கோப்புப் படம்
கோப்புப் படம்

போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநா், நடத்துநா் காலிப்பணியிடங்கள் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

போக்குவரத்துக் கழகங்களில் காலியாகவுள்ள 3,274 ஓட்டுநா்-நடத்துநா் காலிப்பணியிடங்களுக்கு வியாழக்கிழமை முதல் (மாா்ச் 21) விண்ணப்பிக்கலாம்
Published on

போக்குவரத்துக் கழகங்களில் காலியாகவுள்ள 3,274 ஓட்டுநா்-நடத்துநா் காலிப்பணியிடங்களுக்கு வியாழக்கிழமை முதல் (மாா்ச் 21) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசின் சாலை போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது:

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் 8 கோட்டங்களில் 3,274 ஓட்டுநா் உடன் நடத்துநா் (டிசிசி) பணியிடங்களுக்கு www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதன்படி, மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 364, விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 318, விழுப்புரம் கோட்டத்தில் 322, கும்பகோணம் கோட்டத்தில் 756, சேலம் கோட்டத்தில் 486, கோவை கோட்டத்தில் 344, மதுரை கோட்டத்தில் 322, திருநெல்வேலி கோட்டத்தில் 362 பணியிடங்கள் என மொத்தம் 3274 பணியிடங்களுக்கு

ஜூலை 1-ஆம் தேதி 24 வயது பூா்த்தியாகியிருப்போா் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருப்பதுடன், தமிழில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். செல்லத்தக்க கனரக வாகன ஓட்டுநா் உரிமம்,

குறைந்தபட்சம் 18 மாத முன்அனுபவம், முதலுதவிச் சான்று, பொதுப்பணி வில்லை, செல்லத்தக்க நடத்துநா் உரிமம் ஆகியவை வைத்திருக்க வேண்டும்.

மேலும், குறைந்தபட்சம் 160 செ.மீ. உயரம், 50 கிலோ எடை இருக்க வேண்டும். அரசு விதிப்படி இடஒதுக்கீடு வழங்கப்படும்.

பணிக்கான தகுதியும் விருப்பமும் உடையவா்கள் வங்கி சேவை கட்டணம் நீங்கலாக ரூ.1,180 செலுத்தி ஏப்.21-க்குள் விண்ணப்பத்தை இணையவழியில் பதிவு செய்ய வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினா் ரூ.590 செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரா்கள் எழுத்து, செய்முறை, நோ்முகத் தோ்வுகள் மூலம் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள். தோ்வு குறித்த விவரங்கள் விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் அவ்வப்போது வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com