

பலாசூர் (ஒடிசா): நாட்டில் பிற மாநிலங்களைவிட பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்கள் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஒடிசா மாநிலம், பலாசூர் நகரில் இன்று நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
கடந்த 60 ஆண்டுகளாக வறுமையை விரட்டுவோம் என முழக்கமிட்டு வருகிறார்கள் (முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை மறைமுகமாக குறிப்பிட்டார்). முழக்கத்தின் நோக்கம் உண்மையாகத்தான் இருந்தது. ஆனால், வறுமையை விரட்டுவதற்கு தேர்ந்தெடுத்த பாதைதான் சரியில்லை.
மத்தியில் ஆளும் பாஜக அரசு பணக்காரர்களுக்கானது அல்ல. ஏழைக்களுக்கானது. வறுமையை ஒழிப்பதற்கு அறிவியல் பூர்வமான வழிமுறைகளை கையாள வேண்டும். இல்லையேல் அது தொடரும்.
நாட்டின் கிழக்குப் பகுதிகள் ஏராளமான இயற்கை வளங்களால் நிறைந்திருந்த போதும் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஏழைகளாகவே உள்ளனர். மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் ஏழைகளுக்கானதுதான். கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
பாஜகவின் தொண்டன் என்ற முறையில் என்னுடைய ஒரே மந்திரம் வளர்ச்சித்தான். நாட்டில் பிற மாநிலங்களைவிட பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்கள் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.
தில்லியில் குளிரூரட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு ஆட்சி செய்வதாக குறை கூறும் எதிர்க்கட்சிகள் இந்த ஏவுகணை நகரில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கூடியிருக்கும் மக்கள் குறித்து நினைத்துப் பார்க்க வேண்டும்.
'பிரதான் சேவாக்' என்ற திட்டத்தின் கீழ் அரசு சார்பில் செலவழிக்கப்படும் அனைத்து காசுகளுக்கும் கணக்கு காட்டப்படுகிறது. கடந்த 70 ஆண்டு கால ஆட்சியில் இதுபோன்று நடைபெற்றதுண்டா?
ஒடிசா மக்கள் அரசியல் மாற்றத்தை உண்டாக்க வேண்டும் என்றார் மோடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.