3 முதல்வர்களைத் தந்த ஒருங்கிணைந்த சேலம்
1792, ஏப்ரல் 4-ஆம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது சேலம் மாவட்டம்.

எடப்பாடி பழனிசாமி
படம்: அதிமுக

எடப்பாடி பழனிசாமி
படம்: அதிமுக
1792, ஏப்ரல் 4-ஆம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது சேலம் மாவட்டம். நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கி மொத்தம் 7,530 சதுர கி.மீ. பரப்பளவில், சேலம் மாவட்டம் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. இதுதவிர, பல்வேறு சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டிருந்த ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் தமிழகத்துக்கு மூன்று முதல்வர்களைத் தந்துள்ளது.
டாக்டர் சுப்பராயன்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலத்தில் பிறந்தவர் டாக்டர் சுப்பராயன். ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1926 டிசம்பர் முதல் 1930 அக்டோபர் வரை சென்னை மாகாண முதல்வராக இருந்தார். சுதந்திரம் அடைவதற்கு முன்னரே முதல்வர் என்பதுடன், எந்த கட்சியும் சாராத முதல்வர் என்ற சிறப்பையும் பெற்றவர்.
ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஏழைகளுக்கு தானமாக கொடுத்தவர். நாமக்கம் மாவட்டம், புதுச்சத்திரத்தில் இவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இவரது மகன் மோகன் குமாரமங்கலம், மகள் பார்வதி கிருஷ்ணன். மோகன் குமாரமங்கலமும், பார்வதி கிருஷ்ணனும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்தவர்கள். பிறகு, மோகன் குமாரமங்கலம் காங்கிரஸில் சேர்ந்து மத்திய அமைச்சரானார்.
மூதறிஞர் ராஜாஜி
மூதறிஞர் ராஜாஜி தமிழகத்தில் 1952 முதல் 1954 வரை முதல்வராக இருந்தார். சுதந்திரத்துக்குப் பிறகு தமிழகத்தின் முதல் முதல்வர் ராஜாஜி. இப்போதுள்ள கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே உள்ள தொரப்பள்ளியில் பிறந்த இவர், சட்டம் பயின்றவர்.
இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலும் ராஜாஜிதான். சேலம் நகராட்சித் தலைவராகவும் ராஜாஜி இருந்துள்ளார். அவரது பதவிக் காலத்தில்தான் மேட்டூரில் இருந்து சேலத்துக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டது. ராஜாஜி முதல்வராக இருந்தபோதுதான் முதன்முதலாக சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸýடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சுதந்திரா கட்சியை அவர் தொடங்கினார்.
எடப்பாடி கே. பழனிசாமி
சேலம் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்தவர்களில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமியும் ஒருவர். இவர் சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் என்ற கிராமத்தில் பிறந்தார்.
எம்ஜிஆர் காலத்திலேயே அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டவர். சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் கிளைச் செயலாளராக பொறுப்பேற்றார். பிறகு படிப்படியாக கட்சியில் உயர் பதவிக்கு வந்தார்.
1989-இல் அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது, ஜெ. அணியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். தொடர்ந்து, எம்.பி., எம்எல்ஏவாக இருந்தவர், 2011-இல் ஜெயலலிதா அமைச்சரவையில் முதல்முறையாக அமைச்சரானார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2017-இல் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக முதல்வர் பொறுப்பை ஏற்று 2021-ல் ஆட்சிக் காலம் நிறைவடையும் வரை அப்பதவியில் இருந்தார்.
- சி.ஆர்.எம்.சபரி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...