குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: வெங்கய்ய நாயுடு, கோபாலகிருஷ்ண காந்தி வேட்பு மனு தாக்கல்

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர்
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில்  போட்டியிடும் வெங்கய்ய நாயுடு நாடாளுமன்ற அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்கிறார்.
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் வெங்கய்ய நாயுடு நாடாளுமன்ற அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்கிறார்.
Updated on
2 min read

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு செவ்வாய்க்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தில்லியில் உள்ள நாடாளுமன்றக வளாகத்தில் தனது வேட்பு மனுவை வெங்கய்ய நாயுடு தாக்கல் செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் சிவசேனை உள்ளிட்ட பாஜக கூட்டணி கட்சிகள் தலைவர்கள், அதிமுக, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிகளின் தலைவர்களும் உடன் வந்திருந்தனர்.
வெங்கய்ய நாயுடுவின் மனுவை பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவர்கள் பலரும் முன்மொழிந்திருந்தனர்.
வாஜ்பாய், அத்வானியிடம் ஆசி: முன்னதாக, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு பாஜக மூத்த தலைவர்கள் அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை அவர்களது வீடுகளுக்குச் சென்று வெங்கய்ய நாயுடு நேரில் சந்தித்து அவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்றார்.
இதேபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லாத பிற கட்சிகளின் தலைவர்களையும் அவர் சந்தித்தார்.
இந்தத் தகவலை சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் பதவி ராஜிநாமா: இதனிடையே, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கானத் தேர்தலில் போட்டியிட ஏதுவாக, மத்திய அமைச்சரவையில் தாம் வகித்து வந்த மத்திய நகர்ப்புற மேம்பாடு, தகவல், ஒளிபரப்புத் துறை அமைச்சர் பதவியை வெங்கய்ய நாயுடு திங்கள்கிழமை இரவு ராஜிநாமா செய்தார்.
இதேபோல், பாஜகவில் இருந்தும் வெங்கய்ய நாயுடு விலகி விட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி போட்டியிடுகிறார்.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக ஆட்சிமன்ற குழுக் கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக வெங்கய்ய நாயுடு தேர்வு செய்யப்பட்டார்.

 தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்கிறார் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி. உடன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com