தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். அணி மீண்டும் பிரமாண பத்திரங்கள் தாக்கல்
அதிமுக தலைமைக்கு உரிமை கோரி தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் சுமார் ஒன்றரை லட்சம் பக்கங்கள் அடங்கிய பிரமாண பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் திங்கள்கிழமை தாக்கல்


அதிமுக தலைமைக்கு உரிமை கோரி தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் சுமார் ஒன்றரை லட்சம் பக்கங்கள் அடங்கிய பிரமாண பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலாவின் தலைமைக்கு எதிராக அக்கட்சியின் பொருளாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் திரும்பினார். அவரது அணியில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர் முனுசாமி, மக்களவை, மாநிலங்களவையில் உள்ள 12 அதிமுக எம்.பி.க்கள், 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் சேர்ந்தனர். இதையடுத்து கட்சித் தலைமைக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் பன்னீர்செல்வம் தரப்பு முறையிட்டது. இதேபோல, சசிகலா தலைமையை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சார்பில் பெரும்பான்மை அதிமுக நிர்வாகிகள் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.
இதையடுத்து அதிமுகவில் இரு பிரிவுகள் உள்ளதாகக் கருதிய தலைமைத் தேர்தல் ஆணையம், அதிமுக பெயரை இரு பிரிவினரும் பயன்படுத்தக் கூடாது; இந்த விவகாரத்தில் தீர்வு காணப்படும்வரை சசிகலா தரப்பு "அதிமுக அம்மா' கட்சி என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு "அதிமுக புரட்சித் தலைவி அம்மா' கட்சி என்றும் அழைக்கப்படும் என்று அறிவித்தது.
இதையடுத்து இரு தரப்பினரும் தங்கள் தலைமைக்கான ஆதரவை நிரூபிக்கக் கூடிய ஆதாரங்களை தாக்கல் செய்ய, ஜூன் இரண்டாவது வாரம் வரை தேர்தல் ஆணையம் அவகாசம் அளித்தது.
இதன்படி, சசிகலா தரப்பில் மாவட்ட, வட்ட அளவில் உள்ள கட்சி நிர்வாகிகள், அடிப்படைத் தொண்டர்கள் ஆதரவு தெரிவிக்கும் கடிதங்களுடன் கூடிய 12 ஆயிரத்து 700 பிரமாண பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட நடவடிக்கையில் கட்சி விதிகள் மீறப்படவில்லை என்பதை விளக்கும் ஆதாரங்கள் தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன.
இதேபோல, பன்னீர்செல்வம் ஆதரவு அணியினர் அவரது தலைமையை ஆதரித்து, இரு முறை பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து திங்கள்கிழமை (மே 29) மூன்றாவது முறையாக லட்சக்கணக்கான பக்கங்கள் அடங்கிய பிரமாண பத்திரங்களை பன்னீர்செல்வம் ஆதரவு அணியினர் தாக்கல் செய்தனர். மாநிலங்களவை அதிமுக முன்னாள் உறுப்பினரும் வழக்குரைஞருமான மனோஜ் பாண்டியன், பாபு முருகவேல் ஆகியோர் இந்த ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர்.
இதேபோல, சசிகலா தரப்பு ஆதரவை நிரூபிக்கும் வகையில், லட்சக்கணக்கான ஆதரவாளர்களின் கையெழுத்துகளுடன் கூடிய பிரமாண பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அதிமுக அம்மா கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...