இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

தொழில் நெறிமுறைகளை மீறாமல் வழக்குரைஞர்கள் செயல்பட வேண்டும்

வழக்குரைஞர்களும், வழக்குரைஞர் சங்கங்களும் தங்கள் தொழில் நெறிமுறைகளை மீறாமல் செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் கேட்டுக் கொண்டார்.

News image
Updated On :21 ஜூலை 2013, 5:36 pm

வழக்குரைஞர்களும், வழக்குரைஞர் சங்கங்களும் தங்கள் தொழில் நெறிமுறைகளை மீறாமல் செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் கேட்டுக் கொண்டார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளதற்காக அவருக்கு தில்லியில் இந்திய பார் கவுன்சில் சார்பில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பல்வேறு உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், பல்வேறு மாநிலங்களின் வழக்குரைஞர் சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், முன்னாள் அட்டர்னி ஜெனரலும் மாநிலங்களவை நியமன உறுப்பினருமான கே. பராசரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சதாசிவத்தைப் பாராட்டிப் பேசினர்.

அதை ஏற்றுக் கொண்டு நீதிபதி சதாசிவம் பேசியதாவது:

நீதி வழங்குவது நீதிபதிகளை மட்டும் சார்ந்தது அல்ல; வழக்குரைஞர்கள், காவல் துறையினர், நீதிமன்ற ஊழியர்கள் என்று பலருக்கும் அதில் தொடர்புள்ளது. இவர்களில் ஒரு பிரிவினர் தோல்வி அடைந்தாலும் நீதி வழங்குவது பாதிக்கப்படும்.

பல்வேறு தரப்பினருக்கும் பாலமாக இருந்து நீதி வழங்குவதில் துணை புரிபவர்கள் வழக்குரைஞர்கள். இந்தியாவில்தான் அதிக அளவில் வழக்குரைஞர்கள் உருவாகின்றனர். நம் நாட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குரைஞர்கள் 12 லட்சம் பேர் உள்ளனர்.

சட்டப் படிப்பு முடிக்கும் மாணவர்களில் ஆண்டுக்கு 60,000 முதல் 70,000 பேர் வரை வழக்குரைஞர் தொழிலுக்கு வருகின்றனர். கட்சிக்காரரின் பிரதிநிதியாக, நீதிமன்றத்தில் வழக்காடும் அலுவலராக, சட்ட ரீதியாக கவுன்சிலிங் வழங்குபவராக என்று பல்வேறு வகைகளில் வழக்குரைஞர்களுக்கு அனுபவம் கிடைக்கிறது.

பணம் சம்பாதிப்பது, கட்சிக்காரர் விரும்பிய தீர்ப்பைப் பெற்றுத் தருவது என்பதைக் கடந்து, நீதியைப் பாதுகாப்பதுதான் வழக்குரைஞர் தொழிலின் நோக்கமாகும். மாதத்தில் இரண்டு பேருக்காவது இலவச சட்ட உதவி வழங்க இளம் வழக்குரைஞர்கள் முன்வர வேண்டும். உலகமயமாக்கல் கொள்கைகளால் வழக்குரைஞர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அதைப் பயன்படுத்திக் கொள்ள, தங்கள் தகுதிகளை வழக்குரைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். வழக்குரைஞர்களும், வழக்குரைஞர் சங்கங்களும் தங்கள் தொழில் நெறிமுறைகளை மீறாமல் செயல்பட வேண்டும் என்று சதாசிவம் கூறினார்.

தீர்ப்புகளில் திருக்குறள் பயன்படுத்தப்படுமா?

"எனக்குத் தமிழும், திருக்குறளும் பிடிக்கும். அதற்காக உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் திருக்குறளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை' என்று தலைமை நீதிபதி பி. சதாசிவம் விளக்கம் அளித்தார்.

விழாவில் பேசிய பலரும் நீதித் துறை சார்ந்த யோசனைகளையும், கருத்துகளையும் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, ஏற்புரையாற்றிய நீதிபதி சதாசிவம், ""நீதிபதிகளை நியமிக்கும் போது பார் கவுன்சிலை கலந்தாலோசிக்க வேண்டும் என்று சிலர் கேட்டுக் கொண்டுள்ளனர். நீதிபதிகளை நியமிக்க விதிமுறைகள் உள்ளன. அதற்குத் தக்கபடி பார் கவுன்சிலிடம் இருந்து கூடுதலாக எந்தெந்த உதவியைப் பெற முடியுமா அதை பெறுவேன்.

நான் தமிழ்நாட்டில் இருந்து இப்பொறுப்புக்கு வந்திருப்பதால், தீர்ப்புகளில் திருக்குறளைப் பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத் தலைவர் எம்.என். கிருஷ்ணமணி யோசனை தெரிவித்தார். எனக்குத் தமிழும், திருக்குறளும் பிடிக்கும். அதற்காக உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் திருக்குறளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.