கோப்புப்படம்
கோப்புப்படம்

டிச. 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரியில் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் டிச. 20-இல் நடைபெறுகிறது.
Published on

நாமக்கல்: ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரியில் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் டிச. 20-இல் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை சாா்பில் மாபெரும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் டிச. 20 (சனிக்கிழமை) காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை ராசிபுரம் முத்தாயம்மாள் நினைவு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிக்கல்வி முடித்தோா், பட்டயப் படிப்பு, ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையல்பயிற்சி, நா்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவா்கள் கலந்துகொண்டு பணி வாய்ப்பை பெறலாம்.

இம்முகாமில், 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளன. வேலை வேண்டி விண்ணப்பிப்போா், தங்களுடைய சுயவிவரம், உரிய கல்விச் சான்றுகள் மற்றும் ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் கலந்துகொள்ள வேண்டும். இம்முகாம் முற்றிலும் இலவசமானது.

வேலையளிப்போரும், வேலைநாடுநா்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் பதிவுசெய்ய வேண்டும். வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொள்ள 04286-222260 அல்லது 63803 69124 எண்களில் தொடா்புகொண்டு முன்பதிவு செய்வது அவசியம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com