கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனுவில் சொத்துகள் குறித்த விவரங்களை அளித்துள்ள அவர், ரூ.20 கோடி மதிப்புள்ள சொத்துகளைப் பட்டியலிட்டுள்ளார். அவற்றில் ரூ.9.24 கோடிக்கு அசையா சொத்துகளும் பணமாக ரூ.55 ஆயிரமும் வங்கி வைப்புத் தொகையாக ரூ. 26.25 லட்சமும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மனுவில் தன்னிடம் பத்திரங்கள் மற்றும் பங்குகள் மதிப்பு ரூ.4.33 கோடி, மியூட்சுவல் பண்ட் ரூ.3.81 கோடி, தங்க பத்திரங்கள் ரூ.15.21 கோடி, நகைகள் ரு. 4.20 லட்சம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ரூ 11.15 கோடி மதிப்புடைய அசையா சொத்துகளில் குடும்ப வழியில் வந்த பிரியங்கா காந்திக்கும் தனக்கும் பொதுவான தில்லி மெஹ்ராலி விவசாய நிலம், ரூ.9 கோடி மதிப்புள்ள குருக்ராம் அலுவலகம் ஆகியவற்றையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சொந்தமாக காரோ தனிப்பட்ட குடியிருப்பு பிளாட்டோ இல்லையென குறிப்பிட்டுள்ளார்.
மேலும் போக்சோ சட்டத்தின்கீழ், சமூக வலைத்தளத்தில் அவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கு உள்பட தனக்கு தொடர்புடைய வழக்குகள் குறித்த விவரங்கள் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார் ராகுல் காந்தி.
வயநாடு தொகுதியில் கம்யூனிஸ்ட் தலைவர் ஆனி ராஜா, பாஜக தலைவர் கே.சுரேந்திரன் ஆகியோரை எதிர்த்து ராகுல் போட்டியிடவுள்ளார். ஏப்ரல் 26 கேரளாவில் வாக்குப் பதிவு நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.