ராணுவ வீரர்களை பூட்ஸ், காலணிகளுக்கு பாலீஷ் போட மேலதிகாரிகள் துன்புறுத்தும் வீடியோ காட்சி!

ராணுவ உயரதிகாரிகள் தங்களின் பூட்ஸ்களுக்கு பாலீஷ் போடச் சொல்லி வீரர்களை துன்புறுத்துவதாக மேலும் ஒரு ராணுவ வீரரின் புகார்
ராணுவ வீரர்களை பூட்ஸ், காலணிகளுக்கு பாலீஷ் போட மேலதிகாரிகள் துன்புறுத்தும் வீடியோ காட்சி!
Updated on
2 min read

புதுதில்லி: ராணுவ உயரதிகாரிகள் தங்களின் பூட்ஸ்களுக்கு பாலீஷ் போடச் சொல்லி வீரர்களை துன்புறுத்துவதாக மேலும் ஒரு ராணுவ வீரரின் புகார் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
சமூக வலைதளங்கள் மூலமாக தங்களது பிரச்சனைகளை ராணுவ வீரர்கள் பேசுவது தவறானது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பணிபுரியும் எல்லைப் பாதுகாப்பு படையின் 29-வது பட்டாலியனை சேர்ந்த தேத் பதூர் யாதவ் என்ற வீரர், எல்லை பாதுகாப்பு படையில் மோசமான உணவு வழங்கப்படுவதாகவும், சில நேரங்களில் வெறும் வயிற்றோடு படுக்க செல்வதாகவும் குற்றம்சாட்டியிருந்த வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், சமூக வலைதளங்கள் மூலமாக தங்களது பிரச்சனைகளை ராணுவ வீரர்கள் பேசுவது என்பது மிகவும் தவறானது என்று அவர்களது அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக துணை ராணுவத்தின் மூத்த கமாண்டே பிரசாத் கூறுகையில், சமூக வலை தளங்கள் மூலமாக பேசுவது ஆரோக்கியமானது அல்ல மற்றும் சரியானதும் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பணிபுரியும் இந்திய ராணுவத்தின் டேராடூன் 42-வது எல்லைப் பாதுகாப்பு படைப்பிரிவைச் சேர்ந்த லான்ஸ் நாயக் யாக்யா பிரதாப் சிங் வீரரின் குற்றச்சாட்டு வீடியோ செய்தி சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
வீரரின் குற்றச்சாட்டு வீடியோ காட்சியில், கடைநிலை வீரர்களை ராணுவ மேலதிகாரிகள் தங்களின் பூட்ஸ், காலணிகளுக்கு பாலீஷ் போட வேண்டும் என்று துன்புறுத்துவதாகவும், இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் உச்சநீதிமன்றத்துக்கு கடந்த ஜூன் மாதம் பிரதாப் சிங் கடிதம் எழுதி இருந்தார்.
இந்த கடிதத்தின் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு டேராடூன் 42-வது படைப்பிரிவுக்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பி இருந்தது.
அந்த கடிதத்தின்மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, தன்னை கொடுமைப்படுத்தி, தற்கொலை செய்துகொள்ளும் மனநிலைக்கு மேலதிகாரிகள் தொல்லை கொடுத்து வருவதாக தனது வீடியோ செய்தியில் லேன்ஸ் நாயக் யாக்யா பிரதாப் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
எந்த தவறும் செய்யாத தன்மீது ராணுவ நீதிமன்றம் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் இதுவரை இரண்டு வீடியோ குற்றச்சாட்டுகள் வெளியாகி உள்ளன.
ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினருக்கு அளிக்கப்படும் ஊதியம் மற்றும் சலுகைகளை பெற லஞ்சம் பெறப்படுவதாக சிஆர்பிஎப் கான்ஸ்டபிள் ஒருவர் குற்றச்சாட்டிய வீடியோ பதிவு. ஜம்மூ-காஷ்மீர் எல்லையில் பனித் தட்பவெப்ப நிலையிலும் பாதுகாப்பு படையினருக்கு மோசமான தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், சில நேரங்களில் வெறும் வயிற்றோடு படுக்க செல்வதாகவும் குற்றம்சாட்டியிருந்த வீடியோ புகார்.
படை வீரர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக வழங்கப்படும் பொருட்களை மேலதிகாரிகள் ஏமாற்றி வெளிச்சந்தையில் விற்பனை செய்வதாக அப்பகுதியை சேர்ந்த கிராமமக்கள் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com