குடியரசுத் தலைவர் தேர்தல்: பிளவுபடுத்தும் அரசியலுக்கு எதிரான போராட்டம்: சோனியா காந்தி

குடியரசுத் தலைவர் பதவிக்கு நடைபெறவிருக்கும் தேர்தலை குறுகிய, பிளவுபடுத்துதல் மற்றும் மதவாத அரசியலுக்கு எதிரான போராட்டம் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல்: பிளவுபடுத்தும் அரசியலுக்கு எதிரான போராட்டம்: சோனியா காந்தி
Published on
Updated on
1 min read

குடியரசுத் தலைவர் பதவிக்கு நடைபெறவிருக்கும் தேர்தலை குறுகிய, பிளவுபடுத்துதல் மற்றும் மதவாத அரசியலுக்கு எதிரான போராட்டம் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், இதுதொடர்பாக அவர் பேசியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தல், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகியவைகளில் வெற்றி பெறத் தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை வேண்டுமானால், நமக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்த போராட்டத்தில் நாம் நிச்சயம் போராட வேண்டும். அதுவும் தீவிரமாக போராட வேண்டும்.
குறுகிய மனப்பாங்கு, பிளவுபடுத்துதல், மதவாத அரசியலை திணிக்க விரும்புவோரிடம், இந்தியாவை பிணையாக நாம் ஒப்படைக்கக் கூடாது. நாம் யார்? சுதந்திரப் போராட்ட காலத்தில் நாம் எதற்காக போராடினோம்? நமக்கு எத்தகைய எதிர்காலம் வேண்டும்? என்பதை அறிந்துகொண்டு, அவர்களை நாம் தீவிரமாக எதிர்க்க வேண்டும். நமது கொள்கைகள் மீது நமக்கு நம்பிக்கை வேண்டும். இந்தத் தேர்தலானது (குடியரசுத் தலைவர் தேர்தல்), சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதலாகும். வேறுபட்ட கொள்கைகளுக்கு இடையேயான யுத்தமாகும்.
மகாத்மா காந்தி மற்றும் பிற சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் இணைந்து ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் போராடி நமக்கு பெற்றுத் தந்த இந்தியாவை பாதுகாப்பதற்கு, இந்தத் தேர்தலில் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இங்கு வந்துள்ள பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் பதவிகளுக்கானத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் மீரா குமார், கோபால கிருஷ்ண காந்தி ஆகியோருக்கு ஆதரவு அளிப்பதிலிருந்து, அனைவரையும் உள்ளடக்கிய, சகிப்புத் தன்மை கொண்ட, பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை முன்னெடுத்துச் செல்வது சாத்தியம் என்பதை ஊர்ஜிதப்படுத்தியுள்ளன என்று சோனியா காந்தி கூறினார்.
குடியரசுத் தலைவர் பதவிக்கு திங்கள்கிழமையும், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு ஆகஸ்ட் மாதம் 5}ஆம் தேதியும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசுத் தலைவர் பதவி தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மீரா குமாரும், குடியரசு துணைத் தலைவர் பதவி தேர்தலுக்கான வேட்பாளராக கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிடுகின்றனர். அவர்களும் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எதிர்க்கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com