வரி ஏய்ப்பு செய்ததாக குஜராத்தைச் சேர்ந்த சந்தேசரா குழுமத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலின் மகன், மருமகன் ஆகியோரிடம் அமலாக்கத் துறை விரைவில் விசாரணை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத்தைச் சேர்ந்த சந்தேசரா குழுமத்துக்கு வரி ஏய்ப்பு செய்ததாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய விசாரணை அமைப்புகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
பொதுத் துறை வங்கிகளில் ரூ.5000 கோடிக்கும் அதிகமாக கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தவில்லை என்றும் அந்தக் குழுமத்துக்கு எதிராக சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில் அந்த நிறுவன ஊழியர் சுனில் யாதவ் என்பவரிடம் அமலாக்கத் துறை அண்மையில் விசாரணை நடத்தியது. அப்போது, அவர் அளித்த வாக்குமூலத்தில், 'சந்தேசரா குழுமத்தின் தலைவர் சேத்தன் சந்தேசராவும், அண்மையில் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட தில்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ககான் தவானும் அகமது படேலின் மருமகன் இல்லத்துக்குச் சென்ற பை நிறைய நிரப்பப்பட்ட பணத்தைக் கொடுப்பார்கள்.
இதுபோல் 4-இல் இருந்து 5 முறை நடைபெற்றிருக்கிறது. அப்போது, அவர்களுடன் நானும் இருந்தேன். ரூ.15 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை ரொக்கம் கொடுக்கப்பட்டிருக்கும் என்று கருதுகிறேன். தில்லியில் கான் சந்தை பகுதியில் அகமது படேல் மகனின் கார் ஓட்டுநருக்கு ஒரு முறை பை நிறைய பணம் கொடுக்கப்பட்டது' என்று சுனில் யாதவ் தெரிவித்தார்.
இவரது வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் இருவரிடமும் அமலாக்கத் துறை விரைவில் விசாரணை நடத்தும் என்று தெரிகிறது.
இதுதொடர்பாக விளக்கம் கேட்க அகமது படேலை தொடர்புகொள்ள செய்தியாளர்கள் முயற்சி செய்தனர். ஆனால், அவர் அழைப்பை ஏற்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.