

கொல்கத்தா,ஜன.8: மேற்கு வங்க மாநிலம் லால்கரில் பொதுமக்கள் 8 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது.
மாநில சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் புத்ததேவ் பட்டாசார்ஜியிடம் ஆலோசிக்க மாநில ஆளுநர் எம்.கே. நாராயணன் முடிவெடுத்துள்ளார்.
ஹெüரா மாவட்டம் சிப்பூரில் வங்கப் பொறியியல் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தை திறந்து வைக்க ஆளுநர் நாராயணன் சனிக்கிழமை வந்தார். அப்போது, லால்கரில் பொதுமக்கள் 8 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து செய்தியாளர்கள் வினவினர்.
இதற்குப் பதில் அளித்த நாராயணன், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நேரம் வந்துவிட்டது என்றார். சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து முதல்வர் புத்ததேவிடம் ஆலோசிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாநில சட்டம் ஒழுங்கு நிலை குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புவீர்களா என்று கேட்டதற்கு, மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு குறித்து உள்துறை அமைச்சகம் நன்கு அறிந்துள்ளது. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியே இதை உணர்த்துகிறது என்றார்.
லால்கரில் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டது துயரமான நிகழ்வு. அந்த சம்பவம் நிகழ்ந்த நாள் துயரமான நாள். ஒவ்வொரு படுகொலையும் இதயத்தில் கடும் வலியை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையை நாம் ஒருபோதும் ஆதரிக்கவோ, அனுமதிக்கவோ முடியாது என்றும் நாராயணன் உறுதிபட தெரிவித்தார்.
இதுபோன்று கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறையை பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. அதற்கு எதிராக அனைவரும் இணைந்து போராடுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சட்டம் ஒழுங்கு கவலை அளிக்கிறது: இதனிடையே, மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை கவலை அளிக்கும் விதத்தில் உள்ளதாக மத்திய தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி தெரிவித்துள்ளார்.
லால்கர் மாவட்டத்தின் நேதாய் கிராமத்தில் பொதுமக்கள் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதால் பொதுமக்களுக்கான பாதுகாப்பு குறித்தும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்தும் கேள்வி எழுந்ததது.
இதனால் மாநில முதல்வரை மத்திய அரசு உடனடியாக அழைத்து விளக்கம் கேட்கும் என்று மேற்கு வங்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனால் புத்ததேவ் தில்லிக்கு விரைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள முதல்வர் அலுவலகம், தில்லிக்கு முதல்வர் உடனடியாக செல்லும் திட்டமில்லை என்றுள்ளது.
மாநில சட்டம் ஒழுங்கு நிலை குறித்து புத்ததேவுக்கு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய கடிதம் கிடைத்துவிட்டதாகவும், அதற்கு புத்ததேவ் பதில் கடிதம் எழுதிவிட்டாரா என்பது தெரியவில்லை என்றும் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நடக்கக்கூடாதது நடந்துவிட்டது-புத்ததேவ்: லால்கரில் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்திருக்கக்கூடாது. ஆனால் அது நடந்துவிட்டது கவலைக்குரியது என்று முதல்வர் புத்ததேவ் பட்டாசார்ஜி தெரிவித்தார்.
இந்த சம்பவத்தால் அரசியல் கட்சிகள் உணர்ச்சிவசப்பட்டுவிடக்கூடாது. கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுபோன்ற வன்முறைகள் ஏற்படுவதையும், மாநிலம் ரத்தக்களமாக மாறுவதையும் அனுமதிக்க முடியாது. இது மாநிலத்தின் வளர்ச்சியை கடுமையாகப் பாதிக்கும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாவோயிஸ்டுகளுக்கு தொடர்பு? லால்கரில் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மாவோயிஸ்டுகளுக்கு தொடர்பிருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அந்த மாநில உள்துறை செயலர் ஞான தத்தா சனிக்கிழமை தெரிவித்தார்.
லால்கர் சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமை கருத்து தெரிவித்த ஞான தத்தா, இந்த சம்பவம் மார்க்சிஸ்ட், திரிணமூல் காங்கிரஸôரிடையேயான மோதலால் ஏற்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பிருக்கிறதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.