லண்டனில் தஞ்சமடைந்துள்ள கிங் ஃபிஷர் விமான நிறுவனர் விஜய் மல்லையாவுக்கு எதிராக குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்வதற்காக, அமலாக்கத் துறை அதிகாரிகள் லண்டன் விரைந்துள்ளனர்.
இதுதொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர், தில்லியில் புதன்கிழமை கூறியதாவது:
சட்ட ஆலோசகர் ஒருவர் உள்பட 2 பேரைக் கொண்ட அமலாக்கத் துறைக் குழுவினர் இரண்டு நாள் பயணமாக திங்கள்கிழமை இரவு லண்டன் விரைந்தனர்.
மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியாக, அவருக்கு எதிராக, 5,500 பக்க குற்றப்பத்திரிகையை, லண்டனில் உள்ள கிரெளன் நீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்யவுள்ளனர். பிறகு அவர்கள் வியாழக்கிழமை தில்லி திரும்புகின்றனர். அந்தக் குற்றப்பத்திரிகையில், ஐடிபிஐ வங்கியில் இருந்து கடனாகப் பெற்ற ரூ.900 கோடியை பல்வேறு நிழல் நிறுவனங்கள் மூலமாக, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள தனது நிறுவனங்களுக்கு மல்லையா எப்படி மாற்றினார்? என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன என்றார்.
அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் ஐடிபிஐ கடன் ஏய்ப்பு வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகளும் லண்டன் சென்றுள்ளனர்.
இந்தியாவில் பல்வேறு பொதுத் துறை வங்கிகளில் ரூ.8,191 கோடி வரை கடன் வாங்கிவிட்டு, அதைத் திருப்பிச் செலுத்தாத விஜய் மல்லையா, கடந்த ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் தஞ்சம் அடைந்தார்.
அதையடுத்து, அவருக்கு எதிராக 17 வங்கிகள் நீதிமன்றத்தின் உதவியை நாடின. கடன் ஏய்ப்பு, நிதி மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் சிபிஐயும், அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கின. மேலும், அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளும் நடைபெற்றன.
இந்நிலையில், மல்லையாவுக்கு எதிரான வழக்குகளில் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக, அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு நிகழாண்டு பிப்ரவரி மாதம், பிரிட்டன் அரசிடம் முறையாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனிடையே, லண்டனில் ஸ்காட்லாந்து போலீஸாரால் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட மல்லையா சில மணி நேரத்தில் பிணையில் வெளியே வந்தார். மல்லையா நேரில் ஆஜராகாமல் அவருக்கு எதிரான வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறையினர் லண்டன் விரைந்துள்ளனர்.