எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

ஜேட்லி தொலைபேசியை ஒட்டு கேட்கவில்லை: சுஷீல் குமார்

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லியின் தொலைபேசியை ஒட்டு கேட்கவில்லை என மத்திய உள் துறை அமைச்சர் சுஷீல் குமார் கூறியுள்ளார்.

News image
Updated On :1 மார்ச் 2013, 7:51 pm

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லியின் தொலைபேசியை ஒட்டு கேட்கவில்லை என மத்திய உள் துறை அமைச்சர் சுஷீல் குமார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, மாநிலங்களவையில் ஷிண்டே வெள்ளிக்

கிழமை கூறியதாவது:

தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக சந்தேகப்படும் நபர்களின் தொலைபேசியை புலனாய்வு அமைப்புகள் இடைமறித்து கேட்பதற்கு சட்டத்துக்கு உள்பட்டு அனுமதி அளிக்கப்படுகிறது.

குறிப்பாக, தொலைத் தொடர்புச் சட்டத்தின் கீழ் மத்திய உள் துறை அமைச்சகம்தான் இத்தகைய அனுமதியை வழங்கும். ஆனால் அரசு யாருடைய தொலைபேசி உரையாடலையும் இடைமறித்து கேட்க அனுமதி அளிக்கவில்லை. எனினும், சிலரது தொலைபேசி உரையாடல் விவரங்கள் கேட்டு பெறப்பட்டுள்ளன. ஜேட்லி தொடர்பான விஷயத்தை முக்கியப் பிரச்னையாகக் கருதி, விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள காவலர் அரவிந்த் குமார் தபஸிடம் விசாரணை நடத்தியதில், பல்வேறு பிரமுகர்களின் தொலைபேசி உரையாடல் தகவல்களை சட்டவிரோதமாக வழங்கியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தில்லி போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தத் தருணத்தில், யார் யாருடைய தொலைபேசி உரையாடல் தகவல் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளது, அதன் கால அளவு, அழைப்புகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை அளிக்க முடியாது. விசாரணை முடிந்த பிறகு அதன் விவரம் தெரிவிக்கப்படும். எவ்வளவு காலத்தில் விசாரணை முடியும் என முன்கூட்டியே கூற முடியாது. விரைவில் விசாரணையை முடிக்க நடவடிக்கை எடுக்கப்

படும் என்றார் ஷிண்டே.

விளக்கம் திருப்தி அளிக்கவில்லை - எதிர்க்கட்சிகள்: இந்த விவகாரம் தொடர்பாக உள் துறை அமைச்சரின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என பா.ஜ.க. இடதுசாரிகள், சமாஜவாதி, ஐக்கிய ஜனதா தளம், அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

எம்.வெங்கய்ய நாயுடு (பா.ஜ.க.): புலனாய்வு அமைப்புகளை அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. அரசுக்கு தெரியாமல் தொலைபேசி உரையாடலை யாரும் ஒட்டு கேட்க வாய்ப்பில்லை. யார் இத்தகைய உத்தரவை பிறப்பித்து என தெரிவிக்க வேண்டும்.

ரவி சங்கர் பிரசாத் (பா.ஜ.க.): காவலர் ஒருவர் 5 மாதமாக தொலைபேசி ஒட்டு கேட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார். இந்த சட்டவிரோத செயலை உள் துறை அமைச்சகம் எப்படி அனுமதித்தது. அல்லது இதுபற்றி அரசுக்கு தெரியாமல் போனது ஏன்? அரசியல் காரணங்களுக்காக புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தப்படுவது வேதனை அளிக்கிறது.

ராஜீவ் பிரதாப் ரூடி (பா.ஜ.க.):

தொலைபேசி ஒட்டுக் கேட்பு குறித்த முழு விவரமும் உள் துறை அமைச்சருக்கு தெரியும். ஆனால் அவர் உண்மையை மறைக்கிறார்.

முலாயம் சிங் யாதவ் (சமாஜவாதி): அரசியல் கட்சித் தலைவர்களின் தொலைபேசி ஒட்டு கேட்பு சம்பவங்கள் வரும் காலத்தில் நிகழாதவாறு தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராம் கோபால் யாதவ் (சமாஜவாதி): உள் துறை அமைச்சரின் விளக்கத்தில் புதிய தகவல் எதுவும் இல்லை. ஆனால், இதைவிட கூடுதலான தகவல்கள் நாளிதழ்களில் வெளிவந்துள்ளன. குறிப்பாக 100 பேரின் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டவர்கள் பட்டியலில் தம்முடைய பெயரும் இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

யாருடைய உத்தரவின் பேரில் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டுள்ளது என்ற விவரத்தைத் தெரிவிக்க வேண்டும் என மற்றொரு மார்க்சிஸ்ட் தலைவர் பிரசாந்த் சட்டர்ஜி கூறியுள்ளார்.

ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் கூறுகையில், ""ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து விசாரணை நடைபெறுகிறது. விசாரணையின் முடிவில் உண்மை வெளிவரும். ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பிறர் குறுக்கிடுவது சட்ட விரோதம்'' என்றார்.

ஐக்கிய ஜனதா தள கட்சி உறுப்பினர் சிவானந்த் திவாரி கூறுகையில், ""அருண் ஜேட்லியின் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்ற விவரத்தை ஷிண்டே தெரிவிக்கவில்லை'' என்றார்.

பா.ஜ.க. துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறியது: முதலில் அமைச்சர்களின் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டன. பின்னர் கூட்டணிக் கட்சிகள், இப்போது எதிர்க்கட்சிகளின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுகின்றன. இந்த விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.