மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கமல்நாத் வீட்டில் பத்திரிகையாளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
சிந்த்வாரா மக்களவைத் தொகுதியில் கமல்நாத்தின் மகன் நகுல் நாத் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக வேட்பாளர் விவேக் சாஹு போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், விவேக் சாஹுக்கு எதிராக போலி செய்திகளையும், விடியோக்களையும் வெளியிட பத்திரிகையாளர்களுக்கு கமல்நாத் தரப்பில் பணம் அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.
கமல்நாத்தின் நெருங்கிய நபரான மிருக்னாலி என்பவர் சில பத்திரிகையாளர்களுக்கு ரூ.20 லட்சம் கொடுத்ததாக காவல்துறையில் விவேக் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் சிந்த்வாராவில் உள்ள கமல்நாத் வீட்டில் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்களவை தேர்தல் முதல் கட்டத்தில் வருகின்ற 19ஆம் தேதி சிந்த்வாராவில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்த தொகுதியில் 1980 முதல் 8 முறை கமல்நாத்தும், 2019-ல் நகுல் நாத்தும் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.