நாட்டுக்காக குஜராத் மாநிலத்தவர் யாரேனும் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனரா? என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வியெழுப்பியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை கூறியதாவது:
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், தென்னிந்தியா மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த வீரர்கள், நாட்டுக்காக தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இதுபோல், குஜராத் மாநிலத்தவர் யாரேனும் உயிரைத் தியாகம் செய்துள்ளனரா? என்று தெரிவிக்க முடியுமா?
தேசியவாதம், வந்தே மாதரம், தியாகிகள் பெயரில் அவர்கள் அரசியல் செய்கின்றனர். தேசியவாதத்துக்கு அவர்கள் கொடுக்கும் விளக்கம் என்ன? நம்மை அவர்கள் ஹிந்துக்களாகக் கூட நினைப்பதில்லை என்று அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டார்.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையிலேயே இந்த கருத்துகளை அகிலேஷ் யாதவ் வெளியிட்டிருந்தார். அவரது இந்த கருத்துகள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவரின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உத்தரப் பிரதேச துணை முதல்வரும், மாநில பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான கேசவ் பிரசாத் மௌரியா கூறியதாவது:
அவரது பேச்சு, அரசியல் ஆகியவற்றை உத்தரப் பிரதேச மக்கள் ஏற்கெனவே நிராகரித்து விட்டனர். இதனால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகத்தான், இதுபோன்ற கருத்துகளை அவர் வெளியிட்டு வருகிறார்.
அகிலேஷ் யாதவ் தேவையில்லாத கருத்துகளை வெளியிட்டுள்ளார். நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்யும் அனைவரையும் இந்தியர்கள் என்ற கண்ணோட்டத்தில்தான் முதலில் பார்க்க வேண்டும் என்றார் மௌரியா.