/

குஜராத் வெள்ளம்: அகமதாபாத் விமான நிலையத்தின் ஓடுபாதை சேதம்; இரு விமானங்கள் மும்பை விமான நிலையத்திற்கு மாற்றம்

குஜராத்தில் மழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அகமதாபாத் விமான நிலையத்தின் விமான ஓடுபாதை சேதமடைந்துள்ளது. 

News image
Updated On :26 ஜூலை 2017, 3:57 am

DIN

அகமதாபாத்: குஜராத்தில் மழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அகமதாபாத் விமான நிலையத்தின் விமான ஓடுபாதை சேதமடைந்துள்ளது.  இதனால் அகமதாபாத்துக்கு வரும் இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் மும்பை விமான நிலையத்திற்கு மாற்றி விடப்பட்டது.

குஜராத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. மழை, வெள்ளத்தில் சிக்கியும், வீடு இடிந்து விழுந்தும், இடி, மின்னல் தாக்கியும் இதுவரை 70 பேர் உயிரிழந்துவிட்டனர். 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்கள் தாற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பனாஸ்கந்த் மாவட்டம் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் முதல்வர் விஜய் ரூபனி நேற்று காலை நாடாளுமன்ற இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து மாநிலத்தின் சில பகுதிகளில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளையும், சேதங்கள் குறித்து விரிவாக தெரிவித்தார்.

இதையடுத்து குஜராத் மாநிலத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய முடிவு செய்த மோடி, தனது சொந்த மாநிலமான குஜராத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் சென்று நேற்று செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.

வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். இது தவிர மத்திய அரசு மாநில பேரிடர் மேலாண்மைத் துறைக்கு ரூ.500 கோடி வழங்கும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.

மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பானஸ்கந்த் மாவட்டத்தில் ராணுவம் மற்றும் விமானப்படையினரின் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுளளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.