சென்னை: தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைகளை அடுத்தடுத்து வெளியிட்டுள்ளன.
பொதுவாக எதிரெதிர் கட்சிகளின் தேர்தல் அறிக்கை என்பதால், அவற்றில் பல வித்தியாசமான வாக்குறுதிகள் இடம்பெற்றிருக்கும். ஆனால், திமுக - அதிமுக தேர்தல் அறிக்கையில் குறைந்தது ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க முடியுமா என்று போட்டி வைக்கலாம் என்ற அளவுக்கு ஒன்றுபோல பல விஷயங்கள் பேசப்பட்டுள்ளன.
அதாவது, மத்திய அரசின் நிதி பகிர்வு, மாநிலங்களுக்கு செஸ் வருவாயை பகிர்ந்தளித்தல், மாநிலங்களின் கடன் வரம்பை நீக்குதல், சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழ் மொழியை கொண்டுவருவது, சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைப்பது, நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை நாள்களின் எண்ணிக்கையை 150 ஆக அதிகரித்தல் என இரண்டு திராவிடக் கட்சிகளும் ஒன்றுபோல வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளன.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 133 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் ஆளுநர்களுக்கும், அரசுகளுக்கும் இடையே தற்போது நிலவி வரும் மோதல் குறித்து இந்த தேர்தல் அறிக்கையில் எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், முதல்வர்களைக் கலந்தாலோசிக்காமல் ஆளுநரை நியமிப்பது மோதலுக்கு வழிவகுக்கும் என்று அக்கட்சி கூறியிருக்கிறது.
இது தற்போது தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் அதி முக்கியத்துவமான நிலைப்பாட்டை எதிரொலிப்பதாக உள்ளது.
ஆளுநர் பதவி என்பது பெயரளவில் இருந்தாலும், இந்த அரசியல் சாசனப் பதவி இருக்கும் வரை, முதல்வர்களுடன் கலந்தாலோசித்து அவர்களின் ஒப்புதலுடன்தான் ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதை நமது மறைந்த தலைவர் ஜெ.ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தியுள்ளார், இதை மத்திய அரசு செயல்படுத்த அதிமுக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதாவது, திமுக தேர்தல் அறிக்கையில் பாஜகவை கடுமையாகத் தாக்கும் வகையில் வாக்குறுதிகள் அமைந்திருந்தன. ஆனால், அதிமுகவோ அவ்வாறு செய்யாமல், மத்திய அரசை நேரடியாக தாக்காமல் தேர்தல் அறிக்கை மிகவும் கவனமாக தயாரிக்கப்பட்டுள்ளது என்பதே.
மேலும், மாநிலங்களில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதிப் பகிர்வை தற்போதைய 60:40லிருந்து 75:25 ஆக அதிகரிக்க வேண்டும் என்றும் அதிமுக வலியிறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கதாகவே உள்ளது.