
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், போராடி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை சமாதானப்படுத்தும் வகையில் அண்மையில் நிறைவடைந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் சில அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
2 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்றும், பண்டிகைக்கால முன்பணம் 10,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாகவும், திருமண முன்பணம் ரூ. 5 லட்சமாகவும், பொங்கல் பரிசுத் தொகை ரூ. 500-லிருந்து ரூ.1,000-ஆகவும், ஓய்வூதியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.4,000-லிருந்து ரூ.6,000-ஆகவும், குழந்தைகளின் உயர் கல்விக்கான முன்பணம் தொழில் படிப்புகளுக்கு ரூ. ஒரு லட்சமாகவும், கலை, அறிவியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூ.50,000-ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருக்கிறார்.
மேலும், நிறுத்திவைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பை சரண்செய்து பணப் பலன் பெறும் நடைமுறை வரும் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும், ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆராய மாநில அரசால் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை வருகிற செப்டம்பர் 30-க்குள் அளிக்க அறிவுறுத்தப்படும் என்றும், பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக் காலம் அவர்களது பதவி உயர்வுக்கான தகுதியைப் பாதிக்காத வகையில் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.
முதல்வரின் இந்த அறிவிப்புகளில் சிலவற்றை அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்கள் வரவேற்றுள்ளன. அதேநேரத்தில், அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாக்கிக் கொள்வது தவிர, ஏனைய அறிவிப்புகள் அரசிடமிருந்து கடன் பெற்று அதைத் திரும்பச் செலுத்துவதாகும் என இந்தச் சங்கங்களின் நிர்வாகிகள் விமர்சிக்கின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற தங்களது நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பாக முதல்வர் உறுதியான அறிவிப்பை வெளியிடவில்லை என்பதும் அவர்களின் குறை.
ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு தொடர்பான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை; இந்தக் குழு இதுவரை ஒருமுறைகூட ஆலோசனை நடத்தவில்லை; இத்தகைய நிலையில் இந்தக் குழு வருகிற செப்டம்பர் இறுதிக்குள் அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்படும் என்ற அறிவிப்பு வெறும் கண்துடைப்பு என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, வரையறுக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. ஆனால், திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. 1-4-2003-க்கு முன்னர் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியமும், 1-4-2003 முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 6,94,174 ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 43,912 ஓய்வூதியதாரர்களும் பயனடைந்து வருகின்றனர். வரையறுக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 2024-25-ஆம் ஆண்டில் மட்டும் பணி ஓய்வு பெற்ற 19,880 பேருக்கு சுமார் ரூ.7,591 கோடி ஓய்வூதியமாக வழங்கப்பட்டுள்ளது. சென்ற நிதியாண்டில் 6,413 ஓய்வூதியதாரர்கள் காலமானதால், அவர்களது குடும்பத்தினருக்கு குடும்ப ஓய்வூதியமாக சுமார் ரூ.287 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும் அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் தற்போது சுமார் 9 லட்சம் அரசு ஊழியர்களும், சுமார் 2.29 லட்சம் ஆசிரியர்களும் பணியில் உள்ளனர். இதேபோல, 4.5 லட்சம் ஓய்வூதியதாரர்களும், 2.5 லட்சம் குடும்ப ஓய்வூதியதாரர்களும் அரசிடமிருந்து ஓய்வூதியப் பலன்களைப் பெற்று வருகின்றனர். அரசின் வருவாயில் பெரும் பகுதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியம், ஓய்வூதியத்துக்காக செலவிடப்படுகிறது. இதனால், அரசு கடன்களை வாங்கி மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதத்தோடு ஒப்பிடுகையில், கடன் அளவு கட்டுக்குள் இருந்தாலும் அரசு வாங்கும் கடன் தொகை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. இத்தகைய நிதி நிலைமையில்தான் தனது ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது.
சுமார் 3,000-4,000 அரசுப் பணியிடங்களுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் போட்டியிடும் அசாதாரணமான சூழல் தற்போது நிலவுகிறது. அரசுப் பணியைப் பெறுவதற்கான போட்டி முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் அதிகரித்துள்ளது. உயர் கல்வி முடித்து வெளியே வரும் இளைஞர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை என்பதுதான் இதற்கு முக்கியக் காரணம்.
அரசின் நிர்வாகச் செலவினங்களைக் குறைப்பதன் மூலம்தான் நிலுவையில் உள்ள கடன் சுமையை கட்டுக்குள் கொண்டுவர முடியும். வேலைவாய்ப்பை ஈர்ப்பதற்கு தனியார் முதலீடுகள் வரவேண்டும் என்றால் கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தாக வேண்டும். இந்தச் சூழ்நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத தர்மசங்கடத்தில் அனைத்து மாநில அரசுகளும் சிக்கியிருக்கின்றன. தமிழகம் விதிவிலக்கல்ல!