
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள நேரடி மோதல் மேற்கு ஆசியாவில் ஏற்கெனவே நிலவிவரும் பதற்றத்தை மேலும் பலமடங்கு அதிகரித்திருக்கிறது.
ஏவுகணைகள், ட்ரோன்கள், போர் விமானங்கள் மூலம் இருநாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொள்வதும், இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டிருப்பதும் உலகளாவிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரான்- அமெரிக்கா இடையே ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நேற்று தொடங்க இருந்த அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான 6-ஆவது சுற்று பேச்சுவார்த்தைக்கு இந்த மோதல் முட்டுக்கட்டை போட்டிருக்கிறது. ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு, மற்றொருபுறம் இஸ்ரேல் தாக்குவதை அமெரிக்கா வேடிக்கை பார்ப்பதுதான் ஈரானின் கோபத்துக்கும். ஆதங்கத்துக்கும் காரணம்.
இஸ்ரேல்-ஈரான் இடையிலான அண்மைக்கால பதற்றம் 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதலில் ஈரான் புரட்சிகர காவல்படையின் மூத்த கமாண்டர்கள் இருவர் உள்பட ஏழு அதி காரிகள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக ஈரான் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது சிறிய அளவில் தாக்குதல் நடத்தியது.
இதற்கு அடுத்தகட்டமாக, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனீயே கடந்த ஆண்டு ஜூலையிலும், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கடந்த ஆண்டு செப்டம்பரிலும் இஸ்ரேல் நடத் திய தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
தங்களது ஆதரவு பெற்ற அமைப்புகளின் தலைவர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு ஈரானின் ராணுவக் கட்டமைப்புகளை இஸ்ரேல் தாக்கியது.
இஸ்ரேலின் இப்போதைய 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்கிற பெயரிலான ஈரானுக்கு எதிரான நடவடிக்கை முழுக்க முழுக்க ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகளுக்கு வைக்கப்பட்ட குறியாகத் தான் தெரிகிறது. ஈரானிடம் 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் போதிய அளவு கையிருப்பு உள்ளது. இதை அணுஆயுதமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளைத்தான் ஈரான் மேற்கொள்கிறதோ என்கிற சந்தேகமே இஸ்ரேலின் தாக்குதலுக்கு முக்கியக் காரணம்.
ஈரான் ஒருவேளை அனுகுண்டு தயாரித்துவிட்டால் அது தனக்கு பேராபத்து என்று இஸ்ரேல் கருதுகிறது அதைத் தடுக்கும் நோக்கத்தில்தான் ஈரானின் அணுசக்தி தளங்களைக் குறிவைத்து தாக்கியிருக்கிறது. டெஹ்ரானில் இருந்து 225 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நடான்ஸ் அணுசக்தி தளத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால், அந்தத் தளத்தைச் சுற்றி கதிர்வீச்சு அளவில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், அந்தத் தாக்குதல் அதிர்ச்சிக்குரிய ஒன்று.
எந்த ஒரு போரிலும் அணுசக்தி கட்டமைப்புகள் தாக்கப்படக்கூடாது என சர்வதேச அணுசக்தி முகமை (ஐஎஇஏ) வலியுறுத்தி வருகிறது. அவ்வாறு அணுசக்தி கட்டமைப்புகள் தாக்கப்பட்டால், அது அணுசக்தி பாதுகாப்பு நடவடிக்கைகளில் மட்டுமன்றி, பிராந்திய சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிலும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.
இது தெரிந்திருந்தும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலைப் பொறுப்பின்மையின் உச்சம் என்றுதான் கூறவேண்டும். ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதலுக்கு தாங்கள் எந்த உதவியும் செய்யவில்லை என்கிற அமெரிக்காவின் அவசர விளக்கம் நம்பும்படியாக இல்லை. இஸ்ரேலின் தாக்குதல் திட்டம் குறித்து அமெரிக்காவுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து அமெரிக்க அதிகாரிகள் வெளியேற வேண்டும் என அதிபர் டிரம்ப் உத்தரவிட்ட மறுநாளே இஸ்ரேலின் தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது என்பதிலிருந்து அது உறுதியாகிறது.
ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்கு தல் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்பதுதான் அமெரிக்காவின் நிலைப்பாடாக இருந்துவந்தது. கடந்த மே மாதம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அதிபர் டிரம்ப் நேரடியாகவே இதுகுறித்து வலியுறுத்தியிருந்தார்.
'இப்போது ஈரான் மீது இஸ்ரேல் நடத் தியுள்ள தாக்குதல் உலக அமைதிக்கான மிக முக்கிய நகர்வு. இதன் மூலம் ஈரானின் அணு ஆயுதக் கனவு முடிவுக்கு வந்தது' என்கிற அதிபர் டிரம்ப்பின் கருத்து முரண்பாடாக இருக்கிறது. அமெரிக்கா-ஈரான் இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் 2015- ஆம் ஆண்டு கையொப்பமானது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கா மல் இருக்க வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம். அந்த ஒப்பந்தம் பலவீனமாக உள்ளதாகக் கூறி, டிரம்ப் தனது முதல் ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார். இப்போது அமெரிக்கா- ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருப்பதன் பின்னணி குறித்துப் பல சந்தேகங்கள் எழுகின்றன.
இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தாதவரை பேச்சுவார்த்தைக் குத் திரும்ப முடியாது என ஈரான் அறிவித்திருக்கிறது. அணுசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதலால் நெருக்கடிக்கு பணிந்து அணு சக்தி ஒப்பந்தத்தை ஈரான் ஏற்றுக்கொள்ள நேரிடும் என அமெரிக் காவோ, இஸ்ரேலோ எதிர்பார்த்தால் அது எதிர்மறையாக முடிவதற்கான வாய்ப்புதான் அதிகம்.
மோதலை அதிகரிக்காமல் நிதானமாகச் செயல்படுவதும் பேச்சு வார்த்தை மேற்கொள்வதும் இஸ்ரேல், ஈரான் இரு நாடுகளுக்குமே நல்லது.மேற்கு ஆசியாவில் மோதல் அதிகரிக்காமல் பதற்றத்தைத் தணிப்பதில் அமெரிக்கா முனைப்புக் காட்ட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.