ஹமீது அன்சாரி வரும் 24-இல் ஆர்மீனியா, போலந்துக்கு பயணம்

குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வரும் திங்கள்கிழமை (ஏப். 24) ஆர்மீனியா, போலந்து ஆகிய இரு நாடுகளுக்கு பயணம் தொடங்குகிறார்.
Published on

புது தில்லி: குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வரும் திங்கள்கிழமை (ஏப். 24) ஆர்மீனியா, போலந்து ஆகிய இரு நாடுகளுக்கு பயணம் தொடங்குகிறார்.
இதுதொடர்பாக, தில்லியில் வெளியுறவுத் துறைச் செயலர் பிரீத்தி சரண் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஆர்மீனியா, போலந்து ஆகிய இரு நாடுகளில் வரும் திங்கள்கிழமை (ஏப். 24) முதல் 5 நாள்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
முதல்கட்டமாக, தில்லியிலிருந்து ஆர்மீனியா செல்லும் அவர் புதன்கிழமை (ஏப். 26) வரை அங்கு தங்கியிருப்பார். அப்போது அந்நாட்டின் அதிபர், பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர் உள்ளிட்டோருடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக விவாதிப்பார்.
தொடர்ந்து யேரேவன் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், ஆசிரியர்களுடன் அவர் கலந்துரையாடுவார். பின்னர், அவர் போலந்துக்கு பயணம் மேற்கொள்வார். அங்கு அந்நாட்டின் அதிபர், பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசுவார்.
ஹமீது அன்சாரியுடன் அவருடைய மனைவி சல்மா அன்சாரி, மத்திய சிறு - குறு - நடுத்தர தொழில்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், எம்.பி.க்கள் சீதாராம் யெச்சூரி, டி.பி.திரிபாடி உள்ளிட்டோரும் உடன் செல்கின்றனர் என்றார் பிரீத்தி சரண்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com