உங்கள் குழந்தை படுக்கையை நனைக்கிறதா?

குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் சாதாரணக் குறைபாடு தான் படுக்கையில் சிறுநீர் கழித்தல்
உங்கள் குழந்தை படுக்கையை நனைக்கிறதா?

குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் சாதாரணக் குறைபாடு தான் படுக்கையில் சிறுநீர் கழித்தல். இதனைக் கண்டு பெற்றோர் கவலைப்படத் தேவையில்லை. இந்தப் பிரச்னை குறித்து பெற்றோர் தெளிவாக அறிந்து கொள்வது குழந்தைகள் இப்பழக்கத்திலிருந்து மீள்வதற்கு உதவியாக அமையும். தூக்கத்தின் போது தன்னையறியாமல் படுக்கையில் சிறுநீர் கழித்தல் ‘NOCTURNAL ENURESIS’ எனப்படும். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 10ல் 1 குழந்தைக்கு இக்குறைபாடு உள்ளது. இந்த எண்ணிக்கை 15 வயதுக்கு மேல் பதின்ம வயதில் 100ல் 2 குழந்தைகளாகக் குறைந்து விடுகிறது. 7-9 வயதுள்ள 9% ஆண் குழந்தைகளும் 6% பெண் குழந்தைகளும் தன்னையறியாமல் இரவு நித்திரையில் ஆடையையும் படுக்கையையும் நனைத்து விடுகின்றனர்.

தன்னுணர்வு இல்லாமல் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குறைபாட்டினை மருத்துவரீதியில் இரண்டு வகைகளாகப் பிரிக்கின்றனர். 1.இரவு உறக்கத்தில் ஒரு நாள் கூட சிறுநீர் கழிக்காத நாள் இராது. இது PRIMARY NOCTURNAL ENURESIS  எனப்படும். 2. பொதுவில் 5 வயதுக்குள் கழிப்பறையில் தான் மலஜலம் கழிக்க வேண்டும் எனும் பழக்கத்தைப் பழகி விடுகின்றனர். கழிவறைப் பழக்கம் பழகிய பின் சில மாத காலம் முதல் சில வருட காலம் வரை படுக்கையில் சிறுநீர் கழிக்காமல் இருந்து விட்டு மீண்டும் படுக்கையை நனைக்கும் நிலை ஏற்படும்.இது SECONDARY  NOCTURNAL  ENURESIS எனப்படும்.

காரணங்கள்

குழந்தைகளிடம் பெற்றோரின் எதிர்மறை மனப்பான்மை, குழந்தைகளின் மன அழுத்தம், பதற்றம், பயம், மனவளர்ச்சிக் குறைபாடு [MENTAL RETARDATION], மிகை இயக்கக் கோளாறு [ADHD], குழந்தைகளின் கழிவறைப் பழக்கங்களில் பெற்றோரின் அதீத அக்கறை, பிறர் முன், பிறர் அருகில் சிறுநீர் கழிக்க கூச்சம், தயக்கம், அதன் எதிர்மறை விளைவு, வீட்டில், பள்ளியில் பல்வேறு கவலைகள், பள்ளி விட்டுப் பள்ளி, வீடு விட்டு வீடு மாறும் சூழ்நிலை போன்ற உளவியல்ரீதியான காரணங்கள்.

ஹார்மோன் சமச்சீரின்மை [ADH- Anti diuretic hormone குறைபாடு], நீர்ப்பை நிறைந்துவிட்ட உணர்வின்மை, நீர்ப்பையின் தசை பலவீனம், சிறிய நீர்ப்பை அமைந்திருத்தல், சிறுநீர்த்தாரை தொற்று, மலச்சிக்கல், நீரிழிவு,வலிப்பு, தூக்கத்தில் மூச்சுத் திணறல் [SLEEP APHNEA], சில வகை தோல் நோய்கள் [ERYTHEMA, ECZEMA, PRURITUS], குடற்பூச்சிகள் [WORM], ஆணுறுப்பின் முன் தோல் அகற்றிய ஆபரேஷன் [CIRCUMCISION], ஜீரணக் கோளாறுகள் போன்ற உடல்ரீதியான காரணங்கள்.

சிறுநீரகங்கள் என்பது மிக அற்புதமான இயற்கைப் படைப்பு. இருதயத்திற்கு அடுத்த ஓயாத உழைபாளி! சுமார் 10 லட்சங்கள் நெப்ரான்கள் மூலம் சிறுநீரகங்கள் ரத்தத்திலிருந்து கழிவு நீரை பிரித்து சிறுநீர் வடிகுழாய் மூலம் சிறுநீர்ப்பைக்குக் கொண்டு சேர்க்கிறது. நீர்ப்பை நிரம்பியதும் மூளைக்குத் தகவல் கிடைத்து, பின் சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது. அதன் பின்னர் சிறுநீர்ப்பை தானாகச் சுருங்கி நீரை வெளியேற்றுகிறது. சிறுநீர்ப்பையின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் திறன் மூளைக்கே உள்ளது. வயது கடந்து, கழிப்பறை பயிற்சியும் நடந்து முடிந்த பின்னரும் குழந்தைகள் படுக்கையை நனைத்தால் சிறுநீர்ப்பையைக் கட்டுப்படுத்தும் நரம்பியல் திறன் குறைபாடு என்பதாகத்  தான் பொருள்.

சிகிச்சை 

ஆங்கில மருத்துவத்தில் இதுபோன்ற பிரச்சினைக்கு சிறந்த தீர்வுகள் இல்லை. குழந்தை நல நிபுணர்கள் பெற்றோருக்கும் பாதிக்கப்பட்ட குழந்தைக்கும் பல ஆலோசனைகள் வழங்கி இதனைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர்.குறிப்பாக இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே திரவ உணவு அருந்துவதை, தண்ணீர் குடிப்பதை நிறுத்த வேண்டும் [தாகம் எடுக்கும் போது தண்ணீர் அருந்தாமல் உடலின் தேவையை புறக்கணிப்பது சரியல்ல] படுக்கைக்குச் செல்லும் முன் சிறுநீர் கழித்து விட்டுச் செல்ல வேண்டும். படுக்கை மீது மெல்லிய பிளாஸ்டிக் மேலுறை அல்லது நீர் உறிஞ்சும் விரிப்புகள் விரிக்க வேண்டும். தூக்கத்தின் இடையில் எழுப்பி சிறுநீர் கழிக்கச் செய்ய வேண்டும் [இது எவ்வளவு பெரிய கொடுமை!].

‘குழந்தை உறங்கும் போது படுக்கை விரிப்பின் கீழ் ஒரு பிரத்யேகத் தகடை வைத்து ஈரம் படும் போது மெதுவான மின் அதிர்ச்சிகளைத் தரும்படி பேட்டரிகளைப் பொருத்தி வைப்பர். குழந்தை சிறிநீர் கழிக்கத் துவங்கியதும் மின் அதிர்வுகளால் எழுந்து விடும். உடனே பெற்றோர்குழந்தையைக் கழிப்பிடம் அழைத்துச் சென்று பின் மீண்டும் தூங்கச் செய்ய வேண்டும்’ என்று மேல்நாட்டுச் சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர். இது தான் சிகிச்சையா? இதில் எத்தனை குழந்தைகள் நலமடைந்துள்ளனர்? எத்தனை சதவீதம் வெற்றி கிட்டியுள்ளது?என்பது கேள்விக்குரியது.

ஹோமியோபதி சிகிச்சை 

ஹோமியோபதி சிகிச்சை அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டது. குழந்தைகளின் உடலமைப்பு, மன அமைப்பு, குணநலன்கள், பழக்கவழக்கங்கள், படுக்கையில் சிறுநீர் கழிக்கும் ஒவ்வொரு குழந்தையிடமும் காணக்கூடிய தனித் தனி அடிக் காரணிகள் [UNDERLYING CAUSES] அனைத்தையும் ஆய்வு செய்து மருத்து அளிக்கப்படுகிறது. ஹோமியோபதி சிகிச்சை மென்மையானது. ஆனால் ஆற்றல்மிக்கது.பக்க விளைவு இல்லாதது. பாதுகாப்பானது [குழந்தைகளுக்கு அளிக்கப்படும் எந்த சிகிச்சையாயினும் பாதுகாப்பு முக்கியமல்லவா?] பலன்களோ நிரந்தரமானது. சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான பெற்றோர் ஹோமியோபதி சிகிச்சையின் அற்புத பலன்களால் நிம்மதி அடைந்துள்ளனர்.

ஹோமியோபதி மருத்துவத்தின் நோக்கம் பலவீனமான நரம்பு மண்டலத்தை வலிமைப்படுத்துதல். இதன் விளைவாக சிறுநீர்ப்பை மீதான கட்டுப்பாட்டுத் திறன் அதிகரிக்கும். நீண்ட காலமாக தினமும் படுக்கையில் சிறுநீர் கழித்து ஈரப்படுத்திக் கொண்டிருந்த குழந்தை சில வாரங்களில் அல்லது சில மாதங்களில் ஆச்சரியப்படத் தக்க வகையில் படுக்கையை உலர்ந்த படுக்கையாக மாற்றிக் காட்டுகிறது. குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் அன்றாடம் ஏற்பட்டுக் கொண்டிருந்த தீராத தர்ம சங்கடம் விரைவில் மாயாஜாலம் போல மாறிவிடுகிறது.

குழந்தைகளிடம் காணப்படும் குறிகளுக்கேற்ப உரிய மருந்துகள் தேர்வு செய்து சிகிச்சை அளித்தால் ENURESIS [OR] BED WETTING  எனும் பிரச்னையிலிருந்து குழந்தைகள் உறுதியாக நிரந்தரமாக விடுதலை பெற முடியும். இப்பிரச்சினையைத் தீர்க்கப் பயன்படும் முக்கியமான சில ஹோமியோபதி மருந்துகளை அறிந்து கொள்வோம்....

காஸ்டிகம் :   இரவின் முதற்பகுதியில் [FIRST HALF OF NIGHT] தன்னுணர்வின்றி தூக்கத்தில் சிறுநீர் கழித்தல். இருமல், தும்மல் மற்றும் சிறிய உடல் கிளர்ச்சியிலும் கூட சிறுநீர் பிரிதல்.

செபியா : இரவின் முதற்பகுதியிலேயே படுக்கையை ஈரமாக்கிவிடுதல். இம்மருந்து சிறுமிகளுக்கு அதிகளவில் பயன்படுகிறது. இந்த மருந்துக்குரிய குழந்தைகளிடம் மனச்சோர்வும், மந்தமான தன்மையும் வேலை செய்வதில் ஆர்வமின்மையும் காணப்படும்.

கிரியோசோட்டம் : எழுப்ப முடியாத ஆழ்ந்த தூக்கத்தில் சிறுநீர் கழித்தல்.தூக்கத்தில் கனவில் சிறுநீர் கழிப்பதற்கு இடம் தேடி அலைந்து இறுதியில் சிறுநீர் கழிக்கும் போது படுக்கையில் உண்மையாகவே சிறுநீர் கழித்து விடுதல். சிறுநீரில் துர்நாற்றம் காணப்படும்.

கல்கேரியா கார்ப் : உடல் பருமனுள்ள, எளிதில் வியர்க்கக் கூடிய, சளி பிடிக்க்க் கூடிய குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தல்.

சினா : குடற்புழுக்களின் ஆக்கிரமிப்பு மற்றும் அழுத்தம் காரணமாக ஒருவித உறுத்தல் ஏற்பட்டு படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நிலைக்குச் சிறந்த மருந்து. சற்றே கலங்கிய சிறுநீர் சில நிமிடங்களில் பால் போல் மாறும். அதிக பசி என்பதும் முக்கிய குறி. குடற்பூச்சிகள் காரணமாக குழந்தைகள் மூக்கைத் தேய்த்துக் கொண்டேயிருப்பார்கள். அதிக முன்கோபம் காணப்படும்.

ஈக்விசிடம் : இது அன்றாடப் பழக்கமாக மாறி விடுதல். இரவு பகல் எப்போது கண்ணயர்ந்தாலும் நீர்ப்பை உறுத்தல் ஏற்பட்டு அடிக்கடி அதிகளவு சிறுநீர் கழித்தல். கனவில் அதிக மக்களை, கூட்டத்தைக் காணுதல்.

சோரினம் : முழுநிலவு நாளன்று இரவில் படுக்கையை நனைத்தல்.

பல்சடில்லா : மாறும் இயல்புகள், தாகமின்மை,குளிர்ச்சியும் திறந்தவெளிக் காற்றும் விரும்பக்கூடிய, உஷ்ணமான உடல்வாகு உடைய, அழும் சுபாவமுள்ள [WEEPING TENDENCY-TEARFUL HABITS] குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தல்.

இப்பிரச்சினையைத் தீர்க்க இன்னும் ஏராளமான ஹோமியோபதி மருந்துகள் உள்ளன. பெற்றோர் சிலவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். எந்தக் குழந்தையும் வேண்டுமென்றே படுக்கையை நனைப்பதில்லை.அது குழந்தைகளின் மனதையும் பாதிக்கக் கூடியதே.எனவே குழந்தையைத் திட்டுவதோ, தண்டிப்பதோ, பிறர் முன் பேசி அவமானப்படுத்துவதோ தவறு.இதனால் எந்த நற்பயனும் கிடைக்கப் போவதில்லை. அருகிலுள்ள ஹோமியோபதி நிபுணர்களை நாடுங்கள். உங்கள் குழந்தையின் பிரச்சினைக்கு இனிதே விடை கொடுங்கள்.

Dr.S.வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்,

சாத்தூர்.

செல் - 94431 45700  / Mail - alltmed@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com