ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

சிபிஐ சுதந்திரமாக செயல்படுகிறது: நாராயணசாமி

News image
Updated On :21 மார்ச் 2013, 9:19 pm

மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ சுதந்திரமாக செயல்படுகிறது. தில்லி சிறப்பு போலீஸ் சட்டம் 1946-ன் கீழ் இதற்கான சுதந்திரம் அந்த அமைப்புக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் வி. நாராயணசாமி தெரிவித்தார்.

மாநிலங்களவையில் வியாழக்கிழமை எழுத்து மூலமாக அளித்த பதிலில் அவர் மேலும் கூறியது:

வழக்குகளைப் புலனாய்வு செய்வதில் சிபிஐ சுதந்திரமாக செயல்படுகிறது. இதற்குரிய அதிகாரம் தில்லி காவல்துறை உருவாக்கச் சட்டம் 1946 அதற்கு அளித்துள்ளது. இதனால் முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்கான ஹெலிகாப்டர் பேரம் தொடர்பான விவகாரத்தை சிபிஐ திறம்பட விசாரிக்கும்.

சிபிஐ அமைப்பானது 1973-ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட சிபிஐ கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி வரையறுக்கப்பட்ட சட்டம் மற்றும் புலனாய்வு, விசாரணைகளை இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகளைக் கையாள்கிறது.

வெளிநாடுகளில் 6 வழக்குகள் தொடர்பான விசாரணைக்கு சிபிஐ உத்தரவிட்டுள்ளது. ஹெலிகாப்டர் பேரம் தொடர்பான விவகாரத்தில் முன்னாள் விமானப்படை தலைமைத் தளபதி எஸ்.பி. தியாகி மற்றும் 14 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஹெலிகாப்டர் பேர வழக்கில் இடைத்தரகர் ஒருவர் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தை நிர்பந்தித்துள்ளது தெரியவந்துள்ளது. இடைத் தரகர்கள் ஹேஸ்செக் மற்றும் ஜெரோசா ஆகியோர் இந்தியர்கள் பலருக்கு கமிஷன் தொகை அளித்துள்ளனர். இவர்களில் முன்னாள் விமானப்படை தலைமைத் தளபதி எஸ்.பி. தியாகி மற்றும் அவரது சகோதரர்களும் அடங்குவர். இவர்களுக்கான கமிஷன் தொகை டுனீசியா மற்றும் மோரீஷஸிலிருந்து ஐடிஎஸ் இன்ஃபோடெக் மற்றும் ஏரோமேட்ரிக்ஸ் நிறுவனங்கள் மூலம் வந்துள்ளது.

இதில் ஹேஸ்செக் மற்றும் ஜெரோசா ஆகியோர் ஏரோமேட்ரிக்ஸ் நிறுவனத்தில் இயக்குநர்களாக உள்ளனர். இந்நிறுவனத்தில் பிரவீண் பக்ஷி என்பவர் தலைமை செயல் அலுவலராக உள்ளார். இவர்தான் சட்ட விரோத பண பரிவர்த்தனையில் முக்கியமானவராக செயல்பட்டுள்ளார்.

பின்மெக்கனிகா, அகஸ்டா வெஸ்ட்லேண்ட், ஐடிஎஸ் டுனீசியா, இன்ஃபோடெக் டிசைன் சிஸ்டம் (ஐடிஎஸ்) மோரீஷஸ், ஐடிஎஸ் இன்ஃபோடெக், சண்டீகர் மற்றும் ஏரோமேட்ரிக்ஸ் ஆகிய நிறுவனங்களின் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இந்த வழக்கு விசாரணை இப்போது நடைபெற்று வருவதாக நாராணசாமி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.