புது தில்லி: சுதந்திர இந்தியாவில் பிறந்து குடியரசுத் துணைத் தலைவராகியிருக்கும் முதல்வர் நபர் வெங்கய்ய நாயுடு என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அதாவது, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்த நபர் ஒருவர் முதல் முறையாக குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். அதே போல, நரேந்திர மோடியும், சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக இருந்தவர்களின் பட்டியல்...
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
சாகீர் ஹுசைன்
வரதகிரி வெங்கட்ட கிரி
கோபால் சுவரூப் பதக்
பசப்பா தனப்பா சாத்தி
முகம்மது இதயத் உல்லா
இராமசாமி வெங்கட்ராமன்
சங்கர் தயாள் சர்மா
கோச்செரில் ராமன் நாராயணன்
கிருஷ்ண காந்த்
பைரோன் சிங் செகாவத்
முகம்மது அமீது அன்சாரி
வெங்கய்ய நாயுடு
குடியரசுத் துணைத் தலைவராக வெங்கய்யா நாயுடு இன்று உதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து, புதிய குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட வெங்கய்ய நாயுடு இன்று பதவியேற்றுக் கொண்டார்.
புது தில்லியில் வெகு விமரிசையாக நடைபெற்ற விழாவில், பட்டுவேட்டி, பட்டு சட்டை, அங்கவஸ்திரம் அணிந்திருந்த வெங்கய்ய நாயுடு, குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.
இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி மற்றும் பாஜக மூத்த தலைவர் அத்வானி, தேசியத் தலைவர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்படி பழனிசாமி உட்பட பல மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.