விபத்தா? சதியா?

இப்ராஹிம் ரய்சி
இப்ராஹிம் ரய்சி
Updated on
2 min read

ஈரான் நாட்டின் எட்டாவது அதிபர் இப்ராஹிம் ரய்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணமடைந்தது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அண்டைநாடான அஜர்பைஜானின் எல்லையில் உள்ள அராஸ் ஆற்றில் இரு நாடுகளும் இணைந்து கட்டிய மூன்றாவது அணையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு விட்டு ஈரானின் தப்ரீஸ் நகருக்கு திரும்புகையில் மூடுபனி சூழ்ந்த மலைப்பாங்கான பகுதியில் ஹெலி காப்டர் விபத்துக்குள்ளானது. இதில் ஈரான் அதிபர் ரய்சி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

முன்னெப்போதும் இல்லாத வகையில், அண்மைக்காலமாக ஈரான் முக்கியமான பிரமுகர்கள் பலரை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ராணுவத் தளபதியாக இருந்த காசிம் சுலைமானி, இராக் தலைநகர் பாக்தாதுக்கு கடந்த 2020 ஜனவரி 3-ஆம் தேதி சென்றபோது அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அதே ஆண்டு நவம்பர் 27-இல், ஈரானின் அணுசக்தி திட்டத்தின் தலைவரான மோசென் ஃபக்ரிஸாதே அந்நாட்டின் தலைநகரான டெஹ் ரானின் புறநகர்ப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்ன ணியில் இஸ்ரேல் இருந்ததாக ஈரான் குற்றஞ்சாட்டியது. ஹமாஸ் . இஸ்ரேல் போர் கடந்த ஆண்டு அக். 7-இல் தொடங்கிய பின், முக்கிய மான ராணுவத் தளபதிகளை ஈரான் இழந்துள்ளது.

இந்தச் சூழலில் அந்நாட்டின் அதிபர் ரய்சி விபத்தில் உயிரிழந் திருப்பது அந்நாட்டில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

மஷாத் என்ற ஊரில் சாதாரண மதபோதகரின் மகனாக 1960-இல் பிறந்த ரய்சியின் வளர்ச்சி வியப்பை ஏற்படுத்தக் கூடியது. தொடக்கத் தில் இருந்தே மதக் கல்வி புகட்டப்பட்ட அவருக்கு 18 வயதானபோது, அயதுல்லா கொமேனியின் தலைமையில் இஸ்லாமிய புரட்சி வெடித்தது. அதில் தீவிரமாகப் பங்கேற்ற அவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பலனாக, 21 வயதிலேயே அவர் இரண்டு மாகாணங்களின் நீதித் துறை அதிகாரியானார்.

1988-இல் மக்கள் முஜாஹிதீன் அமைப்பு உள்பட பல்வேறு ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த அரசியல் கைதிகள் குறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதில் ரய்சியும் இடம்பெற்றிருந்தார். அப்போது 5 மாதங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

2016-இல் இமாம் ரேஸா அறக்கட்டளையின் தலைவராக ரய்சியை அந்நாட்டின் தலைமை மத குருவான அயதுல்லா அலி கமேனி அறிவித் தபோது, ரய்சி மிகுந்த அனுபவசாலி மட்டுமல்ல, மிகவும் நம்பத் தகுந் தவர் என்று புகழாரம் சூட்டினார்.

அவ்வளவு எளிதாக யாரையும் நம்பாத, பாராட்டாத கமேனியின் நம் பிக்கைக்கு உரியவரான ரய்சி 2021 ஜூனில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 72 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அப்போது முதல் அவரது செயல்பாடுகள் எதிரி நாடுகளின் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

இவருக்கு முன்பு அதிபராக இருந்த, மிதவாதியாக அறியப்படும் ஹஸன் ரௌஹானி 2015-இல் அமெரிக்காவுடன் ஏற்படுத்திக் கொண்ட அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் 2018-இல் ரத்து செய்ததுடன் ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை விதித்தார்.

இதன் காரணமாக, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சூழலில் அதிபரான ரய்சி மத அடிப்படைவாதியாக அறியப் படுபவர். இவரது பதவிக் காலத்தில் அடிப்படை உரிமைகள் மறுக்கப் படுமோ என்ற அச்சமும் அடிப்படைவாதம் வலுப்பெறுமோ என்ற அச்சமும் எழுந்தன.

அதற்கேற்ப, கடந்த 2022 செப்டம்பரில், ஹிஜாப் அணியாமல் சென்ற மாஷா அமினி என்ற 22 வயதுப் பெண் காவல் துறை விசார ணையின்போது உயிரிழந்தார். இதைக் கண்டித்து நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது. அப்போது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வரும் ஹமாஸ், ஹிஸ் புல்லா போன்ற இயக்கங்களுக்கு ரய்சி ஆதரவுக் கரம் நீட்டினார். இதற்கு முன்பும் இதுபோன்ற அமைப்புகளை ஈரான் ஆதரித்திருந்தபோதும், முதல் முறையாக நேரடியாக இஸ்ரேல் மீது கடந்த ஏப்ரலில் ஈரானில் இருந்து ட்ரோன் மூலம் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

அவர் பதவியேற்ற பின், அணுசக்தித் திட்டங்களின் மேம்பாடு சூடு பிடித்தது. அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு எதிரான நிலைப் பாட்டைக் கொண்ட சீனா, ரஷியாவுடன் உறவை மேம்படுத்தினார். உக்ரைனுடன் ரஷியா போரைத் தொடங்கியபோது, அந்நாட்டுக்கு கப்பலில் ஆயுதங்களை ஈரான் அனுப்பியது உக்ரைன் ஆதரவு மேற் கத்திய நாடுகளுக்கு எரிச்சலூட்டியது.

இஸ்ரேலுடனான அஜர்பைஜானின் ராஜீய உறவு, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அஜர்பைஜான் தூதரகத்தின் மீது 2023 ஜனவரி 27-இல் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் போன்றவை காரணமாக இருநாட்டு உறவு சீர்குலைந்துள்ளது.

இஸ்ரேல் போர், அஜர்பைஜானுடனான உறவு சீர்குலைவு போன்ற சூழலில், ஹெலிகாப்டர் விபத்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி யுள்ளது. இந்த விபத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இது விபத்தா அல்லது சதியா என்பதற்கு அடுத்தடுத்த விசாரணைகளின் முடிவுகள் பதில் சொல்லும்.

அதிபராவதற்கு முன்பும், அதிபரான பின் கடந்த மூன்றாண்டு களிலும் ரய்சியின் தீவிர செயல்பாடுகள் காரணமாக அயதுல்லா கமேனிக்குப் பிறகு அவர் ஈரானின் தலைமை மத குருவாக நியமிக்கப் படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் மரணம் நிகழ்ந் துள்ளது. நெருக்கடியான இந்த காலகட்டத்தில் அவரது இறப்பு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com