லக்னௌ: உத்தரப்பிதேச மாநிலம் பரேலி அருகே டிரக் மீது பேருந்து மோதி தீப்பிடித்ததில் பலியான 22 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்த கோர விபத்தில் காயமடைந்த 15 பேருக்கு மருத்துவ செலவுக்காக தலா ரூ.50 ஆயிரமும் அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்த இந்த விபத்து நெஞ்சை கனக்கச் செய்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக பிரார்த்தித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புது தில்லியில் இருந்து கோண்டா நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, லக்னௌவில் இருந்து வந்து கொண்டிருந்த டிரக்குடன் இன்று அதிகாலை 2.30 மணியளவில் நேருக்கு நேர் மோதியது.
இரண்டு வாகனங்களும் மோதிய வேகத்தில் பயங்கர வெடி சத்தத்துடன் பெட்ரோல் டேங்குகள் வெடித்ததில் இரண்டு வாகனங்களிலும் தீ பரவி, பேருந்தில் இருந்த 22 பேர் உடல் கருகி பலியாகினர். 15 பேர் காயமடைந்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பலர் படுகாயம் அடைந்திருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த விபத்தில் டிரக் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.