

'நீங்க தூங்கும் போது ரொம்ப கொறட்டை விடறீங்க!" என்று சொல்லிப் பாருங்கள். நிச்சயம் உங்கள் துணை அந்த அவதூறை ஒப்புக் கொள்ளவே மாட்டார். கணவர் அல்லது மனைவி என இருபாலினரும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரிதான்.
குறட்டை என்பது கொடிய வியாதி அல்ல. அதை ஏன் ஒப்புக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால் அங்கே தான் இருக்கிறது விஷயம். நாம் தூங்கும் போது குறட்டை விடுபவராக இருந்தாலும் மற்றவர்கள் குறட்டை விடுவதை நம்மால் சகிக்க முடியாது. ரயில், பஸ் என பொதுவிடங்களில் குறட்டை விட்டு ஜாலியாக தூங்குபவர்களைக் கண்டால் பலருக்கு எரிச்சல் வருவது உண்மை. எழுப்பி எச்சரிக்கை விடுத்தவர்களும் உண்டு.
இந்தக் குறட்டை விடும் பிரச்னை திருமண உறவை முறித்துக் கொள்ளும் வரை நீண்டுள்ளது என்பது உண்மை. இதற்கான எளிய தீர்வு வீட்டிலேயே உள்ளது. தேவைப்படுமாயின் மருத்துவரை அணுகி ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெறலாம்.
குறட்டை என்பது ஒருவரின் சுவாசம் மூக்கின் வழியாக செல்லாமல் வாய் வழியாக செல்வதால் ஏற்படுகிறது. சிலர் புஸ் புஸ் என்ற சத்தத்துடன் குறட்டை விடுவார்கள். இப்படி ஆரம்பிக்கும் அவரது குறட்டை வாழ்வு மெள்ள விஸ்வரூபம் எடுத்து அந்தச் சத்தம் அந்தக் குறட்டையின் ஓசை அடுத்த அறை வரை, அப்பார்ட்மெண்டாக இருந்தால் அடுத்த வீடு வரை கூட கேட்கும். இத்தகைய இம்சை அரசர்களை சமாளிக்க வழி தெரியாமல் வீட்டினர் தூக்கம் கெடும். ஏன் குறட்டை விடுகிறார்கள் என்ற காரணத்தை ஆராய்ந்தால் தீர்வு எளிமையாகும். சிலருக்கு இருமல், சளி மற்றும் ஆஸ்துமா பிரச்னை இருந்தால் குறட்டை விடுவார்கள். இன்னும் சிலருக்கு குடிப் பழக்கம் அல்லது சிகரெட் குடிக்கும் பழக்கத்தால் இரவில் கொர் கொர் என்பார்கள். முதுமையும் ஒரு காரணம், வயோதிகர்கள் பெரும்பாலும் அவர்களுக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டு குறட்டை விடுவதை ஆனந்தமான பழக்கமாக்கிக் கொள்வார்கள். இப்படி பலவிதமாக பாதிப்படைந்தவர்கள் குறட்டை விட்டு விட்டு சோர்ந்தே போவார்கள். அது அவர்களுக்கே தெரியாமல் மன உளைச்சல் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை விளைவிக்கும்.
குறட்டை இனி விட மாட்டேன் என்று உறுதி பூண்டால் நிச்சயம் சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். தினமும் சாப்பிடும் உணவில் அக்கறையுடன் இருக்க வேண்டும். எளிதில் செரிமானம் ஆகும் வகையில் சாப்பிட வேண்டும். வயிரை குப்பைத் தோட்டி போல நினைக்காமல் நல்ல உணவுகளையே சாப்பிடவேண்டும். சிகரெட், மது போன்ற பழக்கங்களை கைவிட வேண்டும். தூங்கும் போது ஒரே சைடில் படுக்காமல், அவ்வப்போது திரும்பி படுக்க வேண்டும். இவையெல்லாம் செய்ய கஷ்டமாக இருந்தால் அருகில் உள்ள நாட்டு மருத்துக் கடைக்குச் சென்று ஓமம் அல்லது கற்பூரவல்லியை வாங்கி அதனுடன், பச்சைக்கற்பூரத்தை வாங்கி குறட்டை விடுபவர்கள் அதனை சுவாசிக்கும் வகையில் மூக்கின் அருகே எடுத்து வைக்க வேண்டும். இந்த மூன்று மூலிகைகளின் வாசனை மூக்கின் வழியே உள்ளே சென்று, சுவாசக் கோளாறுகளை சீர் செய்துவிடும். எளிமையான இந்த மருத்துவத்தால் எளிதாக குறட்டை பழக்கத்தை நிறுத்திக் கொள்ள முடியும். ஆயுர்வேத மருத்துவரின் பரிந்துரைப்படி இந்த முறையை சரியாகத் தெரிந்து கொண்டு பின்பற்றுவது நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.