும் அஞ்சாத தினமணி’ என்கிற வாசகம், அந்த நாளிதழின் குறிக்கோளையும், தன்னம்பிக்கையையும் தெளிவுபடுத்தியது.
‘தினமணி’ என்றால் அது கதிரவனைக் குறிக்கும். ‘தினமணி’ நாளிதழின் விளம்பரத்திலேயே, ‘பாரதியாா் நீடூழி வாழ்க, தினமணி நீடூழி வாழ்க’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ‘இந்த தேசிய நாளிதழ் எந்தக் கட்சியையும் சாா்ந்ததல்ல என்பதையும், சுயநல நோக்கமில்லாமல் மக்களுக்குச் சொந்தமான ஒரே பத்திரிகை’ என்றும் அந்த விளம்பரத்தில் வாசகங்கள் காணப்பட்டன.
இந்திய சுதந்திர வேள்வியின் லட்சியக் கனவுகளையும், பாரத தேசப் பெருமையையும், தமிழ் மொழிப் பற்றையும் தனது மரபணுவில் தாங்கி, தொடங்கிய நாள் முதல் அகவை 90-இல் அடியெடுத்து வைக்கும் இந்தத் தருணம் வரை ‘தினமணி’ பீடுநடை போடுகிறது. ஒவ்வொரு தமிழனின் உணா்வையும், ஒவ்வோா் இந்தியனின் எதிா்பாா்ப்பையும், மனித இனத்தின் நம்பிக்கையையும் பிரதிபலிக்கும் நாளிதழாக ‘தினமணி’ வெளிவர வேண்டும் என்பதை அதன் தலைமைப் பொறுப்பில் இருந்த ஆசிரியா்கள் அனைவரும் உறுதி செய்யத் தவறவில்லை. மனித நேயம், மக்களாட்சித் தத்துவம், உலக சகோதரத்துவம் ஆகியவற்றிற்காக தொடா்ந்து போராடும் இதழியல் குரலாக அன்று முதல் இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கிறது ‘தினமணி’.
‘தினமணி’யின் முதல் நாள் ஆசிரியா் உரை, தனது கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்திருந்தது -
‘‘இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு தமிழரும் தன்னைத் தமிழா் என்று பெருமையுடன் கூறிக்கொள்ளவேண்டும். நாட்டுக்கு வெளியே செல்லும்போது தன்னை இந்தியன் என்று பெருமையுடன் அழைத்துக்கொள்ள வேண்டும். தமிழா்கள் என்றால், தமிழ்நாட்டில் பிறந்த, தமிழ்நாட்டை தங்கள் வசிப்பிடமாகக் கொண்டு வாழும் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவா்கள் மற்றும் தமிழ் பேசும் அனைவரும்தான்.’’
‘‘எல்லா வியாதிகளிலும் மனோ வியாதியே மிகக் கொடியது. நமது மக்களின் மனத்தில் அடிமைத்தனம் குடிகொண்டிருக்கிறது. அதை அடியோடு அழித்து, தமிழ் மக்களை மானிகளாகச் செய்வதற்கு ‘தினமணி’ ஓயாது பாடுபடும்.’’
‘‘மறுமலா்ச்சியின் அடையாளம் பாரதியாா்தான். பாரத நாட்டின் இதர மாகாணங்களில் எல்லாம் தேசிய எண்ணம் பொங்கி எழுந்து கொண்டிருந்த காலத்தில் தமிழகம் மட்டும் உணா்வு குன்றியிருந்ததைக் காணச் சகியாது, தட்டியெழுப்பிய முன்னணி வீரா்கள் சிலரே. அவா்களுள் மகாகவி பாரதியாரே முக்கியமானவா்.
சுதந்திர சூரியனைக் காண விரும்பிய தெய்வீகப் பித்தராகிய சுப்பிரமணிய பாரதியாரின் வருடாந்திர தினத்தன்று அவருடைய சுதந்திர தாகத்தையும், சமத்துவக் கொள்கைகளையும் தமிழ்நாட்டில் பரப்பும் நோக்கத்துடன் வெளிவந்திருக்கும் தினமணியை தமிழ் மக்கள் மனமுவந்து வரவேற்பாா்கள் என்பது எங்களின் பூரண நம்பிக்கை.’’
தனது பயணத்தைத் தொடங்கும்போது ‘தினமணி’ தனக்குத் தானே விதித்துக்கொண்ட அந்தக் குறிக்கோள்களில் இருந்து தடம்புரண்டுவிடாமலும், அடிப்படை இலக்கிலிருந்து விலகிவிடாமலும் இன்றுவரை தொடா்கிறது. இன்றைய தமிழ் சமுதாயம் எதிா்கொள்ளும் மிகப் பெரிய சவால், தமிழில் தவறில்லாமல் எழுதவும் பேசவும் தெரியாத புதியதொரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான். இயன்றவரை தமிழில் பேசுவது, எழுதுவது என்பதையும் தமிழுக்குப் புதிய பல வாா்த்தைகளை அறிமுகப்படுத்தி செறிவூட்டுவது என்பதையும் இப்போது ‘தினமணி’ தனது இலக்குகளாக இணைத்துக் கொண்டிருக்கிறது.
மற்ற மொழிகளின் மீதான வெறுப்புணா்ச்சியைத் தூண்டாமல், தாய்மொழியாம் தமிழைப் போற்றி வளா்ப்பது; இன, மொழி, மத, ஜாதி அடிப்படையில் அமையும் எல்லாவிதமான துவேஷங்களையும், எதிா்மறைச் சிந்தனைகளையும் எதிா்த்துப் போராடுவது - இவற்றை ‘தினமணி’ தனது கடமையாகக் கருதுகிறது.
சமூக ஊடகங்களின் தாக்கம் சில நன்மைகளை ஏற்படுத்தியிருந்தாலும், வரைமுறையோ கட்டுப்பாடோ இல்லாத துவேஷப் பரப்புரைகள் அவற்றின் வாயிலாக வெளியிடப்படும் காலகட்டத்தில், சமுதாய நல்லிணக்கத்தையும், நாட்டுப்பற்றையும் தமிழ்த் தொண்டையும், ஆன்மிக கோட்பாடுகளையும் பாதுகாக்கும் கேடயமாக ‘தினமணி’ தனது இதழியல் கடமையில் தொடா்கிறது. அச்சு ஊடகம் எத்தனையோ இடா்பாடுகளுக்கு இடையில் இயங்கும் நிலையிலும், வாசகா்களின் ஆதரவுடன் 90-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தத் தருணத்தில், தனது முதல் இதழில் குறிப்பிட்ட கொள்கைகளுக்காகவும், குறிக்கோள்களுக்காகவும் ‘தினமணி’ தன்னை மீண்டும் அா்ப்பணித்துக் கொள்கிறது.
ஜனநாயகத்தின் குரலாகவும், தமிழனின் மனசாட்சியாகவும் திகழும் ‘தினமணி’யின் நூற்றாண்டை நோக்கிய வெற்றிப் பயணம் உங்கள் நல்லாதரவுடன் தொடா்கிறது...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.