தமிழ்த் திரையுலகில் தனது உதவி இயக்குநர்களை வளர்த்துவிடும் இயக்குநர்கள் ஏராளம் உள்ளனர். ஆனால், தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரியாவிட்டாலும், நல்ல படைப்பைக் கொடுக்கும் இளம் இயக்குநர்களை பாரதிராஜா என்றுமே பாராட்டத் தவறியதில்லை.
இதற்கு உதாரணமாக பரியேறும் பெருமாள் படத்திற்கு நடந்த விழாவைக் கூறலாம். அந்த விழாவில் பாரியேறும் பெருமாள் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜை மட்டுமின்றி இயக்குநர் வெற்றி மாறனையும், அமீரையும் பாராட்டினார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் நடிகர் கதிர், ஆனந்தி, மாரிமுத்து, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மாரி செல்வராஜின் முதல் படமாக உருவான இப்படத்தில், நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் சாதி ஆதிக்கத்தை வெளிப்படையாகப் பேசியது.
இதுமட்டுமின்றி பாரதிராஜாவின் திரை மொழி புதுவடிவம் பெற்றதைப்போல, பரியேறும் பெருமாள் படத்தின் காட்சிகள் இருந்ததாக அப்போது விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
இப்படத்தைப் பார்த்த இயக்குநர் இமயம் பாரதிராஜா, பரியேறும் பெருமாள் படத்தையும் இயக்குநர் மாரி செல்வராஜையும் வெகுவாகப் பாராட்டினார். இவரின் பாராட்டுக்குப் பிறகே மாரி செல்வராஜ் மீதான கவனம் அதிகமானது எனக் கூறலாம். அந்த அளவுக்கு பாராட்டினார் பாரதிராஜா.
நிகழ்ச்சியில் பாரதிராஜா பேசியதாவது:
''பரியேறும் பெருமாள் படத்தின் முதல் காட்சியில் சிறிய குட்டை உள்ளது. அதில் நாயை குளிப்பாட்டிவிட்டுச் செல்கிறார்கள். ட்ரோன் ஷாட் வைத்து எடுத்துள்ளான். எப்போதும் குளத்தில் இருந்து கரையேறிச் சென்றால் கதாபாத்திரங்கள் முன்பு கேமரா வைத்து எடுப்போம். ஆனால் டாப் ஆங்கிள் ஷாட் வைத்தது பிரமாதம். அதில், மண்ணும் பேசுகிறது. மனிதர்களும் பேசிக்கொண்டு செல்கிறார்கள்.
படத்தில் இடம்பெற்ற நான் யார்? பாடல் காட்சிப்படுத்தப்பட்ட விதம், தமிழ் சினிமாவில் இதுவரை நான் பார்த்திடாதது. நிழல்களை வைத்து கதை சொல்ல வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆங்காங்கே என் படங்களில் அதை செய்தேன். ஆனால் இப்பாடல் முழுக்க ஓவியம் மாதிரியே இருக்கும்.
சாதிய எதிர்ப்பு படத்தில் யாருடைய மனதையும் நோகடிக்காமல், நாகரிகமாக படத்தை எடுத்ததற்காக தலைவணங்குகிறேன். தமிழ் சினிமாவில் வெற்றிமாறன், ராம், அமீர் போன்றவர்கள் எல்லாம் இந்த காலகட்டத்திற்கான மிகச்சரியான ஆள்கள்.
யார் படம் செய்தாலும் பாராட்டிவிடுவார் என்று என்னைக் கூறுவார்கள். ஆனால், நான் என்ன செய்வது? என்னை பிரம்மிக்கவைக்கும் இயக்குநர்கள் அடுத்தடுத்த தலைமுறையில் உருவாகிக்கொண்டே செல்கிறார்கள்.
என் காலத்தில் நான் விஷுவல் செய்திருக்கிறேன். ஆனால் இப்போது உங்கள் ஒவ்வொருவரையும் படித்துக்கொண்டிருக்கிறேன்.
நான் ஒரு ஒத்தையடிப் பாதை போட்டிருக்கலாம். ஆனால் நீங்கள் சாலை அமைத்துள்ளீர்கள்'' என எந்தவித ஈகோவும் காட்டாமல், இளம் தலைமுறை இயக்குநர்களை மேடையில் பாராட்டிப் பேசினார்.
இளம் இயக்குநர்கள் பலர் பாரதிராஜாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த படையெடுத்து வருவது, அவர் மீதான இளம் இயக்குநர்களின் மரியாதையையே காட்டுகிறது. இயக்குநர்களை பாராட்டி வளர்த்ததால், இயக்குநர் இமயம் என்ற சொல்லுக்குப் பொருத்தமானவராகவே வாழ்ந்து மறைந்துள்ளார் பாரதிராஜா.
Summary
Director bharathi raja celebrates tamil cinemas young directors
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கிராமிய வாழ்வு, மனித உணர்வுகளை வெளிப்படுத்திய படைப்புகள்! பாரதிராஜாவுக்கு ஆளுநர் இரங்கல்

திரைப்பட இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு: தலைவர்கள் இரங்கல்

இயக்குநர் பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகை, நடிகர்கள், இயக்குநர்கள்!

பாரதிராஜா மறைவு: சரத்குமார் இரங்கல்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!



