இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேத படிப்புகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகையே அச்சுறுத்தி வந்த கரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபோது தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்காமல் மக்கள் அச்சத்தில் வாழ்ந்த காலத்தில் தொற்றுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு மருந்தாக பயன்பட்டது நமது பாரம்பரிய மருத்துவமான சித்தா, ஆயுர்வேத மருந்துகள்தான். நிலவேம்பு, கசாயம், கபசுர குடிநீர், கீழாநெல்லி கசாயம் மக்களுக்கு பெரிதும் பரிந்துரைக்கப்பட்டதுடன் அனைத்து பகுதிகளிலும் அரசு, தனியார் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் கொடுக்கப்பட்டது. இன்று கரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வந்தாலும், தொற்று பாதித்தவர்களுக்கு சித்தா, ஆயுர்வேத மருந்துகள் தொடர்ந்து பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேத படிப்புகளை பிரபலப்படுத்தும் வகையில் புதிய திட்டம் அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துடன், அண்ணா பல்கலைக்கழகம் ஓரிரு நாள்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையும் படிக்க | நர்சிங் படிப்புகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
மேலும், வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் உள்ள மாணவர்களிடம் சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தை கொண்டு செல்லும் வகையில் ஆன்லைன் படிப்புகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தற்போது மென்பொருள் துறையில் புதிய வரவுகளான ஏஐ, கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி, எனர்ஜி ஸ்டோரேஜ் டெக்னாலஜி (AI, Cloud Computing, Cyber Security, Energy Storage Technology) ஆகியவற்றையும் ஆன்லைனில் பயிற்றுவிக்க அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.